Saturday, December 19, 2015

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(2)




பொறுமைக்கோர் இலக்கணமாய்
புகழுக்கும் இலக்கியமாய்
வறுமையிலும் செம்மையுடன்
வழிகாட்டும் வாழ்வழகு!

புன்சிரிப்போ முழுநிலவு
பூப்போன்ற மென்மைமுகம்
கண்பார்வை அருள்வெள்ளம்
காண்பவர்கள் தமைவெல்லும்!

முத்தொளிரும் பல்தெரிய
முறுவலுடன் அவர்திருவாய்
சத்தியத்தைப் பேசிடுமே
சாந்தஒளி வீசிடுமே!

அடியெடுக்கும் நடைநேர்த்தி!
அணிந்திருக்கும் உடைநேர்த்தி!
வடிதேனாம் அவர்மொழிகள்
வையகத்தில் தனிநேர்த்தி!

கண்ணியத்தின் சின்னமவர்!
கஸ்தூரி வாசமவர்!
பொன்பொதிந்த வெள்ளியெனப்
பொலியும் அவர்திருமேனி!

எழுத்தேனும் சொல்லேனும்
இறைத்தூதர் வாயுரைத்தால்
பழுத்ததொரு சத்தியமே!
பயன்கொள்ளும் பாருலகே!

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
----------------------------------------------------------------------------
2nd pic.Wadi Al Jinn- Madhinah's magnetic hill
Yembal Thajammul Mohammad
 ஏம்பல் தஜம்முல் முகம்மது

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails