Sunday, December 27, 2015

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(5)


சிறுபறவை சிறகசைப்பில்
சிறப்பெதுவும் இருந்தாலும்
உறும்கல்வி உரைத்திடுவார்
உற்றுணரும் நாயகமே!

சொற்சுத்தம், செயல்சுத்தம்
சொந்தஉடல் அதுசுத்தம்
பற்சுத்தம் என்றுரைத்த
பலசுத்தம் பரிசுத்தம்!

தீமைக்குத் தீமையினால்
தீர்வில்லை; நன்மையையே
சேமிப்பார்;அருள்செய்வார்
சிறந்தென்றும் விளங்கிடுவார்!

நல்லெண்ணம் கொள்வதற்கே
நாயனவன் முதற்தகுதி
உள்ளவனென் றுணர்த்துபவர்
உலகிரண்டின் நாயகமே!

வாள்முனையால் கொன்றொழிக்க
வந்தவனே நடுநடுங்க
ஆள்வீரம் காட்டியவர்
அல்லாஹ்வின் திருப்பெயரால்...(25)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Yembal Thajammul Mohammad

  ஏம்பல் தஜம்முல் முகம்மது

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails