Tuesday, September 9, 2014

முற்றம்

 
நாற்சதுரத் தாழ்வாரம்
கீழிறங்கி நடுவில்
அமைந்தது எங்கள்
வீட்டின் முற்றம்.

தானியங்களைப் புடைக்கும்
அதே முற்றத்தில்தான்
அம்மா ஆடைகளையும் .
துவைப்பாள்.

அடைமழை பெய்யும்
மாரிக் காலங்களில்
நாங்கள் நீச்சலடித்து மகிழ
நீர் வெளியேறும் பாதையடைத்து
நீச்சல் குளமாகவும் உருமாறும்.

புது மருமகளாய்
அந்த வீட்டிற்கு வந்த
என் பாட்டி
தலைப் பிரசவத்தில்
தந்தையை ஈன்று
முதன்முதலில் குளிப்பாட்டியது
இதே முற்றத்தில்தானென
மாறாத மகிழ்ச்சியோடு
ஆயிரம் முறை சொல்வாள்!

பின்புக்கும் பின்பு
தாத்தாவாய்
பரிணாமம் அடைந்த
என் தந்தை இறந்தபோது
குளிப்பாட்டிய இதே முற்றத்தில்
ஒருவேளை..
பாட்டியும்
ஐந்தாம் தூணாய்
நின்றிருக்கலாம்!!

- புதுகை அப்துல்லா.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails