Tuesday, December 17, 2013

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்


 கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)
கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது.

    (நபியே ! யாவற்றையும்)  படைத்த உமது இறைவனின் திருநாமத்தால் நீர் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து  படைத்தான். ஓதுவீராக! உமது  இறைவன் மாபெரும் கொடையாளன் அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.(அல்குர்ஆன்96:1:5 )   



    இஸ்லாம் என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி பலகோடி மக்களின் இதயங்களில் நீக்கமற வாழுகின்ற வழிமுறையாக, வாழ்க்கை நெறியாக உள்ள ஓர் அற்புத மார்க்கம். அதே வேளையில், இந்த மார்க்கத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்;, வேண்டுமென்றே  புனித இஸ்லாத்தைப்பற்றியும் அதன் உண்மைகளைப்பற்றியும் திரித்தும் சிதைத்தும் கூறிக்கொண்டும் இஸ்லாத்திற்கு இல்லாத முகங்களையும், நிறங்களையும் இருப்பதாகக் கூறிக்கொண்டும் அதன் புனிதத்தை குறைப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நூற்றாண்டுகளாக இஸ்லாத்தை நோக்கி திட்டமிட்டு எறியப்படும் அம்புகளை எதிர்கொள்ளும் விவேகத்தையும் இஸ்லாமியர்கள் இழந்து வருவதும் கசப்பான உண்மை. காரணம்…  இஸ்லாமியர்கள், கல்வி ஞானத்தைப் புறக்கணித்தது.

    எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானம் இல்லாமல் தன்மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்.  (அல் குர்ஆன்: 30 -29 )

இறைவனால் அருளப்பெற்ற திருமறை இந்த உலகிற்கு அறிவைத் தந்தது, அறிவியலை தந்தது. ஒழுக்கத்தையும் உண்மையையும் கற்றுக் கொடுத்தது. சட்டத்தையும், நீதியையும் போதித்தது. திருமறை வழியில் இந்த உலகத்தை ஆளக்கூடிய தகுதிபடைத்த இஸ்லாமிய சமுதாயம். திருக்குர்ஆன் அழுத்திச் சொன்ன ஆக்கப்பூர்வமான கல்வியை அலட்சியப்படுத்திய காரணத்தினால் வீறுகொண்டு நிற்கவேண்டிய நாம் வீரியம் இழந்து நிற்கிறோம்..


கல்விக்கு கண்தந்த இஸ்லாம்:
உலகில் உள்ள எந்த சமூகமும் இஸ்லாம் மார்க்கம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது போன்று வலியுறுத்தியது கிடையாது. கல்வி என்றால் என்னவென்றே புரியாத அந்தக் காலத்தில் கல்வியைக் கடமையாக்கியது இஸ்லாம். ஆண்களுக்கே கல்வி
இல்லாதிருந்த  நிலையில் , அன்று வெறும் போகப்பொருளாகக் கருதப்பட்ட பெண்களுக்குக்கும் கல்வியை கட்டாயமாக்கியது இஸ்லாம். இறைவன் அருளிய திருக்குர்ஆனில் சுமார் 750 வசனங்கள் கற்றுக்கொள்ளவதைப் பற்றி கூறுகிறது.  கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கல்வியின் மாண்புகளையும் மகத்துவத்தையும் தனது வாழ்நாட்களில் பலமுறை வலியுறுத்திச் சென்றுள்ளார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருமுறை, நபியே..! திருமறையை ஓதுவதைவிட- கற்றுக்கொள்வது சிறந்ததா? என்று தோழர்கள் கேட்டபோது அதற்கு, அறிவின் மூலமாக அன்றி வேறு எப்படி திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும்? என்று கேட்டார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் “யார் கல்வியின் பாதையை தேடிச்செல்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை  லேசாக்குகிறான் “ என்றார்கள் (நூல்: முஸ்லிம்)

நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (எனது கனவில); ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது .உடனே நான் (அதிலிருந்த பாலை ) தாகம் தீருமளவு குடித்துவிட்டேன். அது என் நகக்கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதியிருந்ததை  உமர்(ரலி) அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ! அந்தப் பாலுக்கு தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள் ? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “கல்வி” என்று கூறினார்கள்.  (நபி மொழி –புகாரி.) 

கல்வி கற்பது என்பது அனைத்து முஸ்லீம்கள் மீதும் கடமையாகும் என நபி(ஸல்) அறிவிப்பதாக அனஸ்(ரலி) கூறியதை நூல் பைஹகியில் காணமுடிகிறது. சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை, போராளி சிந்தும்  இரத்தத் துளிகளைக் காட்டிலும் ஒரு அறிஞனின் பேனா மை புனிதமானது. போன்ற  கல்வியின் மாண்புகள் மற்றும் மகத்துவங்கள் பற்றி நூற்றுக்கணக்கான ஆதாரப்பூர்வ ஹதீதுகள் நாம் அறிந்திருக்கிறோம். இஸ்லாம் மதித்த கல்வியை இஸ்லாமியர்களாகிய நாம் எந்தளவு மதித்திருக்கிறோம் என்பது தான் இந்தக்கட்டுரையின் சாரம்.

தமிழக முஸ்லிம்களின் கல்விப்பாதை  அன்று முதல் இன்று வரை

    தான் நாடியவர்களுக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கிறான். (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ ,அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயம் ஆகிவிடுகிறார். எனினும், நல்லறிவுடையோர் தவிர வேறுயாரும் இதை சிந்தித்துப்பார்பதில்லை.   (அல்குர்ஆன் - 2 :269)


ஒரு காலத்தில் கல்வியை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு சாதனைகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இந்த உலகத்திற்கு இஸ்லாமிய மேதைகள் அள்ளித் தந்தனர். ஆனால் தொடர்ந்து வந்த தலைமுறையினர் கடந்த நானூறு ஆண்டுகளாக கல்வியில் அலட்சியம் காட்டியதனால், இஸ்லாமியர்களின் இன்றைய அவலநிலையை நமக்கு நாமே விளக்க தேவையில்லை. உலகக்கல்வியிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கி நின்ற சமுதாயம், கடந்த நூற்றாண்டுகளில் நவீன கல்விச் சாலைகளில் எப்படி நடக்க ஆரம்பித்தது என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

அன்றைய காலங்களில் அரசாங்கம் கல்விக்கூடங்கள் பல தொடங்கி அதில் பல்வேறு சமுதாயத்தினர் கல்வி கற்று வந்தாலும், முஸ்லீம் சமுதாயத்தினர் மட்டும் நவீன கல்வியை ஏற்றுக்கொள்ள மிகப்பெரிய கருத்துப்போராட்டம் நடத்தி வந்தனர். நாளடைவில் தங்களின் சொந்த முயற்சியிலும் அரசின் உதவியாலும் முஸ்லீம்கள் தாங்களாகவே நடத்தும் ஒரு சில கல்வி நிறுவனங்களை தொடங்க முன் வந்தனர். தமிழக அளவில் கி.பி.1850 முதல் இன்று வரை முஸ்லிம்களின் கல்வி ஆர்வத்தையும் வளர்ச்சியையும் தெரிவதன் மூலம் நமக்கு ஒரு புரிதல் கிடைக்கும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் முஸ்லீம்கள் ‘மக்தப்’ மற்றும் ‘மத்ரஸா’க்களில் கல்வி பயின்றனர். எழுதுதல் மற்றும் கணிதப்பாடங்கள் மக்தப்களிலும், இலக்கணமும் புவியியலும் மதரஸாக்களிலும் பாடமாகச் சொல்லித்தரப்பட்டது. அன்றைய ‘மக்தப்’ ‘லெப்பை பள்ளிகள்' என்றும் ஆசிரியர்கள் ‘லெப்பை’ என்றும் பெயர் பெற்றிருந்தனர்.

சென்னையில் 1851 அக்டோபர் 28-ம் நாள் நவாப் குலாம் கவுஸ்கான் பகதூர், “மதர்ஸா-இ-ஆஸம்” என்னும் மதரஸாவை தொடங்கினார். பிறகு 1959-ல் உயர்நிலைப் பள்ளிக் கூடமாக மாற்றப்பட்டு தமிழகத்தின் முதல் நவீன பள்ளிக்கூடம் 'மதர்ஸா-இ-ஆஸம' இன்று வரை செயல்பட்டு வருகிறது. அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் பெரிதும் அதிருப்தியடைந்த முஸ்லீம்களின் அதிருப்தியை குறைப்பதற்காக கிழக்கிந்திய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அரபிக் மதரஸா ஒன்றை தொடங்கினர். மேலும் அன்றைய மதராஸ் ஆளுநர் ‘சர்.இராபர்ட் ஹோபர்ட’ முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று 1873-ல் இராயப்பேட்டை அஞ்சல் நிலையத்திற்கு அருகே உயர்நிலைப்பள்ளிக்கூடம் துவக்க உதவி செய்தார். பிறகு அது உட்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டது.

1857ல் சென்னை பல்கலைக்கழகம் உருவானது. அதில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர் ஆனால், 1871-ல் தான் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து முதல் முஸ்லீம் மாணவர் பட்டம் பெற்றார். அவர் தான் சென்னை மாகாணத்தின் முதல் முஸ்லீம் பட்டதாரி. 1885-ல் நவீன கல்வியை வளர்ப்பதற்காக 'அஞ்சுமன்-இ-இஸ்லாமியா' என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அந்த அமைப்பு 'அஞ்சுமன்-இ-முஃபித்-இ-இஸ்லாம்' என்ற பெயரில் ஒரு தொழிற்பள்ளியை முஸ்லீம்களுக்காக அமைத்தது.

1901-02-ம் கல்வியாண்டின் நிலவரப்படி தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகளில் பயின்ற முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 44,705. இன்னொரு ஆச்சரியமூட்டும் மற்றொரு விபரம், தமிழக அரசின் புள்ளி விபரப்படி 1902-03-ம் கல்வியாண்டில் தமிழக கல்லூரிகளில் படித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 10 மாத்திரமே. அன்றைய காலகட்ட இஸ்லாமிய சமுதாய ஆர்வலர்கள் முஸ்லிம்களின் கல்வி பின்னடைவை கண்டு, முஸ்லீம்களின் கல்விநிலையை அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினர். இது குறித்து சர்.சையது கான் துவங்கிய ‘முகம்மதின் கல்வி கூட்டமைப்பு’ தனது உறுப்பினர்கள் கூட்டத்தை 1901-டிசம்பர் 28-ம் தேதி சென்னை தேனாம் பேட்டையில் கூட்டியது.

அதே காலகட்டத்தில் 1902-ல் துவங்கப்பட்ட தென்னிந்திய “முகம்மதன் கல்வி சங்கம்” (MEASI) தனது கல்வி சேவையை முஸ்லீம்களுக்காக செய்து வந்தது. பிறகு அது 1946-ல் பெயர் மாற்றப்பட்டு “தென்னிந்திய முஸ்லீம் கல்விச் சங்கம்”  (MEASI) என்ற பெயரில் இன்றும் செயல்பட்டு வருகிறது. 1915 ஏப்ரல் 12-ல் சென்னை ஜார்ஜ் டவுனில் ‘பெண்டு லாண்டு’ பிரபு ஒரு முஸ்லீம் விடுதியை துவங்கி வைத்தார். அது 1918-ல் அரசு மற்றும்  MEASI அமைப்பின் நிதி உதவியால் செயல்பட துவங்கியது. தென்னிந்திய கல்விச் சங்கம் பெண்களின் கல்வியிலும் ஆர்வம் காட்ட துவங்கியது. அதன் பயனாக கட்டாய தொடக்க நிலை பள்ளித்திட்டத்தில் புர்கா வசதியுடன் முஸ்லீம் மாணவிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அரசிடம் தொடர்ந்து முறையிட்டது. அதன் அடிப்படையில், 1943-ல் ஜார்ஜ் டவுனில் பெண்களுக்காகவும் கல்விச்சாலை ஒன்றை அரசு துவங்கியது. அதைத் தொடர்ந்து MEASI சங்கத்தின் தொடர்முயற்சியால் சென்னையில் 1951-ல் புதுக்கல்லூரி துவங்கப்பட்டது. அதே 1951-ம் ஆண்டில் தான் “தென்னிந்தியாவின் அலிகார் பல்கலைக்கழகம் என்று கருதப்படும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி”யும் உருவானது.

அதேபோல 1903-ம் ஆண்டு “வாணியம்பாடி முஸ்லீம்கள், முஸ்லீம் கல்விச் சங்கத்தை” தோற்றுவித்து பிறகு 1916-ல் வாணியம்பாடி கல்விச் சங்கமாக உருவாகி 1919-ல் வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி துவங்கப்பட்டது.

தென்னிந்திய முஸ்லீம் கல்விச் சங்கத்தின் அன்றைய நிர்வாகிகளின் தொடர் வற்புறுத்தலின் பேரில் 1946-ம் ஆண்டு முஸ்லீம் மகளிருக்கென ஒரு தனிக்கல்லூரியை “ஹோபார்ட்” பள்ளியின் வளாகத்தில் அரசு துவக்கியது. ஆனால் அன்றைய தமிழக காங்கிரஸ் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார், முஸ்லீம்களுக்கென பிரத்யோகக் கல்லூரி இயங்குவது சரியல்ல என்று கூறி அது 1948-ல் எத்திராஜ் என்பவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. முஸ்லீம் நிர்வாகம் மாற்றப்பட்டதோடு முஹம்மதன் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அரசு சலுகைகளும் நிறுத்தப்பட்டு பிறகு 1949-ல் அரசு கல்லூரியாக அது அறிவிக்கப்பட்டது. இன்றைய சென்னை எத்திராஜ் கல்லூரி அன்று முஸ்லீம்களுக்காக துவங்கப்பட்டு பிறகு பிடுங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அரசை நம்பியிருந்த இஸ்லாமிய கல்வி ஆர்வலர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு சுயமாக எழுந்து நிற்க தலைப்பட்டனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே முஸ்லீம் கல்லூரிகள் உருவாக ஆரம்பித்தது. 1951-ல் ஒரே ஆண்டில் சென்னை புதுக்கல்லூரியும், திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியும் துவங்கப்பட்டது. 1954-ல் சென்னை SIET  மகளிர் கல்லூரியும் அதே ஆண்டு அதிராம்பட்டிணத்தில் காதர்மைதீன் கல்லூரியும் உருவாகின. 1956-ல் உத்தமபாளையத்தில் கருத்தராவுத்தர் கல்லூரியும், 1965-ல் மேல்விசாரத்தில் அப்துல் ஹக்கிம் கல்லூரியும்,   1968-ல் மதுரை வக்போர்டு கல்லூரியும், 1969-ல் ஆம்பூரில் மஜ்ஹருல் உலூம் கல்லூரியும், 1970-ல் இளையான்குடியில் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியும், 1975-ல் சென்னை காயிதே மில்லத் கல்லூரியும் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. இவையனைத்தும் அரசு நிதியுதவியை பெற்று முஸ்லீம்களால் நடத்தப்படும் கல்லூரிகளாகும். 1980-க்குப் பிறகு தமிழகத்தில் தனியார் கல்லூரிகளுக்கான அரசு உதவி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் சுயநிதியில் இயக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது.

1980-களுக்குப் பிறகும் சுயநிதியின் அடிப்படையில் முஸ்லீம்களின் கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வளர ஆரம்பித்தன. தமிழகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி அதிகமான பள்ளிகள் முஸ்லீம் சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. அதிகமான கலை அறிவியல், பொறியியல், பாராமெடிக்கல் போன்ற கல்லூரிகளும் முஸ்லீம் சமுதாயத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. பல தொழில் நுணுக்க பயிற்ச்சி நிலையங்கள், ITI, Polytechnic, அரபிக்கல்லூரிகள் போன்று அதிகமான உயர்நிலைக் கல்வி நிறுவனங்களும் முஸ்லீம்களால் நடத்தப்படுகின்றன. இவைகளில், கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி, திருவாரூர் ராபியம்மாள் அகமது மைதீன் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி, ஐமான் கல்லூரி, சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அகமது கல்லூரி போன்ற கல்லூரிகள் பெண்கள் கல்லூரிகளாக செயல்பட்டு வருகிறது. ஆக, தமிழக முஸ்லீம்கள் துவங்கிய பள்ளிகள், கல்லூரிகள் நமது மாணவர்கள் படிப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் தேவையான அளவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையை உருவாக்கித் தந்த வல்ல இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தி கொள்ளலாம்.

முஸ்லீம் நடத்தும் கல்லூரிகளில்… முஸ்லீம் மாணவர்கள் எண்ணிக்கை ?
எவர் தனது இளமையில் கல்வியைத் தேடுவதிலும் வணக்க வழிபாட்டிலும் வளர்ந்து பெரியவராகிறாரோ அவருக்கு நாற்பது ஸித்தீக்கீன்களின் நன்மை கிடைக்கும்.  (நபிமொழி )

இஸ்லாமியர்கள் நடத்தும் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் துவங்கப்பட்டாலும்,  அந்தந்த கல்லூரிகளில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை என்ன என்பது அதிர்ச்சியான தகவல். 1903-ம் ஆண்டில் தமிழகத்தில் வெறும் 10 முஸ்லீம் மாணவர்கள் மட்டும் படித்த காலம் போய் 2002-2003 தமிழக புள்ளி விபரப்படி தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 25,000க்கு மேலாக உயர்ந்துள்ளது. இன்று இலட்சத்தை கூட தொட்டிருக்கலாம். இந்த எண்ணிக்கை மேலோட்டமாக வளர்ச்சியாகத் தெரிந்தாலும் முஸ்லீம்களின் சதவிகித எண்ணிக்கையில் இது மிக மிக சொற்பமே.

இந்திய அரசால் நடத்தப்படும் அபுல் கலாம் ஆசாத் கல்வி அறக்கட்டளை, சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக நடத்தப்படுகிறது. பல இலட்சக்கணக்கான நிதி உதவியையும் முஸ்லீம் கல்வி நிறுவனங்களுக்கு இந்த அறக்கட்டளை வழங்குகிறது. தமிழகத்தில் ஒரு சில பள்ளி கல்லூரிகள் மாத்திரமே இந்த அறக்கட்டளையின் மூலம் நிதியுதவி பெற முடிந்துள்ளது. காரணம், நிதியுதவி பெற இந்த அறக்கட்டளை விதிக்கும் நிபந்தனைகளில் ஒன்று, ‘முஸ்லீம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் குறைந்தது 25 சதவீத மாணவர்களாவது படிக்க வேண்டும்’ என்பது. 25 சதவீத மாணவர்கள் முஸ்லீம் மாணவர்கள் கூட இல்லாததால், முஸ்லீமகளால் நடத்தப்படும் பல கல்வி நிறுவனங்கள் நிதியுதவியை பெற முடியாமல் தவிக்கிறது. இப்பொழுது தெரிந்திருக்கும் முஸ்லீம் கல்வி நிறுவனங்களில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை. தமிழக அளவில் 1850 முதல் 1980 வரை மிக குறைந்த நிலையில் இருந்த கல்வி விழிப்புணர்வு 1980-க்கு மேல் ஓரளவு வேகமெடுத்து இருப்பது உண்மைதான். இருந்தாலும் இந்த மிகக் குறைந்த கல்வி வளர்ச்சியாவது ஆக்கப்பூர்வமாக இருக்கிறதா என்றால் கேள்விக் குறிதான் மிஞ்சுகிறது.
இன்றைய தமிழக இஸ்லாமியரின் கல்வி விழிப்புணர்வு – ஒரு பார்வை:

    எந்த ஒரு சமுதாயமும் நல்வழியில் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை , அது மாறுவதற்கான சாத்தியம் இல்லை.   ( நபி மொழி  )

கடந்த காலங்களில் தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் கல்வி விழிப்புணர்வு காணப்படுகிறது. கல்வியின் தேவை மற்றும் அவசரம் குறித்து கல்வியறிவு குறைந்த பெற்றோர்கள்கூட .ஆர்வத்துடன் ஆலேசித்துக் கொள்வது நம் கண்கூட கண்டு மகிழ முடிகிறது.

இந்த மாற்றத்திற்காக அடிப்படைக் காரணங்களில் …
i)    முஸ்லிம் கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்வு :

    (கல்வி ஞானத்தின் மூலமாக) யார் நேர் வழியின் பக்கம் அழைக்கின்றாரோ அவருக்கு அந்நேர்வழியை பின்பற்றக்கூடியவர்களின் நற்கூலிகளைப்போன்று கிடைக்கும். எனினும் அவர்களின் (பின்பற்றுபவர்களின்) நற்கூலிகளில் எதுவும் குறையாது.     நபிமொழி –முஸ்லீம்


1850-ஆண்டுமுதல் 1970-வரை தமிழகத்தில் தொடங்கப்பட்ட முஸ்லீம் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை விட 1970 முதல் இன்று வரை துவங்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். கடந்த 30 வருடங்களில் பொருளாதாரத்தில் ஓரளவு வசதி படைத்த இஸ்லாமிய கல்வி ஆர்வலர்கள் புதிய பல கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று தலைப்பட்டதன் பயனாக இன்று அதிகமாக இல்லாவிட்டாலும் ஓரளவு இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் தெரிகிறது. கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்விற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம்.
ii)    சமுதாய இயக்கங்களின் கல்வி விழிப்புணர்வு:

    உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்,கல்வி ஞானம் கொடுக்கப்பட்வர்களுக்கும், அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.     (அல் குர்ஆன்- 58:11 )


இன்றைய தமிழகத்தில் இஸ்லாமிய கொள்கைகளையும் முஸ்லீம்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் நம்மிடையே அரசியல் சார்ந்த கட்சிகளும், அரசியல்சாரா இயக்கங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அத்தனை இயக்கங்களும் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளைத் தவிர மற்ற பல்வேறு கருத்துகளில் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்பதும் நமக்கு தெரியும். ஆனால் இந்த இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் “இஸ்லாமிய சமுதாயம் கல்வி நிலையில் கடைநிலையில் உள்ளது. மற்ற சமுதாயத்தோடு 200 ஆண்டுகள் கல்வியில் பின்தங்கி நிற்கும் முஸ்லீம்கள் உடனடியாக கையிலெடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி ஒன்று தான்”. என்ற ஒரு கருத்தில் மட்டும் தான் ஒத்துப்போகின்றன. அதற்காகவும் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் முஸ்லிம்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை தூண்டி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. படிக்க வேண்டும் என்ற மனநிலையை மாணவர்கள் மனதில் விதைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். கல்விக்கு தடையாக நிற்கும் பொருளாதார பிரச்சினையை கல்வி உதவித்தொகைகள் வழங்கி கல்விச் சாலைகளுக்கு வழிகாட்டுகின்றனர்.
iii)    வெளிநாடு வாழ் தமிழக முஸ்லீம்களின் கல்வி விழிப்புணர்வு:
சமீப காலங்களில் வெளிநாடுகளில் வாழும் தமிழக முஸ்லீம்களிடையே கல்வி சார்ந்த விழிப்புணர்வு பிரகாசமாக எரிய துவங்கிவிட்டது. மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களை காட்டிலும் வளைகுடா நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு இந்த விழிப்புணர்வு தீ சுவாலையாக சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. காரணம், ஒரு முஸ்லீம் நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கீழ், முஸ்லீம்கள் பலர் கொத்தடிமைகளாக இளமையை இழந்து கொண்டிருக்ககூடிய அவலத்தை அனுபவிப்பதால் தான். இந்த அவலத்திற்கு முதல் முழு காரணம் தேவையான கல்வி இல்லாதது தான் என்பதை புரிந்து கொண்டதால் தான். தாங்கள் இழந்த கல்வி வாய்ப்பை தனது சந்ததிகளாவது பெற்று சிறக்கட்டுமே என்ற வெறியில் இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காக தனது குறைந்த சம்பளத்தில் சிறிய தொகையையினை தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தானமாகத் தருவதன் மூலமாகவோ அல்லது தன்னிச்சையாக செலவிடுவதன் மூலமாகவோ தனது கடமையை நிறைவேற்றிக்கொண்ட ஆத்ம திருப்தி அடைந்து வருகின்றனர்.

உலகத்தில் நூல்கள் எழுதுவதிலும், கல்விக்காக செலவழிப்பதிலும்  இஸ்லாமியர்களுக்கு எதிராக யாரும் போட்டி போட முடியாது. -  இமாம்  அல்ஜாயீ (ரஹ்)
இன்றைய இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமான மாற்றமா ?
நாம் மிகவும் சந்தோசமடைந்து கொள்ளும் மிதவேகமான மாற்றங்கள் விவேகமான பாதையில் செல்கின்றதா? இந்த மாற்றத்திற்கு ஏற்ப ஆக்கப்பூர்வமான கல்வி வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் எட்ட முடியுமா? இன்று கல்வியின் அடிப்படையில் சமுதாய மாற்றத்திற்காக செலவழிக்கப்படும் மனித ஆற்றல்களுக்கும் பொருளாதார செலவுகளுக்கும் சரியான தீர்வு கிடைக்குமா?

கடந்த சில வருடங்களாக எந்த ஒரு அமைப்பையும் சாராது அதே வேளையில் அனைத்து அமைப்புகளுடன் ஐக்கியமாகி தமிழக மாணவர்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருபவன் நான். எனது கல்வி பயணத்தில் நான் கண்ட தமிழக இஸ்லாமிய மக்களிடையே கல்வி விழிப்புணர்வு சார்ந்த அனுபவ ஆதங்கங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
கல்வி விழிப்புணர்வில் சமுதாயத்தின் தடுமாற்றங்கள்

தமிழக அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கல்வி நிலைய நிறுவனங்களும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கல்வி ஆர்வ தனவந்தர்களும் கல்வி விழிப்புணர்வு செயல்பாட்டில் தங்களை முடிந்தளவு பிணைத்துக்கொண்டு வருவது மிகப்பெரிய மாற்றமே. ஆனாலும்… சாதகமான சூழலுக்கிடையே பாதக விளைவுகளை உண்டுபண்ணும் சில தடுமாற்றங்ளை முடிந்தவரை தவிர்ப்பதன் மூலம் நமது இலக்கினை அடையும் தூரத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.அந்த வகையான தடுமாற்றங்களில்  சில…
இருட்டில் இருக்கும் இன்றைய தமிழ் இஸ்லாமிய விஞ்ஞானிகள்:

இறைவணக்கத்தில்  ஈடுபட்டிருக்கும் ஆயிரம்     வணக்கசாலிகளை விட சைத்தானுக்கு நுட்பறிவாய்ந்த ஒரு அறிஞர் மிகவும் கடினமானவர்.     (நபி மொழி- திர்மிதி)

யானை தன் பலம் அறியாது என்று சொல்லுவார்கள்…மிகப்பெரும் பலம் கொண்ட யானையை மிகச்சிறிய சங்கிலியால் கட்டி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். பலம் இல்லாத பால்யவயதில் மனரீதியாக பழக்கப்பட்டு விட்டதால்  யானையும் தன் பலத்தை சோதித்துப் பார்ப்தில்லை (மதம் பிடிக்காத வரை). மிகப்பெரும் ஆற்றல் மிகுந்த இந்த சமுதாயமும் இன்றுவரை தன்பலத்தை உணராத நிலையில் தான் உள்ளது.

இந்தியாவில் .இஸ்லாமியர்கள் முன்னேறுவதை மற்றவர்கள் அங்கீகரிப்பதில்லை என்பது நமது பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்று. ஆற்றல்மிகு இஸ்லாமிய அறிஞர்களை அடுத்தவர்கள் அங்கீகரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், இன்றைய தினத்தில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைகழகங்களிலும் ஒருசில கல்லூரிகளிலும் தங்களின் அற்புமான ஆராய்சிகள் மூலம் உலக ஆராய்சியாளர்களை திரும்பிப் பார்க்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் பல தமிழக முஸ்லீம் விஞ்ஞானிகள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது வரை இவர்களை அடையாளம் கண்டிருக்கிறோமா? அல்லது இவர்களின்  அறிவியல் சாதனைகளை குறைந்தது நம்மவர்களுக்காகவாவது அறிமுகப்படுத்தி அங்கீகரித்திருக்கிறோமா…?

மண்புழு என்ற அற்பஉயிரியை அற்புத உயிரியாக்கி இயற்கை உரம் உருவாக்கி வரும் டாக்டர். ‘சுல்தான்அஹமது இஸ்மாயில்’(சென்னை புதுக்கல்லூரி, பாசுமதி அரிசி மூலம் இந்தியாவின் அன்னிய செலவானியை உயர்த்திய அரிசி விஞ்ஞானி ‘பத்மஸ்ரீ சித்தீக்’  (இளையான்குடி), புற்றுநோய் ஆராய்சியில் திருப்புமுனை கண்ட ‘அக்பாஷா’ (பாரதிதாசன் பல்கலைக்கழகம்-திருச்சி), நுண்ணுயிரி ஆராய்சியில் புதுமைபடைத்த ‘தாஜூதீன’; (பாரதிதாசன் பல்கலைக்கழகம்,-திருச்சி), ஆழ்கடல் மீன்களில் அற்புதங்களை அள்ளித்தரும் ‘அஜ்மல்கான்’(அண்ணாமலை பல்கலைக்கழகம்-) சதுப்பு நில ஆராய்சியில் ஆச்சரியங்கள் படைத்த அப்துல் ரகுமான் (பூண்டி புஸ்பம் கல்லூரி தஞ்சாவூர்), பாக்டீரியாக்களில் மரபணுமாற்றத்தை கண்டறிந்த ‘ஹூசைன் முனைவர்’ (மதுரை காமராஜர் பல்கலைகழகம்), மாசுக்கட்டுப்பாட்டு ஆராய்சியில் புதுமை செய்த ‘அப்பாஸி’    (பாண்டிச்சேரி பல்கலைகழகம்),  மீன் இன ஆராய்சியில் புது வகை மருத்துவங்கள் கண்டறிந்த ‘முகமது அனீபா’ (புனித சேவியர் கல்லூரி – பாளையங்கோட்டை) உள்ளிட்ட இன்னும் பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகளும் பல பொருளாதார நிபுணர்களும் ,  இலக்கிய அறிஞர்களும் வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளனர்.

சிறிய செயலுக்காக பெரிய அளவில் விளம்பரப் படுத்தும் நம்மவர்கள் , பெரிய அளவில் கல்விச் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் இவர்களை குறைந்தது தமிழக முஸ்லீம் சமுதாயத்திற்குக்கூட அறிமுகப்படுத்தி  ஆவணப்படுத்தவில்லையே என்பதும் மிகப்பெரிய ஆதங்கமாக உள்ளது.

சமகாலத்தில்,நம்மிடையேயும் ஆற்றல்மிகு அறிவியல் அறிஞர்கள் உள்ளார்கள்  அவர்களும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை நம்மவர்களுக்கும் தெரியவேண்டும். இது  நமது சமுதாய இளைஞர்கள் மனதில் புரையோடியிருக்கும் கல்வி சார்ந்த தாழ்வு மனப்பான்மை வேரறுக்கும். யானைக்கு கட்டபட்ட சங்கிலி போன்று நமது சமுதாயத்தின் மீதும் சுற்றப்பட்டிருக்கும் கல்வியற்ற சங்கிலியும் தகர்ந்து போக வாய்ப்புள்ளது.
•    அமைப்புகளின் தனித்துவ முயற்சி

பெரும்பாலான ஊர்களில் நடைபெறும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்தும்பொழுது அந்த ஊரில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகள் அதை வரவேற்காவிட்டாலும் அங்கு மாணவர்களின் வருகையை தவிர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் நடத்தப்படும் பெரும்பாலான நிகழ்சிகள் வீரியம் இழந்த நிகழ்ச்சியாக முடிந்து விடுகிறது. காரணம் கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் அமைப்புகளின் தனித்துவத்தையும் அந்தந்த இயக்கங்களின் விளம்பரத்தையும்  பிரதிபலிக்கவே  முயற்சிக்கின்றனர். அத்துடன், கல்விஉதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் அந்தந்த மாணவர்களிடம் தங்களின் இயக்கம் சார்ந்த கொள்கைகளை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் மற்ற அமைப்புகளோடு இருக்கும் ஆர்வத்தை பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்ற சூழலும் ஆங்காங்கே நடக்கிறது.

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், படித்து முடித்து தனது கல்வி அறிவால் சமுதாயத்தை மேம்படுத்த இருக்கும் மாணவர்களின் மனநிலை, நமது சமுதாயத்திற்குள்ளே இருக்கும் பிரிவுகளை இன்னும் வலுப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

    கல்வியின் மூலம் பிற அறிஞர்களுக்கு நிகராகிவிட வேண்டும் என்பதற்காக அல்லது அறிவீனர்களின்  வாதம் புரிவதற்காக அல்லது அதன் மூலம் மக்களின் உள்ளங்களைத் தன் பக்கம் திருப்புவதற்காக ஒருவர் கல்வியை நாடினால் அவரை அல்லாஹ் நரகில் புகுத்துவான் .          ( நபிமொழி-திர்மிதி)

•    சிதறடிக்கப்படும் பொருளாதாரம்:
    கல்விக்காக தமிழக அளவில் ஒவ்ஒரு வருடமும் தனவந்தர்களால் செலவு செய்யப்படும் பணத்தின் மதிப்பு பல நூறு கோடிகளை தாண்டுகிறது என்கிறது புள்ளி விபரம். கல்விக்காக இஸ்லாமியர்களால் வழங்கப்படும் பெரும்பாலான பொருளாதாரம் முறைப்படுத்தப்படாமல் சிதறடிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. முறைப்படுத்தப்படாத கல்வி உதவித்தொகையால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பெரும்பாலான பணம் கல்விக்காக அல்லாமல் பலநூறு மாணவர்களின் பாக்கெட் மணியாக கரைந்து போகிறது என்பதும் நடைமுறை உண்மை.
•    கல்வி நிலையங்கள் துவங்காத சமுதாய அமைப்புகள்
    இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் சமுதாய இயக்கங்களை தங்கள் கல்வி நிறுவனங்களுக்குள் ஊடுருவ அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் கல்வி விழிப்புணர்வு பேசும் எந்த ஒரு சமுதாய இயக்கங்களும் தங்கள் பங்கிற்கு ஓரிரு உயர்கல்வி நிலையங்களையாவது உருவாக்குவது பற்றி இது வரை சிந்திக்கவும் இல்லை. இதை சாதிப்பதற்கான திறனும் ஆற்றலும் இருந்தும் சமுதாய இயக்கங்கள் ஒதுங்குவதும் புரியவில்லை.
•    பணத்திற்காக படிக்கும் மாணவர்கள்
    கல்வி ஆர்வலர்களும் சமுதாய அமைப்புகளும், அரசு மற்றும் சிறுபான்மை பிரிவுகளும், வெளிநாட்டு வாழ் தனவந்தர்களும் கல்விக்காக ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய அதிக அளவு ஆர்வம் காட்டும் காலகட்டம் இது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிறு எண்ணிக்கையில் பெற்றோர்களும் மாணவர்களும் கல்வி உதவி தொகையை பல இடங்களில் பெறுவதில் படிப்பதை காட்டிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது ஒரு கசப்பான உண்மை. ஒரு பட்டப்படிப்பிற்கு ஒரு ஆண்டு ஆகும் செலவை காட்டிலும் ஐந்து மடங்கு வசூல் செய்யும் அவலமும் மறைமுகமாக நடக்கிறது. இதனை, “படிக்கும் மாணவர்கள் தானே போகட்டும்” என்று ஜீரணித்துக்கொண்டாலும் இந்த மனநிலையில் உள்ள மாணவர்கள் மூன்று, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பட்டப்படிப்பையும் சரியாக முடிக்காமல் வெளியேருகின்றனர் என்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. முறைப்படுத்தப்படாத கல்வி உதவி இது போன்ற முறையற்ற மாணவர்களை வளர்க்க வழி வகுக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் , நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்.  ( நபி மொழி)


கல்வி விழிப்புணர்வில் உண்டான பாதகங்களை சாதகமாக்க முடியுமா?

ஓவ்வொரு வருடமும் பெரும்பாலான ஊர்களில் கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் நம்மிடம் உண்டான இந்த விழிப்புணர்வு நமது கல்விச் சரிவை சரிகட்டும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்பது தான் இன்றைய நிலை. அதற்கு என்ன தான் செய்ய முடியும்?

 நமது இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் நின்று கல்வி விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கலாமா …?  என்ன…!
நம்ம தமிழக சமுதாய இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்வதா?
ம.;.ம்…ம். அது கனவிலும் நடக்காத ஒன்று…

இறைவன் நினைத்தால் தவிர சாத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். இருந்தாலும், ஓவ்வொரு இஸ்லாமிய இயக்கங்களும, அமைப்புகளும், அறக்கட்டளைகளும், வெளிநாட்டு கல்வி ஆர்வலர்களும் தனித்தனி பாதைகளில் சென்றாலும், அவரவர்கள் கல்விப் பணிகளை தடுமாற்றமில்லாமல் செய்வதற்கு…

    தங்களின் சுயவிளம்பரம் தவிர்த்து வீரியம் மிக்க கல்வி விழிப்புணர்வு செயல்பாடுகளை தொடரலாம். ஆற்றல் மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு தத்தெடுத்துக் கொள்ளலாம். ஓவ்வொரு அமைப்பும் ஊருக்கு சில மாணவர்களை முழுமையாக தத்தெடுத்துக் கொள்ளலாம். உயர்நிலை கல்வியிலிருந்து உட்சபட்ச கல்வி வரை பொருளாதாரத்திற்கு பொறுப்பேற்றுக்கொள்ளலாம்.

     கல்வி உதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் மாணவர்களுடைய முழு படிப்பு செலவையும் ஏற்கும் பொழுது, ஒரே மாணவர் பலரிடம் கேட்கும் வாய்ப்பு குறைகிறது. தத்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை வெளியிடலாம்.  வெளியிட விரும்பாவிட்டால், கொடுக்கப்படும் உதவித் தொகை அந்தந்த கல்வி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த முயற்சி செய்யலாம்.

     தமிழக அளவில் உள்ள பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு கல்லூரிகளிலும் அனுபவமிக்க பேராசிரியர்களும், ஆற்றல் மிகுந்த விஞ்ஞானிகளும் வெளி உலகத்தின் கவனத்திற்கு வராமல் அமைதியாக அதே வேளையில் சமுதாய பணி செய்ய சரியான தொடர்பு கிடைக்காமல் ஒரு பெரிய அறிவுஜீவ கூட்டங்களே மறைந்திருக்கிறது. இவர்களை ஒருங்கிணைத்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாய கல்வி வளர்ச்சிக்கு எளிய வழி காணலாம்.

    இஸ்லாமிய கல்லூரிகளின் எண்ணிக்கை பெருக வேண்டும். தங்களுடைய பொருளாதாரங்களை கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்ய முன் வர வற்புறுத்தலாம். குறைந்த பொருளாதார வசதி இருந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலர் ஒன்று சேர்ந்து பொருளாதாரத்தை உருவாக்கி கல்வி நிலையங்களை புதிதாக உருவாக்குவதற்கு உகந்த காலகட்டம் இது. ஓரளவு சேவை நோக்கோடும் அதிக அளவு வியாபார நோக்கோடும் கல்வி நிலையங்கள் தொடங்க இது உகந்த சூழல். காரணம், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்திய அளவில் பல ஆயிரக்கணக்கான புதிய உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. அதை நமது இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     இன்றைய சூழலில் பட்டப்படிப்பு முடித்து விட்டாலும் மாத்திரம் அரசு பதவிகளில் அமர்ந்துவிடும் வாய்ப்புகள் சிறிதளவிலும் கிடையாது. காரணம், அரசு பதவிகளுக்கு அந்தந்த துறை சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்று உயர்கல்வியில் காட்டும் ஓரளவு ஆர்வத்தை பல்வேறு துறைகள் சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதிலும் காட்ட வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் முயற்சிகளில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போட்டி போட வேண்டும்.

    அரசுப்பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற சமுதாய ஆர்வலர்களை     ஒன்றினைப்பதன் மூலம் சமுதாயக் கல்விப்பாதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.

     சமுதாயத்தின் மிகப்பெரும் வரப்பிரசாதம் ஜும்மாமேடைகள். இங்கு மார்க்க விசயங்களோடு கல்வி விசயங்களையும் பேச அனைத்து பள்ளிகளிலும் அனுமதித்தால் அது சமுதாய மறுமலர்சிக்கு நிச்சயம் வழிதரும்.  


இது போன்று ஒருசில முயற்சிகளில் இந்த சமுதாயம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்பொழுது தான் நிச்சயமாக இந்த விழிப்புணர்வு பலன் உள்ளதாக இருக்கும். சமீபத்தில் சினிமா கயவர்களால் சித்தரிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான துப்பாக்கி சத்தம் வெளியேறுவதற்கு முன்பாகவே அதன் தோட்டாக்கள் பிடுங்கப்பட்டது நமக்கு தெரியும். இந்த சினிமா கயவர்களின் சித்தரிப்பு நாடகங்கள் நம்முடைய சமுதாய இயக்கங்கள் ஓரளவு ஒன்று கூடியதனால் முறியடிக்கப்பட்டது.

அறிவைப் பெறுங்கள் . அது தன்னை நல்லது இது, தீயது இது எனப் பகுத்தறியச் செய்யும். மேலும் மேலுலகத்திற்கு வழிகாட்டும். காட்டில் தோழனாகவும் ஏகாந்தத்தில் சமூகமாகவும், தோழன் இல்லாத சமயத்தில் தோழனாக இருக்கும். சந்தோசமான வாழ்விற்கு வழிகாட்டும். தோழர்களின் மத்தியில் ஒரு ஆபரணமாகவும் இருக்கும். பகைவர்களிடையே ஒரு ஆயுதமாகவும் இருக்கும்.    என்ற நபிமொழியின் அடிப்படையில்…

இறைவனின் அருட்பெரும் கொடையான கல்வியை நமது சமுதாயம் பெற்று நம்மையும் நம்முடைய சமுதாயத்தையும் உலகாளச் செய்யும் தகுதியை வளர்ப்பதற்கு கல்வி எனும் இந்த ஒன்றுக்காக வேண்டியாவது நாம் ஒன்றிணைய வேண்டும் என்று ஒவ்வொருவரும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம்.
முடிவாக…

உண்மையான மனநிலையில் சரியான இலக்கோடு ஆக்கப்பூர்வமான வழியில் உயர் கல்விக்கான தேடலில் தமிழக இஸ்லாமிய சமுதாயம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. தற்போது இருக்கும் கானல்நீர் போன்ற விழிப்புணர்வை முழுமையாக நம்பினால் வாழ்நாள் முழுவதும் விழித்துக்கொண்டே இருக்க வேண்டும்.  விடியலை நோக்கி…

இன்ஷா அல்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் மிக விரைவில் வெளிச்சத்தில் வைக்க வேண்டும் . ஆமீன் … ஆமீன்..

கட்டுரையாளர் மற்றும் கட்டுரை பற்றி:
சகோதரர் ஆபீதீன் ( Dr.  Captain.   S.ABIDEEN ) இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக பணி புரிகிறார். ( Assistant Professor  of Zoolgoy, Dr.Zakir Husain College , Ilayangudi)  . கல்லூரி விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு  இஸ்லாமிய பகுதிகளில் உள்ள   பள்ளி கல்லூரிகளில்  உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள், தன்நம்பிக்கை மேம்பாட்டு பயிற்சிகள்  குறித்த சிறப்பு நிகழ்சிகளை நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் 250 க்கும் மேற்பட்ட  நிகழ்சிகள் மூலம்  ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை அல்லாஹ்வின் உதவியால் சந்தித்து  கல்வி விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். . தனது கல்விப் பயணத்தில் அவர் கண்ட அனுபவங்களும் ஆதங்கங்களுமே இந்த கட்டுரை வரிகள்.
நன்றி : இஸ்லாமியப் பெண்மணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails