Wednesday, October 11, 2017

”நான் பெண்மக்களின் தந்தை!”

Yembal Thajammul Mohammad
*******************************************************************************
“நான் பெண்மக்களின் தந்தை என்பதில் பெருமைகொள்கிறேன்” என்பது அண்ணல் நபி(ஸல்)அவர்களின் பெருமிதப் பிரகடனம்.
*******************************************************************************
அன்னையவர் காலடியில்
அடையஅரும் சொர்க்கத்தை
முன்னிறுத்திக் காட்டியஎம்
முஹம்மதுவே, நாயகமே! ................1
உற்றாரில் உறவினரில்
ஊருலகில் தாய்தானே
முற்றமுதற் சுற்றமென
முன்மொழிந்த நாயகமே! ……….…..2

‘பெண்மகவைப் பெற்றதுடன்
பேணிவளர்த்(து) ஆளாக்கும்
புண்ணியத்தார் சொர்க்கம்
புகுவர்’என்ற நாயகமே! ................3
பெண்ணிற்கும் கல்வி
பெறுவதொரு கடமையென
மண்ணுலகில் முன்னுரைத்த
மாமணியே, நாயகமே! …………..…4
விதவையென வேமக்கள்
வெறுப்பவரை அன்னையராய்
மதிப்பளிக்கச் செய்தபுது
மாண்பாளர் நாயகமே! ………..…....5
அமல்களுக்கு நற்கூலி
ஆணெனினும் பெண்ணெனினும்
சமம்என்ற வரலாற்றைச்
சாதித்த நாயகமே! ………………..….6
மண்ணிற் புதைத்தவர்க்கு
மத்தியிலே, ‘ நான்தந்தை
பெண்மக்க ளுக்’கென்றே
பெருமைகொண்ட நாயகமே! ……….7
---ஏம்பல் தஜம்முல் முகம்மது.
*******************************************************************************

Yembal Thajammul Mohammad 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails