Thursday, April 24, 2014

வாக்களித்த வேளையில் நாக்களித்த நன்றி!

அகரம் பயின்ற பள்ளியிலே
*********அழுத்தி வைத்தேன் வாக்கினையே
சிகரம் போலத் தெரிகின்ற
************சிறுபான் மையோர் வாக்குகளே
நிகரே இல்லா வெற்றிகளை
************நிலையாய்க் காட்டி நிற்பதனால்
பகரம் செய்வார் வெல்பவரும்
*********படைத்தோன் அருள்வான் உறுதியாக!

குறையைச் சுட்டும் விரலில்தான்
************குறியாய் இட்டக் கறைதானே
கறையாய் நிற்கும் அவலங்கள்
**********களையச் செய்யும் கறைதானே
இறைவன் நாட்டம் விடுப்பினிலே
*********இந்த வாய்ப்பைப் பெற்றதனால்
நிறைவாய் மகிழ்ச்சி என்மனத்தில்
*********நிலையாய்க் கண்டேன்; வாக்களித்தே!

34 ஆண்டுகட்குப் பின்னர் இன்று இதோ வாக்குப்பதிவு செய்து விட்டு ஜனநாயக உரிமையை நிலை நாட்டிய மாபெரும் மட்டிலா மகிழ்ச்சியில் இருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ். அதுவும் தஹஜ்ஜத் தொழுது விட்டு, நல்லாட்சி அமைய வேண்டும் என்ற அவாவுடனும் துஆவுடனும்..

-- KALAM SHAICK ABDUL KADER

3 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

“குறையைச் சுட்டும் விரலில்தான்
***குறியாய் இட்டக் கறைதானே
கறையாய் நிற்கும் அவலங்கள்
***களையச் செய்யும் கறைதானே”
இந்த
விருத்தம் தந்த அழகினிலே
...விரைந்தே உன்பால் நண்பானேன்
பொருத்தம் அர்த்தம் பொதிந்தகவி
...புகழ்சீர் தொடரும் அன்பானேன்.
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.
http://valarumkavithai.blogspot.in/

KALAM SHAICK ABDUL KADER said...

அழகு தமிழின் ஈர்ப்பாலே
....அடைந்தேன் கவிஞர் நட்பைத்தான்
பழகு பண்பில் நனைந்தேனே
...பசுமை நினைவில் ஏற்கின்றேன்!


இறையருளால், 30/04/2014 வரை தாயகத்தில் இருப்பேன்; தொடர்பு கொள்க; செல்லிடைப்பேசி இலக்கம்= 7200332169

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் பாவலர் நா.முத்துநிலவன் அவர்கட்கு, அடியேனின் தமிழ் மணக்கும் மிழ் வணக்கம். என் பாடல்கள் என் கவிதைப் பூக்களின் வலைப்பூந்தோட்டம் செல்ல வழி:
www.kalaamkathir.com

அங்கே செல்க
அன்பைச் சொல்க!

LinkWithin

Related Posts with Thumbnails