Monday, September 28, 2015

வேற்று கிரகவாசிகள்!



  ரஹ்மத் ராஜகுமாரன் 

'(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா சிருஷ்டித்திருக்கின்றோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே சிருஷ்டித்தோம் (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ சிருஷ்டிகள் இருக்கின்றன. இவைகளைச் சிருஷ்டித்திருப்பதுடன்) இச்சிருஷ்டிக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்' (அல் குர்ஆன் 23:17)

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" (1:1)

உலகங்களை உருவாக்கிப் பரிபாலித்துவரும் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (1:1)

திருக்குர்ஆனின் 6666 வசனங்களில் முதன்மையான இவ்வசனமே வியப்புக்குரிய வசனம். இவ்வசனத்தில் 'ஆலமீன்' என்கிற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். 'ஆலம்' என்றால் உலகம். ஆலமீன் என்றால் உலகங்கள் என்று பொருள்.அன்று, 'நம் பூமி என்கிற இந்த உலகம் தவிர இன்னும் நிறைய உலகங்கள் உண்டா? என்று அப்போதே உலகம் கேள்வி கேட்டு, மானிட உலகம், ஜின்களின் உலகம், மலக்குகளின் உலகம், பிராணிகளின் உலகம், தாவரங்களின் உலகம் என்று பதில் சொல்லி சமாதானமாகிக் கொண்டது.

இன்று, பறக்கும் தட்டு, வேற்றுலக மக்கள், அவர்களின் செயல்பாடுகள் இவைகள் எல்லா பத்திரிகைகளிலும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பத்திரிக்கைகளிலும் தினம் தினம் இதுபற்றி குறிப்பு வரத் தொடங்கியுள்ளது. அமெரிக்கர் கூறும் வேற்று கிரகங்களைப் பற்றி சினிமா, கதைகள் என்று எழுதி உலக மக்களை மேலும் ஆர்வப்படுத்தியது. மேலும் வேற்றுகிரக மக்கள், பூமிவாழ் மக்களைக் கடத்தி அவர்களின் உடம்பிற்குள் தகவல் அனுப்பும் சாதனத்தைப் பொருத்தி பூமியையும் மக்களையும் கண்காணிக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாயின.

வேற்றுலகம் என்பது சாத்தியமா? அங்கு வாழும் மக்கள் நம்மை விட அறிவில் முதிர்ச்சியானவர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டே திருக்குர்ஆனைத் திறந்தால்,

'(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா சிருஷ்டித்திருக்கின்றோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே சிருஷ்டித்தோம் (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ சிருஷ்டிகள் இருக்கின்றன. இவைகளைச் சிருஷ்டித்திருப்பதுடன்) இச்சிருஷ்டிக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்' (23:17)

மேற்கண்ட வசனத்தில் நம்மை மாதிரி வேறு படைப்பினங்களும் உள்ளன. அந்த படைப்பினங்களுக்குத் தேவையானதையும் படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்தில் நம்மை மாதிரியே வேறு படைப்பினம் என்று கூறிய வசனத்தில் நம்மை மாதிரியே வேறு படைப்பினம் என்று கூறிய அல்லாஹ் அடுத்த வசனத்தில் நம் பூமியை 7 பூமி என்று கூறுகிறான்.

'அவனே 7 வானங்களையும், பூமியிலும் அதே போன்றும் படைத்தான்.' (65:12).

இதைப் பார்க்கும் போது நாம் வாழும் பூமியைப் போன்ற வேறு பூமிகளும் இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது.

நவீன விஞ்ஞானம் இது பற்றிய என்ன கூறுகிறது என்று பார்ப்போம். 1882-ல் வால்டர் மாவுக்தர் என்கிற விண்ணியல் அறிவாளர் கிரீன்விச் வானாய்வகத்திலிருக்கும் போது பறக்கும் தட்டு ஒன்று விண்ணில் பறந்து வந்து விண்ணிலேயே மறைந்ததாகவும் அதன் வேகம் மிகமிக அதிகம் இருந்ததாகவும் கூறினார்.

அடிமரிக்காவின் முன்னணிப் பத்திரிக்கையான 'ஆம்னி' பறக்கும் தட்டு இருப்பதை நம்புகிறது. மேலும் அமெரிக்க அரசு இந்த உண்மையை உலகுக்குச் சொல்ல மறுக்கிறது, மறைக்கிறது என ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது. எச். ஸ்பென்ஸர் ஜோன்ஸ் என்கிற வானியல் அறிஞர் தமது 'முடிவற்ற உலகங்கள்' என்ற நூலில் 'பிற உலகங்களில் உயிர் வாழ்வது சாத்தியம் மட்டுமல்ல் உறுதியாக நம்பத் தகுந்த ஒன்றாகும்' என்கிறார்.

பிரபஞ்சத்தைப் படைத்து கோடான கோடி சூரியன்களைப் படைத்து கணக்கற்ற கோள்களையும் (கிரகங்களை) படைத்த அல்லாஹ்வுக்கு அவனது வல்லமைக்கு இந்த பூமி மிகச் சாதாரணமானது. மேலும் அல்லாஹ் இந்த பூமி மாதிரி 7 பூமியைப் படைத்ததாக குர் ஆனில்...'ஏழு வானங்களையும் அவைகளைப் போல பூமியையும் அல்லாஹ் தான் படைத்தான். இவைகளில் (தினசரி நிகழக் கூடிய எல்லா விஷயங்கயைப் பற்றிய கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கின்றது.' குர்ஆன் (65:12).

இந்தப் பிரபஞ்சத்தின் மூலை முடுக்கெல்லாம் வேற்றுகிரக வாசிகளைத் தேடி வருகின்றோம். தற்சமயம் சனிக்கிரகத்தின் துணைக்கோளான டைட்டான் என்கிற கிரகத்தில் உயிரினம் இருக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் இன்னும் நம்புகிறார்கள்.

அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள இன்னொரு சூரியனின் கிரகத்தின் துணைக்கோளைக் கண்டு பிடித்துள்ளனர். அந்தத் துணைக் கோளை 'ஸ்பிச்சர் ஸ்பேஸ்; டெலஸ்கோப்' என்ற அதிக சக்தி கொண்ட தொலை நோக்கி மூலம் ஆய்வு செய்தனர்.

அந்தக் கோளின் வான் பகுதியில் தண்ணீர் ஆவியாக நின்றது தெரிய வந்துள்ளது. எனவே அந்தத் துணைக்கோளில் தண்ணரும் இருக்க வேண்டும், ஜீவராசிகளும் வாழ வேண்டும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

அந்தக் கோளுக்குப் பெயர் வைக்கவில்லை எச்.டி.189733 பி என்னும் குறியீட்டு எண் கொடுக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து 64 ஒளி வருடம் முழுவதும் பயணம் செய்வதைக் குறிப்பிடுவது ஆகும்.

இதுபோன்று கோடான கோடி கிரகங்களில் உயிரினம் வாழ்வதாகவும் அவைகளுக்குத் தேவையான தண்ணீர் நிரப்பப் பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்சு சான்றாக நம் உடல் எந்த அடிப்படை மூலப் பொருளால் ஆகியிருக்கின்றனவோ அதே புரோட்டீன் மூலக் கூறுகளான அமினோ ஆக்சைடு விண்வெளியின் மிகமிக தொலைதூரப் பகுதிகளிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பூமியில் விழும் விண்கற்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது.

மேலும் வால் நட்சத்திரங்களிலும் ஆங்காங்கே காணப்படும் விண்துகள்களிலும் உயிரினத் தோற்றத்திற்கான அடிப்படை மூலக்கூறுகள் இருப்பதாகவும் இவை நீண்ட பயணத்தின் போது விண்வெளியில் பல இடங்களிலும் உயிரினத்திற்கான விதைகளை ஊன்றுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது உண்மையானால் விண்வெளியில் பல இடங்களிலும் உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கும். அவைகள் மனிதர்கள் மாதிரியோ அல்லது மிருகங்கள் மாதிரியோ இருக்கலாம். இம்மாதிரி ஜீவராசிகள் நம் பூமி வாழ் மக்களைக் கடத்தியதாக நிறைய வரலாறும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைக் காணலாம்.

கம்போடியாவில் 'அங்க்கார்' என்னும் ஊரில் உலகப்புகழ் பெற்ற 'அங்க்கார் வாட்' என்னும் கோயிலில் இருக்கிறது. 1431-ல் திடீரென்று இந்த ஊர் மக்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனார்கள். மற்ற விஷயங்கள் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தன. இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் உடனே ஏராளமான ராட்சதப் பறக்கும் தட்டுகள் இரவோடு இரவாக இறங்கி அத்தனை மக்களையும் அள்ளிக் கொண்டு வேறு கிரகத்துக்கு சென்றுவிட்டன என்கிறார்கள் அங்க்கர்வாசி கூட கம்போடியா முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

வேறுகிரக வாசிகள் நம் பூமியன் நடவடிக்கைகளை கவனிக்க நம் கண்களுக்குத் தெரியாத மாயவலையை விரித்துள்ளதாகவும் ஒருசாரார் நம்புகின்றனர்.

நாமும் வேற்று கிரக மக்களைத் தேடி கார்ள்சேகன் போன்றவர்கள் 1977 வாயேஜர் 1, வாயேஜர் 2 போன்ற கலகங்களை விண்வெளியில் நெடும் தூரம் செல்ல அனுப்பும் போது வேற்று கிரக உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருந்தால் அவர்களுக்கு எப்படி நம்மைப் பற்றி செய்தி தருவது என்று யோசித்தார்கள். அத்தனை மொழிகளிலும் நம் பூமியின் வாழ்த்தைத் தெரிவித்து விட்டு உலகின் அத்தனை வித சங்கீதங்களையும் ஒரு சாம்பிளில் 100 கோடி வருடம் தாங்கக் கூடிய தங்க முலாம் தகட்டில் பதித்து அனுப்பினார்கள். அதிலும் இந்திய ராகம் ஒன்றும் உள்ளது. சங்கீதம் தான் பிரபஞ்ச பாஷை என்பது அவர்களின் கணிப்பு. இதுவரையிலும் பதில் இல்லை.

நமது பூமியை அல்லாஹ் பாதுகாப்பது போல் மற்ற கிரகங்களையும் பாதுகாத்து வருகிறான். அவன் விரும்பும் போது இந்த மக்களையெல்லாம் போக்கிவிட்டு இம்மக்களைப் போன்றே வேறு ஒரு படைப்பினத்தை கொண்டு வருவதாகவும் அல்லாஹ்வின் வேதம் சொல்கிறது. இந்த வசனத்தின் வாயிலாக தெரியவருவது மனிதர்களைப் போன்றே புதியதொரு படைப்பு என்பது வேற்றுகிரக வாசிகளை ஞாபகப்படுத்துகிறது.

நமது சூரியக் குடும்பத்தின் கிரகங்களுக்கு இடையேயுள்ள தூரம் குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கிறது. இந்த இடைவெளியில் கிரகங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த இடைவெளி செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையேயுள்ள தூரம் இருமடங்காக இருக்கிறது. செவ்வாய்க் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையே ஒரு கிரகம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என வானவியல் விஞ்ஞானிகள் தேடும்போதுதான் தெரிந்தது. உடைந்து போன ஒரு கிரகத்தின் துண்டுகளும்; நமது சூரியனை வலம் சுற்றி வருகிறது. இந்த உடைந்த துண்டுகளுக்கு 'அஸ்டிராய்ட்ஸ்' என்று பெயர். இதில் பெரிய துண்டு 'ஸ்ரிஸ்' என்ற பெயர். இது 1000 கிலோ மீட்டர் விட்டமுடையது. மிகச்சிறியது சுமார் 100 மீட்டர். இதையும் விட சின்னது நிறைய உண்டு.

இந்த உடைந்துபோன கிரகத்தில் நம்மை விட அதிபுத்திசாலியான மக்கள் வாழ்ந்திருக்கக் கூடும். அவர்களின் மீது அல்லாஹ் கோபமடைந்து அவர்கள் செய்த வினைக்கு அந்தக் கிரகத்தையே சுக்கு நூறாக (இல்லை 2500 துண்டுகள் இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் பெரிய சைஸ் மட்டும் இன்னும் உள்ளது நம் கண்களுக்குத் தெரியவில்லை) உடைத்திருக்கலாம்.

ஆனால் நவீன விஞ்ஞானிகள், அந்த கிரகவாசிகள் அப்போதே அணுகுண்டு போன்ற மிகச் சக்தி வாய்ந்த வெடிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இதனால் கிரகம் உடைந்து போய் உள்ளது என்கிறார்கள்.

ஆக பிரபஞ்சத்தில் பூமிவாழ் மக்களாகிய நாம் தனியாக இல்லை. நம்மைப்போன்று படைப்பினங்கள் நம் கோளத்திலோ, அல்லது வேறொரு கோளத்திலோ கூட இருக்கலாம். அந்தப் புதிய படைப்பினத்தைத் தேடி விண்வெளியில் நம் பார்வை நீண்டு கொண்டே இருக்கிறது.

இதே தேடுதலில் வேற்றுகிரக வாசிகளும் நம்மைத் தேடி வரலாம். எதற்கும் நம் வீட்டுக் கதவை கொஞ்சம் திறந்தே வையுங்கள்.

உலகங்கள் (அகிலங்கள்) - குர்ஆன் (7:61) (7:67) (7:104) (7:121) (7:61) (10:10) (10:37) (26:109) (26:127) (26:145) (26:164)

'Jazaakallaahu khairan'  'ரஹ்மத் ராஜகுமாரன்'--செல்: 94434 46903 - நர்கிஸ் பிப்ரவரி 2009
http://www.nidur.info

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails