Friday, July 25, 2014

பழி போக்க வரும் வழிபோக்கர்கள் !


ரமழான் முதல் பிறை
வரும்போது வரும்
சந்தோஷத்தைப்போல
நீங்கள் வருவதைப்
பார்க்கும்போதும்
சந்தோஷம் வருகிறது!

நீங்கள் -
வனப்பிழந்து கிடக்கும்
எங்கள் வீதிகளுக்கு
வாழ்த்துக்களால்
விளக்கேற்றி வைக்க வரும்
விண் மீன்கள்!
ஒட்டடை படிந்து கிடக்கும்
எங்கள் மனக் கோட்டைகளை
சுத்தம் செய்ய வரும்
துப்புரவுத் தொழிலாளர்கள்!

துருப்பிடித்துக் கிடக்கும்
எங்கள்
கஜானாக்களைத் திறக்க
நாங்கள்
தேடிக்கொண்டிருக்கும்
தொலைந்துபோன
திறவு கோல்கள்!

நாங்கள்
சேகரித்து வைத்திருக்கும்
தங்கமும் பிளாட்டினமும்
நரகத்தின்
நெருப்புக் கயிறுகளாய் மாறி
எங்கள் கழுத்தை
நெரிக்காமலும்
எரிக்காமலும் தடுக்கும்
தீயணைப்பு வீரர்கள்!

நீங்கள் இரக்கவில்லையென்றாலும்
நாங்கள் இரங்கவில்லையென்றாலும்
இறைவனின் இரக்கம்
எங்கள்மீது
இறங்கப் போவதேயில்லை!

எங்களின்
ஒரு வருடச் சுமையை
இறக்கி வைக்க வரும்
உங்களைத்தான்
எங்களில் சிலர்
விழிகளால் எரிக்கின்றனர் - சுடு
மொழிகளால் வதைக்கின்றனர்!
ஆனாலும் நீங்கள்
கடமையை செய்துவிட்டு
விதிவழியேச் செல்லும்
வழிப்போக்கர்கள்!

பாவ விளையாட்டுக்களில்
பதக்கம் பெற்ற பலசாலிகள்
நாங்கள் என்பதை
நிரூபிக்க
வலிய வந்து
வாய்ப்புத் தரும்
ஏமாளிகள்!

உங்களுக்காகத்தான்
கஞ்சி வைப்போம்....
அதையும் நாங்களே
பங்கு வைப்போம்!
உங்கள் பணத்தில்தான்
விருந்தே வைப்போம்...
அதையும் கூட
உங்கள் பார்வையே படாமல்
உண்டு வைப்போம்!

லாபக் கணக்குப் போடாமல்
சில்லறைகளைக் கூட
சிந்த விடாத
சீதேவிகள் நாங்கள்!

சேர்த்து வைத்த
செல்வக் குப்பைகளிலும்
செல்லரித்துப்போன
புழுதிப் பெருமைகளிலும்
உருண்டு புரளும்
அழுக்கு மனிதர்கள்
நாங்கள்!

அழுக்கு....
உங்கள் ஆடைகளிலும்
இருக்கத்தான் செய்கிறது!
அதனாலென்ன?
ஹவுளில் நீந்தும்
மீனில் கூடத்தான்
நாற்றமிருக்கிறது!
ஆனாலும்
அதுதானே
தண்ணீரின் அழுக்கை உண்டு
நல்ல தண்ணீரை
ஒளுச் செய்யத் தருகிறது!

எங்கள் அழுக்குகளையும்
அகற்ற வருகின்ற
நல்ல முஃமீன்கள்
நீங்கள்!
அல்லாஹ்வே
அனுப்பி வைக்கின்ற
விருந்தாளிகள்!

என்றாலும் நீங்கள்
அடுத்தமுறை
வர வேண்டாம்!

ஏனென்றால்.....
கொடுக்கும் கரங்களாக
உங்கள் கரங்களும் உயர
கொடையாளன் அல்லாஹ்
அருள் புரியட்டும்!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails