Wednesday, January 6, 2016

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(7)



அல்லாஹ்வின் பேரன்பை
அடைந்திடவே விரும்புமவர்
எல்லார்க்கும்- குழந்தைகட்கும்
இதயத்தால் அன்புசெய்வார்!
வெற்றிவரும் வேளையிலும்
விருப்பமுடன் கஃபாவை
சுற்றிவரும் அவர்திருவாய்
சொல்வது”குர் ஆன்”வசனம்!

வாள்பலத்தால் தோள்பலத்தால்
வருகின்ற சிலவெற்றி
போல்அல்ல இறையருளால்
புனிதர்இவர் பெறும்வெற்றி!
உண்டிடவும் பருகிடவும்
உடல்-உளத்தைப் பேணிடவும்
அன்போடும் பரிவோடும்
அறிவுரைகள் கூறிடுவார்!
முந்திஸலாம் சொல்லிடுவார்
முதியவரோ குழந்தைகளோ
சந்திப்போர் மகிழ்வதிலே
சாதிப்பார் சாந்தநபி!
சொர்க்கத்தின் மாமன்னர்
சோபனங்கள் கூறிடுவார்
வர்க்கத்தில் மானுடம்நாம்
வைத்திருக்கும் மணிமகுடம்!
மாறாத சொந்தம்இவர்
மறவாத பந்தம்இவர்
ஆறாத துயரினிலும்
ஆறுதலாம் அண்ணலிவர்!
மெய்யான அருட்கொடையாய்
மேதினிக்கு வந்தீரே……
நெய்யாக உருகாதோ
நெஞ்சம்உமை நினைக்கையிலே….
மெய்யான அருட்கொடையாய்
மேதினிக்கு வந்தீரே……
நெய்யாக உருகாதோ
நெஞ்சம்உமை நினைக்கையிலே(40)-


Yembal Thajammul Mohammad  ஏம்பல் தஜம்முல் முகம்மது
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்…!
எந்த நிலையிலும் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே…!
===============================================
இன்ஷா அல்லாஹ்
மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா, குவைத் [MISK]
விடுத்துள்ள அன்பான அழைப்பை ஏற்று,
அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள
ஸீரத்துன் –நபி(ஸல்) நிகழ்ச்சிகளிலும் 
”தூதுவந்த வீரர் (The Hero as Prophet)” நூல்
வெளியீட்டு விழாவிலும்
கலந்து கொள்வதற்காக
பன்னூலாசிரியர் கண்ணியத்திற்குரிய மவ்லானா
முஹம்மதுகான் பாகவி ஹலரத் அவர்களும்
நானும்
06-01-2016-ஆம் நாள் குவைத் பயணம் மேற்கொள்கிறோம்.
அன்பிற்கினிய நண்பர்கள் /சகோதரர்கள் அனைவரும் 
துஆ செய்யுமாறு
மிகவும் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்….
---ஏம்பல் தஜம்முல் முகம்மது



.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails