Wednesday, January 6, 2016

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(6)




அச்சமென ஒன்றறியார்
அல்லாஹ்வுக்(கு) எதிரென்றால்
துச்சமென ஊதிடுவார்
தூயதிரு துணிவுடையார்!
கல்சுமப்பார், மண்சுப்பார்
கடுந்துயரும் பொறுத்திடுவார்
அல்லாஹ்வின் புகழிசைப்பார்...
அனைவருக்கும் நலமுரைப்பார்!

நேரத்தை நிர்வகிப்பார்
நெருக்கடியில் தடுமாறார்
பாரங்கள் சுமந்தாலும்
பக்தியுடன் தொழுதிடுவார்!
சிந்தனையை மதித்திடுவார்
செல்வத்தை மதித்தறியார்
எந்தநிலை என்றாலும்
இறைநினைவை இழந்தறியார்!
புகழ்கொண்ட சிகரத்தில்
போயிருக்கும் வேளையிலும்
“புகழெல்லாம் அல்லாஹ்வின்
புகழ்”என்பார்,புனிதர்இவர்!
செங்குருதி சிந்திடினும்
சிரத்திலடி பட்டிடினும்
வெங்கொடுமை இணைவைப்பை
வீழ்த்திடுவார் நாயகமே!
அசத்தியத்தை அழித்தஅவர்
அல்லாஹ்வே உவந்தளித்த
நிசத்தைநிலை நாட்டுவதால்
நீணிலத்தை நிமிர்த்திடுவார்! (32)
----------------------------------------------------------------

Yembal Thajammul Mohammad  ஏம்பல் தஜம்முல் முகம்மது

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails