Thursday, July 3, 2014

ஒற்றுமைதான் அமைதிக்கு உயர்வான வழி என்போம் !

உற்றாரும் எதிரிகளாய் உறவினரும் வலம்வருவர்
பற்றாரும் பண்புகளை பகைமூட்டி வளர்த்திடுவார்
அற்றாரும் அதன்நடுவில் ஆட்சியாரால் கைதாவார்
பெற்றவரும் பதைபதைத்தே பீதியாலே பரிதவிப்பார்

மல்லுகட்டி நிற்பதினால் மல்லிபட்டி னம்குழம்பி
சொல்லவிலாச் சோகத்தில் சோர்ந்திட்டே மனம்கலங்கி
நல்லுறவு நசிந்திட்டே நல்வாழ்வு சிதறிவிட்டே
நல்வணக்கம் புரிந்தோர்கள் நாசகரால் மாட்டினரே

தூண்டிடுவார் பாவிகளும் துவேசம் வளர்ந்திடவே
வேண்டாதார் உடைத்திட்டார் வேதனைத்தான் மிஞ்சியதே
ஆண்டவனை நம்பிடுவோம் அறிவோடு செயல்புரிவோம்
சீண்டுவாரின் நோக்கங்கள் சீர்குலையச் சிந்திப்போம்

பற்றிடவே ஆட்சியினை பாவிகளும் திட்டமிட்டார்
புற்றீசல் போலவே புகைமூட்ட கிளம்பிவிட்டார்
ஒற்றுமைதான் அமைதிக்கு உயர்வான வழிஎன்போம்
கற்றவரின் துனையினிலே கயவர்கள் வென்றிடுவோம்

சூழ்ச்சிகளும் சூத்திரமும் சூழ்ந்திட்டே சுற்றினாலும்
வீழ்ச்சிகளே ஏற்படுத்த விவேகமேதான் கொண்டிடனும்
பாழ்பண்ணும் குணங்களுமே பாய்ச்சிட்டப் போதிலுமே
வாழ்வொன்றைச் சிந்தித்தே வல்லமையில் வாழ்ந்திடனும்

கேடுகெட்டார் சூழ்ச்சியினால் கீறிடுவார் வெடித்திடவே
வீடுகளை மனதினிலே வேண்டிட்டே பொறுத்திடணும்
போடுமிந்தக் கருத்துக்கள் பொதுவாக யாவருக்கும்
பாடுமிந்தப் பாவினிலே பகுத்தறிவுப் பார்த்திடுவீர்

நபிதாஸ்
Source : http://nijampage.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails