Tuesday, December 23, 2014

ஏகனே இறையோனே....! - ராஜா வாவுபிள்ளை

ஏகனே இறையோனே....!

தன்னிகரில்லா தனித்தோனின் காவலில் இருந்தே
அவனருள் வேண்டியே நிதமும் - தவறாது
போற்றி ஐவேளையும் வணங்கியே வாழ்ந்திட
பணித்தோனே ஏகனே இறையோனே!!

உண்மையாய் உணர்ந்து உள்ளத்தில் நிறுத்தி
அளவற்ற அருளாளனின் அனுக்கிரகம் பெற்றிடவே
அனுதினமும் அக்கறையாய் அனுஷ்டிக்கும் பழக்கத்தை - தவறாது
தந்திடுவாய் ஏகனே இறையோனே!!

பேறும் பிறப்பும் இறப்பும் இல்லாத
அகிலத்தை ஆளுகின்ற நிகரற்ற அன்புடையோன்
உன்னிடத்தே உளமார வேண்டுகின்றேன் - தவறாது
தருவாயே ஏகனே இறையோனே!!
--------------
ஏகனே இறையோனே....!

அகிலம் படைத்து மனிதம் விதைத்து
அத்தனையும் தந்தே உன்னை வணங்கவே
ஆட்டுவிப்போனே
உன்பாதம் பற்றிபிடிக்க - தவறாது
அருள்வாயே இணையில்லா ஏகனே இறையோனே!!

நெஞ்சில் நிறைந்து செயலில் செவ்வனே
நின்வழி நடந்து சுவர்க்கம் அடைந்திட
நல்வழி காட்டிடுவாய் கருணையாளா - தவறாது
எங்கும் நிறைந்தோனே ஏகனே இறையோனே!!

இருப்பது தற்காலிகம் என்றுணர்ந்து இவ்வுலகில்
உன்னையே தொழுது சகோதரம் பேணிக்காதிட நின்னருள் மன்றாடி கேட்கிறேன் - தவறாது
தந்திடுவாய் ஏகனே இறையோனே!!
(2)
------------------------
ஏகனே இறையோனே!

அர்சில் அமர்ந்து அகிலம் காக்கும்
நிகரில்லா நாயன் நிஹ்மத்தை நாடியோற்கு
தருபவனே எமக்கும் தருவாயே - தவறாது
தன்னிகரில்லா ஏகனே இறையோனே!!

சுவர்க்கம் அமைத்து நரகமும் உருவாக்கி
நன்மை தீமையை
உணர்ந்து அறிந்திட
பணித்தோனே பகுத்தறிவை தந்திடுவாய் - தவறாது
அகிலாதிபதியே ஏகனே இறையோனே!!

என்னைப் படைத்தது உன்னை வணங்கவே
என்பதை உணர்ந்து மரணம்வரை மறக்காதிருக்க
உன்னருள் வேண்டுகிறேன் நின்னடியான் - தவறாது
தந்திடுவாய் ஏகனே இறையோனே!!
(3)

கவிதை ஆக்கம் ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails