Monday, November 16, 2015

பள்ளிவாசல்


பள்ளிவாசல்
இது படைத்தவனின் வீடு..!

இது –
ஏகத்துவ அடிமைகள்
இபாதத்துத் தென்றலில்
இளைப்பாறும் பூஞ்சோலை..!

இது –
தேகப் பயிற்சிக்கூடம் அல்ல.
மனங்களின் –
யோகப் பள்ளிக்கூடம்..!

இது –
கையேந்திக் கேட்கும்
மெய்யடியார்களின்
‘துஆ’க்கள்
அல்லாஹ்வின்
அங்கீகரிப்பைப் பெறும்
அத்தாணி மண்டபம்..!

இது –
மன்னிப்பு வேள்விகள்
அடிக்கடி அரங்கேறும்
யாகசாலை..!
அதனால்
நிம்மதி பரிசைப் பெறும்
நிலா முற்றம்..!

இது –
தியானமும் மெளனமும்
ஆரத்தழுவிக் கொள்ளும்
ஆன்மீகக் குடில்..!

இது –
சுவனத்துக்கு
அழைத்துச் செல்லும்
மெஹ்ராபுச் சுரங்கம்..!

இங்கே –
நிற்பதும், குனிவதும்
எழுவதும், தொழுவதும்
அல்லாஹ்வுக்காக..
அழுவது மட்டும்
நமக்காக …!

நாம் –
வெளியே தலைகுனிந்தால்
அவமானம்..!
இங்கே –
தலை குனிந்தால்
வெகுமானம்..!

கவிஞர் இஜட் ஜபருல்லாஜ்
ஆழியூர் பள்ளிவாசல் மலர்
30.08.2002

தகவல் தந்தவர்
 அப்துல் கையூம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails