Tuesday, December 3, 2013

'ஹிந்து' குறித்து இஸ்லாம்!

ஹிந்து - ஹிந்துஸ்தான் - ஹிந்துத்துவா என்ற பெயர்கள் இப்பொழுது இந்தியா முழுவதும் பிரச்சினைக்குரிய பெயர்களாக சில அரசியல்வாதிகளாலும்,

சில மதவாதப் பேர்வழிகளாலும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விட்டன.

ஹிந்து என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களான எந்த வேதங்களிலும் கிடையாது. அது பகவத்கீதை,  மஹாபாரதம், இராமாயணம், பவிஷ்ய புராணம் அல்லது ரிக், யஜூர், சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களிலும் ஹிந்து என்ற மூன்று எழுத்தே இல்லை என்று வாதிடுகிறார்கள். வாதிடுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வரலாற்று ஆய்வாளர்களும், சரித்திர வித்தகர்களும் தான்.


ஹிந்த் என்ற வார்த்தையை தீர்க்கமான ஆதாரமாக இஸ்லாம் தான் நிரூபித்துக் காட்டியுள்ளது. இவற்றிற்கு ஆதாரமாக முஸ்லிம்களின் புனிதமிக்க ஆலயமான 'கஅபா'வின் ஒரு முனைக்கு (ருக்னுல் ஹிந்த்)  ஹிந்த் முனை என்று ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளது.
   
நபிகள் நாயகம் அவர்கள் திருக் கபாவின் அருகில் நின்று ஒரு மாலைப்பொழுது தமது ஜூப்பாவைத் திறந்த வண்ணம் இந்தியாவின் திசை நோக்கி நின்று இப்படி கூறியுள்ளார்கள். நான் ஹிந்த்துவிலிருந்து (தவ்ஹீத்) ஏகத்துவ தென்றலை உணர்கின்றேன். என்றும், மேலும் ஒரு முறை கூறியுள்ளார்கள். நான் ஹிந்த்வில் இருக்கிறேன் என்னில் ஹிந்த் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

மேலும், நபிகளாரின் தோழர்கள் இந்தியாவிற்கு வந்து தமது வணிகத்தை முடித்துக் கொண்டு, இந்தியாவில் இருந்து கொண்டு வந்த புளியை நபிகளாருக்கு முன்னால் வைத்தார்கள்.  நபிகளார் அவர்கள் தமது விரலால் புளியைத் தொட்டு தமது நாக்கில் வைத்துக் கொண்டே இது (தமருல் ஹிந்த்) இந்துஸ்தானத்தின் பேரிச்சம் பழமா? என்று கேட்டுள்ளார்கள்.
   
ஒரு முறை கஃபு இப்னு சுஹைர் என்ற கவிஞர் நாயகத் தோழர் நபிகளாரை வர்ணித்துப்பாடும் போது 'தங்களின் திருவதனம் அல்லாஹ்வினால் உருவாக்கப்ட்ட ஹிந்துஸ்தானத்தின் வாளாகும்' என்றார்கள்.  ஆக 'ஹிந்த்' என்ற வார்த்தை நபிகள் நாயகம் அவர்களின் காலத்திலேயே புழங்கப்பட்டதாக வரலாறு உண்டு.

ஹிஜிரி 10ஆம் ஆண்டு காலித் அவர்கள் நஜ்ரான் நாட்டிலிருந்து வந்த போது அவர்களுடன் 'பனூஹாரிஸ்' கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வந்திருந்தது. அவர்களைக் கண்டதும் இவர்கள் அல்ஹிந்த்விலிருந்து வந்தவர்கள் போன்றுள்ளதே என்றார்கள்.

இஸ்லாமிய தொடக்க காலத்தில் நபிகளாரின் எதிரியாக இருந்த அபூசுஃப்யான் (பின்னாளில் இவர் இஸ்லாத்தை தழுவினார்) அவர்களின் மனைவியாருக்கு 'ஹிந்தா' என்று தான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அரேபிய பாலைவனத்திலிருந்து வணிகக் கூட்டங்கள் அடிக்கடி இந்தியா சென்று வந்ததன் நினைவாக அப்பெண்ணுக்கு 'ஹிந்தா' என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.
   
இந்தியாவின் தென் கிழக்கே உள்ள இந்தோ-ஏசியா என்ற நாடு பூர்விகத்தில் ஹிந்து நாடாகவே இருந்தது. இஸ்லாத்தின் பக்கம் அநாட்டு மக்கள் ஈர்க்கப்பட்டதன் பின் ஹிந்தோனேசியா என்று மறுவி, தற்பொழுது இந்தோனேசியா என அழைக்கப்படுகிறது. இன்றும் அந்நாட்டில் பூர்விகக் கலை நிகழ்ச்சிகளில் இராமாயணம், மஹாபாரதம் போன்ற நாடகங்கள் நடத்தப்பட்டு  வருகின்றன.
   
உலகில் ஆதி மனிதன் ஆதம் தோன்றிய இடம் இந்தியா தான். கடல்கோள் நிகழ்வுக்கு முன்பு கடலால் பிரிக்கப்படாத நிலப்பகுதியாக இருந்தது தான் தமிழகம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
   
தற்போது உள்ள இலங்கையில் ஆதம் மலை என்று அழைக்கப்பட்டு வரும் அம்மலையின் மீது தான் மனித குலத்தின் முதல் மனிதன் ஆதம் அவர்களை சுவனத்தில் இருந்து இறைவன் பூமிக்கு இறக்கியதாகவும், அவர்கள் பாதச்சுவடுகள் அங்குள்ள குன்றின் மீது பதிந்துள்ளதாகவும், யூத, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.  ஆதம் அவர்கள் தோன்றிய இடமாகக் கருதப்படும் இடத்திலுள்ள பாதச்சுவடுகளை, இந்துக்கள் சிவனொளி பாதம் என்றும், பௌத்தர்கள் ஸ்ரீபுத்த பாதமென்றும் கூறி வழிபடுகின்றனர். அதே போல் ஆதம் மலைக்கு அண்மையில் கால்கோள் நிகழ்ந்ததால், நிலம் பிரிக்கப்பட்டு தற்போது கடல் தோன்றியுள்ள பகுதியை, ஆதம்பாலம் என்றும், அதனை ஒட்டியுள்ள ராமேஸ்வரம் நிலப்பகுதியில் ஆதம் அவர்களின் வம்சாவழிகளான ஆபில், காபில் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடமும் உள்ளது.

அரேபிய வணிகர்கள் இலங்கைக்கு வந்து திரும்பும் பொழுது சேர நாட்டை ஆண்ட மன்னர் சேரமான் பெருமாள் அரபு வணிகர்களுடன் சேர்ந்து அரேபியா சென்று இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிமான  முதல் இந்து மன்னர் என வரலாறு கூறுகிறது. எனவே இந்தியாவிற்கும் இஸ்லாமியர்களுக்கும் நீண்ட தொடர்பு பண்டைய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது என்பதனை இத்தகைய வரலாறுகள் மூலம் அறிய கொள்ளலாம்.

ஆதார நூல்கள்:
1. சோழச் சுடரொளி, குந்தவை நாச்சியார், ஏ.கே.ராசன்
2.. சமுதாய வீதியில் சன்மார்க்கப்பித்தன், எஸ்.எம்.கனிசிஷ்தி
3.. மறைக்கப்பட்ட வரலாறும், மறைக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன்
4. .சேரமான் பெருமாள், சி.எம்.என்.சலீம்
5.. விடுதலைப்போரில் முஸ்லீம்கள், வி.என்.சாமி

கட்டுரையாளர் : வைகை அனிஷ்
Source : http://inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails