Monday, May 8, 2017

கீறிக் கிழிக்கும் அறுவை சிகிச்சைக்கு வித்திட்ட இஸ்லாம்


      முஹம்மத் பகீஹுத்தீன்    

மருத்துவ துறையில் முஸ்லிம்கள்

மருத்துவத் துறைக்குப் பங்காற்றிய அறிஞர்கள்

மருத்துவ துறையை ஊக்குவித்த இஸ்லாம்

மருத்துவத் துறையில் பெண்கள்

பெண்கள் ஆண்களுக்கு சிகிச்சையளித்தல்

சத்திர சிகிச்கைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

மருத்துவம் வெறும் உடம்புக்கு மாத்திரம் அல்ல

படைப்பினங்களில் மாற்றம் செய்தல்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

கீறிக் கிழிக்கும்  அறுவை சிகிச்சைக்கு  வித்திட்ட இஸ்லாம்

      முஹம்மத் பகீஹுத்தீன்    



இஸ்லாமிய நாகரிகம் ஆன்மாவை கவனிப்பது போலவே உடம்பையும் கண்ணுக்கு இமை போல் காத்து நிற்கும். இஸ்லாம் உடல் அறிவு, ஆன்மா ஆகிய மூன்று பகுதிகளிலும் சமநிலை பேணுகிறது. எனவே உடம்பை பாதுகாப்பதில் இஸ்லாம் முக்கிய கவனம் செலுத்துகிறது. காரணம் சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது.

மருத்துவத்துறையை முன்னிலைப் படுத்தி பேசுவற்து காரணம் இன்று மருத்துவ வளர்ச்சியின் விளைவுகள் குறித்தும், மருத்துவ முறைமைகள் குறித்தும் குறிப்பாக கீறிக் கிழித்து உயிரைப் பாதுகாக்கும் சத்திரசிகிச்சை குறித்தும் அபத்தமான கூற்றுக்களை சிலர் பரப்புரை செய்து வருகின்றனர். அது தொடர்பான காணொலிகள் சமூக வளைதளங்களில் சுற்றிவருவதையும் அவதானிக்க முடிகிறது.

அதற்கு ஆதராமாக அவர்கள் 'அல்லாஹ்வின் படைப்பினங்களில் அவர்கள் மாற்றம் செய்வார்கள்' என்ற ஸுரா நிஸாவில் வந்துள்ள 119ம் வசனத்தை கூறுகின்றனர். எனவே இது குறித்து பேசுவது காலத்தின் தேவை எனக் கருதியே இந்த ஆக்கத்தை முன்வைக்கின்றோம்.

மருத்துவ துறையில் முஸ்லிம்கள்

மருத்துவ துறையில் உலகமே இருட்டில் இருந்த போது அத்துரையை வளர்த்து அதில் கொடிகட்டிப் பறந்தவர்கள் முஸ்லிம்களே! நோய்க்கு மருந்து செய்யக் கூடாது என்று கிறிஸ்தவ உலகம் நம்பியிருந்த காலத்தில் இஸ்லாம் மருத்துவம் பற்றி பேசியது என்பது இங்க குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முழு ஐரோப்பாவும் நோயாளியை இறைவனால் சபிக்கப்பட்டவன் என்றும் தீண்டத்தகாதவன் என்றும் ஒதுக்கிய காலத்தில் முஸ்லிம்கள் நோயாளிகளுக்கு தனியறைகள் அமைத்து தனித்தனி தாதிகள் நியமித்து மிக உயர்ந்த மருத்துவ சேவையை வழங்கினர்.

இஸ்லாமிய உலகில் மருத்துவம் சேவையாகச் செய்யப்பட்டது. பணம் அறவிடுவதற்குப் பதிலாக குணமடைந்து வெளியேறுவோருக்கு பணம் வழங்கப்பட்டது. அப்போது முஸ்லிம்கள் மனித சமத்துவத்தை மருத்துவமனைகளிலும் எடுத்துக்காட்டி மகத்தான சேவை புரிந்தனர் என கலாநிதி முஸ்தபா ஸிபாஈ அவர்கள் தனது 'நமது நாகரிகத்தின் தலைசிறந்த படைப்புகள்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மருத்துவத் துறைக்குப் பங்காற்றிய அறிஞர்கள்

மருத்துவத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த முஸ்லிம் மருத்துவ மேதைகளுள் அர்ராஸி, இப்னு ஸீனா, இப்னு நபீஸ், அஸ்ஸஹ்ராவி, ஹுனைன் இப்னு இஸ்ஹாக் ஆகியோர் சிறப்புற்று விளங்கினர்.

அர்ராஸி: இவர் 12 பாகங்களை உள்ளடக்கிய பிரசித்தி பெற்ற நூலான அல்ஹாவி என்ற நூல் 'மருத்துவத்தின் கலைக்களஞ்சியம்' என போற்றப்படுகிறது. இதைப்போன்ற ஒரு பொய மருத்துவ நூல் இதுவரை உலகில் இல்லை என கருதப்படுகிறது. அர்ராஸி மகப்பேற்று மருத்துவம், பெண் மருத்துவம், கண் மருத்துவம், சத்திர சிகிச்சை போன்ற துறைகளிலும் திவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். அறுவைச் சிகிச்சையின் போது தையல் போடுவதற்காக முதன் முதலில் மிருகங்களின் குடல் இழைகளைப் பயன்படுத்தியதும் இவரேயாவார்.

அலி இப்னு ஸீனா: மருத்துவத் துறையில் அலி இப்னு ஸீனாவின் பங்களிப்பும் மகத்தானதாகும். அவர் எழுதிய 'மருத்துவ விதிகள்' என்ற நூல் மிகவும் பிரபல்யமானதாகும். இந்நூல் 17ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல்கலைகழக பாடப்புத்தகமாக இருந்தது.

மருத்துவ துறையை ஊக்குவித்த இஸ்லாம்

ஸஹீஹுல் புகாரியில் மாத்திரம் 'மருத்துவம்' என்ற அத்தியாயத்தில் சுமார் 30 ஹதீஸ்கள் மருத்துவம் பற்றி பேசுகிறது.

'நோய் வந்தால் மருந்து செய்யுங்கள்' என்றும் 'எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு' என்ற ஹதீஸும் 'நோய்க்கான மருந்து சரியாக அமைந்து விட்டால் அல்லாஹ்வின் உதவியால் குணமடைவான்' என்ற நபி மொழியும் மருத்துவத் துரையை ஊக்கப்படுத்திய நபி வாக்குகளாகும்.

மருத்துவத் துறையில் பெண்கள்

போர்க்களத்தில் பெண்கள் பல்வவேறு பணிகளை ஆற்றியுள்ளனர். உதாரணமாக, போர் வீரர்களுக்கு தண்ணீர் புகட்டுதல், கொல்லப்பட்டவர்களையும், காயமுற்றவர்களையும் களத்திலிருந்து அப்புறப்படுத்துதல், போர்க்கருவிகளை எடுத்துக்கொடுத்தல், படையினருக்கு உணவு தயாரித்தல், அடக்கம் செய்யக் குழிதோண்டுதல், கபனிட்டு அடக்கம் செய்தல், போர்வீரர்களுக்கு உற்சாகமூட்டல் என பல அரிய தொண்டாற்றினர்.

இவற்றில் போராளிகளில் காயப்படுவோருக்கு நீர்புகட்டுவதும் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதுமே அப்போதைய முதல் தரப்பணிகளாக விளங்கின. இந்த வகையில் ரபீதா என்ற ஸஹாபிப் பெண்மணி இஸ்லாத்தின் முதலாவது தாதியாகக் கருதப்படுகின்றார். இப்பெண்ணுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கந்தக் யுத்தத்தில் காயப்பட்டவர்களை கவனிப்பதற்காக இன்றைய நடமாடும் மருத்துவ மனையையொத்த பெரிய கூடாரமொன்றையே விஷேடமாக அமைத்துக் கொடுத்திருந்தார்கள். ரபீதா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு உதவுவதற்காக அவரது தலைமையில் பெண்கள் குழுவென்றும் கடமையில் ஈடுபட்டது.

றுபைஃ பின்த் முஅவ்விஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'நாம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு போராடிக் கொண்டும் போராளிகளுக்கு நீர் புகட்டிக் கொண்டும் இருந்தோம். அவர்களுக்கு மருத்துவம் செய்து கொண்டும் கொல்லப்பட்டவர்களையும் காயப்பட்டவர்களையும் மதீனாவுக்கு இடமாற்றிக் கொண்டும் இருந்தோம்' என அறிவித்துள்ள ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது.

உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ரஸுலுல்லாஹ்வின் காலத்தில் ஏழு யுத்தங்களில் கலந்து கொண்டார். இவர் நோயுற்றவர்களைக் கவனிப்பதிலும் தாகிப்போருக்குத் தண்ணீர் புகட்டுவதிலும் காயப்பட்டோருக்கு மருந்து கட்டுவதிலும் ஈடுபட்டார் என்ற செய்தியை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்.

இறைத் தூதரின் கண்காணிப்பிலும் பணிப்புரையின் பேரிலும் நடைபெற்ற சிகிச்சைகள் மருத்துவத்துறையை வளர்ப்பதற்கு அடிப்படையாக அமைந்தன. அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களுக்கு சிகிச்சை செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தது மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை ஒரு படி கூடுதலாகவே எடுத்துக் காட்டுகறிது.

பெண்கள் ஆண்களுக்கு சிகிச்சையளித்தல்

முதல் தாதியான ரபீதா ரளியல்லாஹு அன்ஹா அவகளிடம் காயப்பட்டிருந்த ஸஃத் இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சிகிச்சை செய்யுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையிட்டார்கள். அவ்வாறே ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அன்று மிகவும் பிரபல்யம் வாய்ந்த வைத்தியராக திகழ்ந்த ஹாரிஸ் பின் கலதா எனபவரிடம் சிகிச்சகை பெறுமாறு பணித்தார்கள். அப்போது ஹாரிஸ் இஸ்லாத்தை தழுவியிருக்கவில்லை. உங்களில் மிகச் சிறந்த வைத்தியர் யார் என்று கேள்வி கேட்டு மருத்துவம் பார்க்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ள செய்தியும் தபரானியில் பதிவாகியுள்ளது.

இந்தத் தூண்டுதல்களும் வழிகாட்டல்களும் முஸ்லிம்களை மருத்துவத்தில் கொடிகட்டி பறக்கவைத்தது. அவர்கள் மருத்துவத்துறைக்கு முன்னோடிகாளக மாறினர்.

சத்திர சிகிச்கைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

முற்கால குருதிவடிப்பு மருத்து முறையில் தொடங்கி பழுதனைடந்த உறுப்புக்களை அறுத்து அகற்றும் வகையி;ல் வளர்ந்து யோனி வழியாக சிறுநீர்ப்பை கற்களை வெளியேறறும் முறைமைக்கு உயர்ந்து சிதைந்த உறுப்புக்களை வடிவமைக்கு அழகியல் அறுவை சிகிச்சை வரை முஸ்லிம்கள் மருத்துவதில் முன்னோடிகளாக முன்னேறி வந்தார்கள்.

இத்துறையில் முஸ்லிம்கள் உச்ச நிலைக்கு வருவதற்கு அடிப்படைக்க காரணம் மனிதன் என்பவன் உடல், அறிவு, ஆன்மா ஆகிய முக்கூறுகளைக் கொண்ட ஒரு கலவை என்பதை புரிந்து அவற்றுக்கிடையில் சமநிலை பேணுவது கடமை என்ற இஸ்லாத்தின் கோட்பாட்டை மிகச்சரியாக அறிந்திருந்தார்கள்.

மருத்துவம் வெறும் உடம்புக்கு மாத்திரம் அல்ல

அத்துடன் உடம்புக்கான மருத்துவம் என்பது வெறும் உடல் உறுப்பு மாத்திரம் அல்ல அதற்கு அப்பால் உள்ளத்துடனும் அதனை இணைத்துப் பார்த்தார்கள். எனவே சிதைந்த உறுப்புக்களை வடிவமைப்பதிலும் அசிங்கமான தோற்றம் தரும் உருப்புக்களை மாற்றுவதிலும் அவர்கள் கவனம் எடுத்தார்கள். நோயை குணப்படுத்துவது போலவே இயல்பாக இருக்கும் அவையவங்கள், உறுப்புக்கள் அதன் அசலான தோற்றத்தில் இருப்பதை தான் மனித உள்ளம் விரும்பும். எனவே அவற்றை சரிசெய்வதும் அழகு படுத்துவதும் உருமாற்றம் அல்ல என்ற கருத்தை அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். எனவே பேரறிஞர் ராஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அழகியல் அறுவை சிகிச்சையில் முன்னேடியாக திகழ்ந்தார். இமாம் ராஸி மருத்துவ முன்னேடியாக இருந்த அதேசமயம் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களிலும் துறைபோனவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

படைப்பினங்களில் மாற்றம் செய்தல்

அல்லாஹ் படைத்த படைப்பினங்களின் ஒழுங்குகளில் மாற்றம் செய்வது சைத்தானிய செயல்களில் உள்ளவையாகும் என சூரா நிஸாவின் 118ம் வசனம் குறிப்பிடுகறிது. எனவே கீறிக் கிழிக்கும் சத்திர சிகிச்சை சைத்தானிய செயல்களில் உள்ளவை. அது சுத்த ஹராம் என சிலர் பாமரத்தனமாக தங்களது அறியாமையை வெளிப்படுத்துகின்றனர்.

சமூக இணைய தளங்களில் அபத்தமான முறையில் செப்பிய கருத்துக்கள் வலம் வருவதை அவதானிக்க முடிகிறது. எனவே இது பற்றி சில தெளிவுகளை நோக்குவது சிறந்தது எனக் கருதுகின்றோம்.

படைப்பினங்களின் ஒழுங்கில் மாற்றம் செய்தல் என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் இருவகையில் பொருள் கூறியுள்ளனர்.

ஒன்று: கருத்து ரீதியான பொருள். அதாவது அல்லாவுடைய தீனை மாற்றுதல், இயல்பாக இறைவன் எந்த நோக்கத்தில் ஒன்றை படைத்திருக்கின்றானோ அந்த இயல்புகளை மாற்றுதல், அல்லாஹ் ஏவியுள்ள கட்டளைகளுக்கு முறனாக செயற்படுதல் பேன்றன இதற்கு உதாரணமாக கூறலாம்.

இரண்டு: அல்லாஹ் படைத்தவற்றின் வடிவமைப்பில் மாற்றம் செய்தல். இதில் குறிப்பாக மிருகங்களுக்கு விதையடித்தல், பச்சை குத்துதல், புருவ முடிகளை களைதல், பற்களுக்கு இடையில் செயற்கையாக இடைவெளிகளை அமைத்தல், மிருகங்களின் காதுகளை துண்டித்தல், கண்களை பிடுங்குதுல் அல்லது தண்டனை என்ற வகையில் விதையடித்தல், கண்ணைப் பொட்டையாக்குதல், பிற முடிகளை இணைத்து சிகi அலங்காரம் செய்தல் போன்ற செயல்களை உதாராணமாக கூறலாம். இவையாவும் ஆரம்பகால அறிஞர்கள் இந்த வசனத்திற்கு கூறியுள்ள பொதுவான கருத்துக்களாகும்.

இது குறித்து மௌலானா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் விளக்கமளிக்கும் போது: இந்த வசனம் அல்லாஹ்வுடைய படைப்பினங்களின் வெளித்தோற்ற வடிவமைப்பில் மாற்றம் செய்வதையல்ல குறிப்பிடுகின்றது என்றும் இங்கு நாடப்படுவது அல்லாஹ் எந்த நோக்கத்திற்காக ஒன்றை படைத்திருக்கின்றானோ அந்த நோக்கததிற்கும் இயல்பிக்கும மாற்றமாக செயற்படுவதையே குறித்த அல்குர்ஆன் வசனம் சைத்தானிய கருமங்களாக குறிப்பிடுகின்றன என்றும் கூறுகிறார். அதற்கு உதாரணமாக ஓரிணச் சேர்க்கை இயற்கைக்கு மாறான பாலியல் புணர்ச்சி, துறவரம், பிரம்மச்சரியம், மலடாக்கும் செயற்பாடு, பெண்கள் அவர்களுக்கேயுரிய பிரத்தியேகமான பணிகளை செய்யாது விடல் அல்லது ஆண் பெண்ணின் பணிகளை செய்தல், பெண் ஆணுக்குரிய பணிகளை செய்தல் போன்றவையே அல்லாஹ்வுடைய படைப்பினங்களின் ஒழுங்கில் ஏற்படுத்தும் மாற்றங்களாகும் என விளக்கமளித்துள்ளார். இதுவே சைத்தானிய தூண்டுதல்களால் நடைபெறும் தீய கருமங்களாகும் என மௌதூதி சுட்டிக்காட்டுகிறார்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

அறிவயில் துறையின் வளர்ச்சியாக உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையயானது இந்த வசனத்துடன் மிகுந்த தொடர்புடையதாகும். இது குறித்து சர்வதேச இஸ்லாமிய சட்ட சபை 2007ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 18வது மாநாட்டில் மிகவும் தெளிவான சட்டத் தீர்ப்புக்களை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்களை சுருக்கமாக பின்வருமாறு நோக்கலாம்.

1) செயலிழந்த உறுப்புக்களை மீண்டும் தொழிற்பட வைத்தல், குறைபாடுகளை சரிசெய்தல், வழமையான ஒழுங்கமைப்புக்கு மாற்றமான தோற்றத்தில் உள்ள உருப்புக்களை இயல்பான தோற்றத்திற்கு வடிவமைப்பு செய்தல் போன்ற ஷரீஆ அங்கீகரிக்கும் நலன்களை கருதி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யலாம். இப்படியான நோக்கங்களுக்காக செய்யப்படும் சத்திரசிகிச்சை முறையை மார்க்கம் அனுமதிக்கிறது.

2) துறை சார்ந்த தகுதிவாய்ந்த ஒரு வைத்தியரே இந்த சிகிச்சையை செய்யவேண்டும்.

3) குறித்த சிகிச்சையின் பக்கவிளைவுகள் பற்றி நோயாளிக்கு மிகவும் தெளிவாக உணர்த்துதல் வேண்டும்.

எனவே சூரா நிஸாவின் 119ம் வசனம் அல்லாஹ்வுடைய படைப்பினங்கில் மாற்றம் செய்தல் என்பது யாது என்பதை என்பதை வெறுமனனே உருவமாற்றம் என்பதாக எந்த ஆரம்பகால மற்றும் நவீன காலா அறிஞரும் கூறவில்லை. குறை நீக்கும் வகையில் உருப்புக்களில் மாற்றம் செய்தல் அல்லது குறைபாடுள்ள உருப்புக்களை மீள் வடிவமைத்தல் என்ற நோக்கத்திற்காக அறுவை சிகிச்சை செய்வதை அன்று முதல் இன்று வரை எந்த இஸ்லாமிய அறிஞர்களும் தடுத்ததும் கிடையாது.

உடம்பும் உள்ளமும் நலமாக இருப்பது ஷரீஆவின் பார்வையில் அத்தியவசியத் தேவை என்ற புரிதலின் பின்புலத்தில் தான் இந்த விடயத்தை அறிஞர்கள் நோக்கியுள்ளார்கள். ஆன்மாவை பாதுகாப்பது போலவே ஆரோக்கியம் முக்கியமானது என்பதை இஸ்லாம் அழுத்திச் சொல்லுகிறது. அதன் விளைவாகவே அறுவை சிகிச்சை முறையில் முஸ்லிம்கள் முன்னேறியதோடு கோடிக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றவும் உதவியுள்ளார்கள்.

இவ்வளவு மகத்தான ஷரீஆ வரம்புகளைப் பேணி வளர்த்த அறிவயல் கலாசாரத்தை அபத்தமான கூற்றுக்கள் கொண்டு இடிக்கும் அறியாமைப் பார்ததுத்தான் பரிதாபமாக உள்ளது.
நன்றிகள் http://nidur.info/
source: http://www.madawalanews.com/2017/03/blog-post_294.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails