Thursday, November 12, 2015

இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்!


இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்!
  Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) 

பொது நிர்வாக தேர்தல்கள் அதன் சட்ட, திட்டங்களுக்குள் அடங்கும். அதன் நிர்வாக அமைப்புகள் தமிழக பதிவுத்துறை சட்டம், 1975க்குள் உட்பட்டது. சில நிர்வாகம் கம்பனி சட்டத்திற்குட்பட்டு செயல்படும். அதன் சட்டத்தினை மீறும் செயலுக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வழி வகுக்கும். அதில் உறுப்பினர் யார், யார் என்பது அந்த பொது நிர்வாகத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும்.

பள்ளி வாசல்களை வக்ஃப் சட்டம் மற்றும் ஸ்கீம் வழிமுறைகள் படி நிர்வாகித்து வருகின்றனர். சில இடங்களில் தனிப்பட்டவர்களே பள்ளிவாசல்களை நிர்வாகித்து வருகின்றனர்.

ஆனால் இறைவனின் இறை இல்லங்களில் நிர்வகிப்பது சம்பந்தமாக அல் குர்ஆனில் அத்தியாயம் 9 அத்தவ்பாவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

"இறை நிராகரிப்போருக்கு பள்ளி நிர்வாக நிர்ணயம் செய்யும் உரிமையில்லை." (அல்குர்ஆன் .9:17)

"அல்லாஹ்வின் பள்ளியினை பரிபாலனம் செய்கின்றவரெல்லாம் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையும் நிறைவேற்றி, சக்காத்துக் கொடுத்தும், அல்லாஹ்வையன்றி மற்றவருக்குப் பயப்படாதவராகவும் இருக்க வேண்டும்." (அல்குர்ஆன் 9: 18)

"விசுவாசம் கொள்ளாமல் இருந்து கொண்டு, ஹாஜிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறோம் என்று கூறிக் கொள்கின்றவர்களும், இறை இல்லத்தினை சிறப்புற பராமரிப்போர்களும், இறை இணை வைக்காதவர்களும் ஒன்றாக மாட்டார்கள்." (அல்குர்ஆன் 9: 19)

மேற்குறிப்பிட்ட சரத்துக்கள் படி பள்ளி நிர்வாகிகள் தொழுகையினை நிறைவேற்ற வேண்டும், சக்காத்துக் கொடுக்க பொருளீட்ட வேண்டும். ஏனென்றால் பொருளீட்டினால் தான் அல்லாஹ் சொன்ன சக்காத்தினைக் கொடுக்க முடியும். பள்ளியினை நிர்வகிக்கின்றேன், ஓடாய் தேய்கின்றேன் என்பதும், ஹாஜிகளுக்கு தண்ணீர் கொடுக்கேன்றேன் என்பதும் இறைவன் கூறிய கருத்திற்கு மாறுபட்டது.

அத்துடன் இறைவன் கருத்துக்கு மாறான கருத்தாக;

1) பாரம்பரிய, பரம்பரை என்று நிர்வாகத்திற்கு வருகின்றனர்.

2) பிறரின் மதிப்பினைப் பெற வேண்டும் என்று வருகின்றனர்.

3) தனது பிரபலத்தினைக் காட்டுவதிற்காக சிலர் நிர்வாகத்திற்கு வருகின்றனர்.

4) முகஸ்துதிக்கும், பொருளாதார தகுதிகளுக்காகவும் நிர்வாகத்திற்கு வருகின்றனர்.

தேர்தல் நடக்கும், பல வாக்குறிதிகள் பறக்கும். பொதுத் தேர்தல் போன்று வீடுகள், வீதிகள் தோறும் ஆள் சேர்ப்பதும், பிட் நோட்டீஸ் அடிப்பதும், ஒருவர் பற்றி ஒருவர் வசை படுவதும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானதல்லவா? வெற்றி பெற்ற . நிர்வாகத்தினர் தரையில் கால் படாதவாறு நடக்காமல், மக்கள் பார்வையில் வெற்றி மதிப்பிற்குரியதாகத் தெரியலாம், ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈமானுக்கும், நல்ல பண்புகளுக்குமே மதிப்பளிப்பான். குடும்ப, குலப் பெருமைக்கோ இறைவன் ஒருகாலமும் மதிப்பு அளிக்க மாட்டான்.

அல் பகறா 2:247 இல் நபி மூஸா அலைஹி வஸலாம் அவர்கள் தனக்குப் பிறகு அரசராக 'தாலூத்' அனுப்பியுள்ளான் என்று இஸ்ரவேலர்களிடம் எதிர்ப்பிற்கு நேர்மாறாக கூறும்பொழுது, 'தாலூத் கல்வியிலும், தேகத்திலும் உங்களைவிட சிறந்தவர் என்று கூறினார்கள்.

இந்த ஆயத்து கூறும் கருத்து என்னவென்றால், ஒருவர் பொருளாதார வசதியில் மிக்கவர், பரம்பரை செல்வந்தர், உடல் அல்லது ஆள் பலம் என்பதிற்காக எந்த பதவியும் வழங்கக் கூடாது. அதே சமயம் ஒருவர் செல்வந்தர் இல்லை என்பதிற்காக பதவியினை மறுக்கக் கூடாது.

புனிதமான இறை பள்ளிக்கு பொறுப்பு வகிக்கும் ஒருவர் திருக்குர்ஆனை கொஞ்சமாவது ஓதி கற்று இருக்க வேண்டும்.

நபி வழியை, ஷரீயத்தினை பூரணமாக உணந்தவர்கள், இஸ்லாத்தை, இஸ்லாமிய வரலாற்றை அறிந்தவர்களே பொருத்தமானவர்கள். குர்ஆனில் உள்ளவை பற்றி சில கேள்விகள் பாடமாக கேட்டாலும் கூறத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். தொழுகையினைப் பேணுபவராகவும், தன் குடும்பத்தினை தான் ஏற்றிருக்கும் பொறுப்பிற் கேற்ப நெறிப்படுத்திச் செல்வோராக இருப்போர் மட்டுமே தகுதியானவர்.

பள்ளி நிர்வாகிகள் 'பைத்துல் மால்' பொருளை இறை நேசமுள்ள பயனுள்ள வழியில் செலவு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும். மாறாக பொருளை சுரண்டு வராகவோ, ஆடம்பர வழியில் செலவு செய்வராகவோ இருக்கக் கூடாது.

ஒரு முறை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீதி வழி செல்லும்போது பொது நிலம் ஒன்றில் ஒரு மாடு மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, அருகிலிருந்தோரிடம் இந்த மாடு எவருடையது என்றார்கள். அங்கே இருந்தவர்கள், 'இந்த மாடு உங்கள் மகன் அப்துல்லாவிற்கு சொந்தமானது' என்றார்களாம். உடனே அந்த இடத்திலேயே மகனை அழைத்து வரச் செய்து, பைத்துல்மால் சொத்தில் மேய்ந்த இந்த மாட்டை சந்தைக்குக் கொண்டு சென்று விற்று விடு. அப்பணம் முழுவதையும் பைத்துல்மால் மக்களுக்கான பொது நிதியகத்தில் சேர்த்து விடு' என்று உத்தரவிட்டார்கள் என்பது வரலாறு.ஆகவே பைத்துல்மால் சொத்தை தான் சொத்தாக பாவிக்காது, அதனை நெருப்பாக பாவிக்க வேண்டும்.

சென்னையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பள்ளியின் தலைவர் நீண்ட நாள் நோயில் இருந்து கொண்டு, ஜும்மா தொழுகைக்குக் கூட வரமுடியாத நிலை இருந்தும் நீடித்துக் கொண்டு இருந்தார். அதற்கான காரணத்தினைக் கேட்டபோது, 'அவர் தான் மரித்ததும், தன் ஜனாஸா தெருவில் போகும்போது 'யார் ஜனாசா என்று பிறர் கேட்டால், ஊர் ஜமாத்துத் தலைவர் ஜனாஸா' என்று சொல்ல ஆசைப் பட்டாராம்!

இன்னும் சிலர் பள்ளிவாசல் குடியிருக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் குடியிருந்தாலும், தான் செய்த தொண்டிற்காக பள்ளியின் நிர்வாகக் குழுவில் இடம் வேண்டும் கேட்பதிணை பார்த்திருக்கின்றேன்.

பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு வருவதிற்கு முன்பு ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தித்து நாம் இஸ்லாமிய வரலாறு சொன்ன நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவரா என்று சுய சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்று சொன்னால் சரியா?

AP,Mohamed Ali
 நன்றி http://nidur.info/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails