Thursday, July 13, 2017

நிலையானவனே, நிலைமைகளை மேம்படுத்திச் சமுதாயத்திற்கு நிம்மதியை அருள் செய்வாய்...

இறைவா,
இன்னமைதி (இஸ்லாம்)மார்க்கத்தை எல்லாருக்கும் பொதுமைப்படுத்திப் பூரித்தாய்....
பகைவருக்கும் அருளாய்த் திகழும் பண்பாளரை -அண்ணல்நபி(ஸல்) அவர்களை-அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாய் அளித்து உவந்தாய்...
நாநிலத்தாருக்கொரு நல்லுபதேசமாய் இறுதித் திருமறையாகப் புனிதக் குர்ஆனைக் கொடுத்துப் புகழுற்றாய்...
மனிதனுக்குப் பகுத்தறிவும் சுதந்திரமும் கொடுத்து அவனை மாண்புமிகு மனிதனாக்கினாய்....

நாநிலமெங்கும் உன் நல்லடியார்களைக் கொண்டும் நல்லறிஞர்களைக் கொண்டும் அலங்கரித்தாய்....
நீ எல்லா இன்னருளும் செய்கிறாய்...
இந்த மனிதர்களுக்கு வந்த கேடென்ன....?
வரங்களை வாங்க வந்த இடத்தில் சாபங்களைக் கொள்முதல் செய்கின்றனர்?
கருவூலங்களைக் கைக்கொள மறுத்துப் பிச்சை எடுப்பதில் பெருமை கொள்கின்றனர்....?
சகோதரத்துவம் போற்ற மறுத்துப் பங்காளிச் சண்டைக்குப் பரணிபாடுகின்றனர்...?
இறைவா, காலங்காலமாய் உன்னருள் கொண்டு ஷைத்தான்களிடமிருந்து கூட பாதுகாக்கப்பட்டுள்ளோம்...
பகைவர்கள் எங்களைக் கொன்றாலும் உன்னருளால் நாங்கள் வெற்றியாளர்களே என்பதில் உறுதி கொண்டுள்ளோம்...
என்றாலும் இறைவா,
இந்தக் கிறுக்கு வெறிபிடித்த அதிசய இயக்கவாதிகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் சமுதாயம் தத்தளிக்கிறது...
நிலையானவனே,
நிலைமைகளை மேம்படுத்திச் சமுதாயத்திற்கு நிம்மதியை அருள் செய்வாய்...


Yembal Thajammul Mohammad

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails