Tuesday, December 31, 2013

வாழ்வின் அடையாளம்

இரவு முழுக்க விழித்திருந்தும்
செல்போன் சத்தம் சிணுங்கவில்லை
பகலெல்லாம் காத்திருந்தும்
வாழ்த்துரைக்க யாரும் வரவுமில்லை !

இந்தியத் தொலைக் காட்சிகளில்
முதன் முறையாக
புதுப்படங்கள் எதுவும் தெரியவில்லை !


இரண்டாகவும் மூன்றாகவும்
பிறையைப் பிளந்து
பெருநாளைக் கூறு போட்டவர்கள்
வருடத்தின் முதல் பிறையை
வரவேற்கவும்
வாழ்த்துச் சொல்லவும் வாய் திறக்கவில்லை !

ஜனவரி முதல் தேதிஎன்றால்
நள்ளிரவிலும்
அலைபேசி அலறியிருக்கும்
சித்திரை என்றாலும்
நித்திரை தொலைந்திருக்கும் !

ஆனால் ...
ஹிஜ்ரத்தின் வரவுக்கு
மெத்தப்படித்த
ஹஜ்ரத்துகளே
முகமன் கூற முன்வரவில்லை !

தெரிந்து கொள்ளுங்கள் ...

ஹிஜ்ரத்தின் ஜனனம்
குப்ரியத்தின் மரணம் !

ரணமாகிக் கிடந்த மானுடத்தை
குணமாக்கித் தந்த சுகம்

பெருமானார்
பாதத் தடத்தில் பிறந்த வரம் !

இறைவனே அனுப்பி வைத்த
சொர்க்கத்தின் தவம் !

ஜனவரி -
முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்ட
ஜிஸ்யா வரி !


ஹிஜ்ரி -
பிலால்களின் முதுகில்
சாட்டைகளால் வரையப்பட்ட
இஸ்லாத்தின் முகவரி !

இருட்டு ராத்திரியில் வரும்
ஜனவரிக்கு மட்டும்
வாழ்த்துப்பாப் பாடி
வாழத் தெரிந்தவர்களே ...
இருட்டுக்களையே
வெளிச்சங்களாக்கிய
முஹர்ரத்தின்
முதல் பிறைக்கும்
வாழ்த்துச் சொல்லக்
கற்றுக் கொள்ளுங்கள் !

ஏனென்றால் -
அது உங்கள்
வாழ்வின் அடையாளம் !

Abu Haashima Vaver

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails