Sunday, June 23, 2013

வெற்றி மீது வெற்றி வந்து

வாழ்க்கையில் வெற்றி

வெற்றி! வெற்றி! எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! எல்லாம் வெற்றி! வாழ்க்கையின் தாரக மந்திரமே வெற்றி. உலகமே வெற்றியை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. வென்றவர்களை மட்டுமே வரலாறு வரவு வைக்கிறது. வெற்றியின் சூட்சுமம் தெரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள்.


ஒரு வியாபாரி தன்னுடைய கடையைத் திறந்து வியாபாரம் செய்கிறார். அவரின் கனிவான பேச்சால் கவரப்பட்ட வாடிக்கையாளர்கள் மனமகிழ்வோடு பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். அதிகமான வியாபாரம்; நிறைவான லாபம்; இது வியாபாரி காணும் வெற்றி.

நுகர்வேர் தரமான பொருளைச் சரியான விலை கொடுத்து, ஏமாறாமல் வாங்கிச் சென்றால் அது நுகர்வோரின் வெற்றி.

தரமான பொருளைத் தயாரித்து நியாயமான விலை வைத்து பொய் சொல்லாமல் விளம்பரம் செய்து விற்பனை செய்தால் அது தயாரிப்பாளரின் வெற்றி.

விற்பனையாகும் பொருளுக்கு நியாயமான வரிவிதித்து நேர்மையாக வசூலித்து அரசின் கஜனாவில் சேர்த்தால் அது அதிகாரியின் வெற்றி.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி நீதியான நேர்மையான ஆட்சியை வழங்கினால், அது ஆட்சியாளர்களின் வெற்றி.

நல்வழிக்கு அழைப்போர், மெய்யான நல்வழிக்கு அழைத்தால் அது அவர்களின் வெற்றி.

அழைப்பை ஏற்று, உண்மையை உணர்ந்து இறைவனை மட்டும் ஏற்றால் அது நம்பிக்கையின் வெற்றி.

ஆக ஒவ்வொரின் செயலுக்கேற்ற வெற்றிகள் கிடைத்தாக வேண்டும்.

யார் எதைச் செய்தால் வெற்றி பெறலாமா? வெற்றி என்றால் என்ன என்பதை திருக்குர்ஆன் பின்வருமாறு சொல்கிறது.

''(இறைக் கட்டளைகளை) நம்பி, தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தைக் கொடுத்து (அல்லாஹ்வுக்குப்) பணிகிறவர்களே வெற்றியாளர்கள்.' (திருக்குர்ஆன் 5:55)

''நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் ஒரு கூட்டத்தார் உங்களில் இருக்கட்டும். அவர்களே வெற்றியாளர்கள்' (திருக்குர்ஆன் 3:104

''இறைவழியில் போரிடுங்கள்! நீங்கள் வெற்றிபெறலாம்.'

(திருக்குர்ஆன் 5:35)

''அல்லாஹ்வின் கூட்டத்தினரே பெரும் வெற்றியாளர்கள்'.

(திருக்குர்ஆன் 5:36)

''அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகிறவர் மகத்தான வெற்றி பெற்றார்.'

(திருக்குர்ஆன் 33:71)

''(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.'

(திருக்குர்ஆன் 7:8)

''மறுமையில் வேதனையை விட்டும் காக்கப்படுவதே தெளிவான வெற்றி.' (திருக்குர்ஆன் 6:16)

''அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)

வெற்றி பெறும் பொருட்டு நன்மையையே செய்யுங்கள். (திருக்குர்ஆன் 22:77)

வெற்றியைப் பற்றி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகளையும் காண்போம்.

அழகு, செல்வச் செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று ஆகிய நான்கு விஷயங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வாழ்வில் வெற்றியடைந்து கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(நூல்: புகாரி, திர்மிதி 1092)

அழகி: திருமணம் செய்ய முன்வரும் இளைஞர்கள் பெண் அழகாக இருக்க வேண்டும் என்பதை முதன்மையாகக் கொள்கிறார்கள். தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும் இதில் விதிவிலக்கல்ல. அழகை மட்டுமே விரும்பி திருமணம் செய்வது முழுமையான இஸ்லாமிய திருமணமாக இருப்பதில்லை. பின்னர் வாழ்க்கையிலும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அழகுடன் நபி(ஸல்) அவர்கள் போதித்துள்ள பண்புகளும் இருந்தால் சிறப்பாகும்.

பணக்காரப் பெண்: தனக்கு வரவிருக்கும் மனைவி பணக்காரப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் இலட்சியமாகக் கொண்டவர்கள் கௌரவப் பிச்சைக்காரர்களின் பட்டியலில் இடம் பெறக்கூடும். கௌரவப் பிச்சையான வரதட்சணை வாங்கி வாழ ஆசைப்படும் இழிபிறவிகளும் பெண் பணக்காரியாக இருக்க வேண்டும் என விரும்புவர்களும் தன்னம்பிக்கையில்லாத மூடர்கள். மருமகளை பணம் காய்க்கும் மரமாக நினைக்கும் மாமனார், மாமியாரை எந்த மருமகளும் மதிக்கமாட்டாள். விற்பனையாகிப் போன மகன் வாங்கிய மனைவிக்கு விசுவாசமாக இருக்கிறான். இது மாதிரியான குடும்பங்களில் என்னுடைய மகன் எங்களுக்கு உதவுவதில்லை எனப் பெற்றோர் கூப்பாடு போட நேரிடுகிறது. இதற்கு பெற்றோர்களே காரணமாகிறார்கள்.

வரதட்சணை விரும்பிக் கேட்கும் மணமகன் ''உழைத்து மனைவி மக்களை காப்பாற்றும் தன்மானமில்லாதவன்; சோம்பேறி மனைவியைத் துன்புறுத்தி பிறந்த வீட்டில் பணம் வாங்கி வரச்சொல்லும் பணப் பைத்தியம். இவனுக்கு தன்மீதும், உழைப்பின் மீதும் நம்பிக்கை இல்லை. நம்பக் கூடியவர்களுக்கு இறைவன் ஓர் உறுதியளிக்கிறான்.

''(மணமக்களாகிய) அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன்னுடைய நல்லருளால் அல்லாஹ் அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்'

(திருக்குர்ஆன் 24:32)

உண்மையாகவே உழைப்போருக்கு அல்லாஹ் அதிகமாக அருள்வான். மனிதனுக்கு மனிதன் தருவது எப்போதும் குறைவாகவே இருக்கும். உழைப்பின் மூலம் இறைவன் அருளும் வசதி நீடித்திருக்கும். பெண் வீட்டாரிடம் பிச்சை வாங்கி வசதியைப் பெறுக்க நினைத்தால் அது இடையிலேயே அழிந்துவிடும். பணக்காரப் பெண்ணை விட பண்புள்ள பெண்ணே சிறந்தவள் என்பதை இன்றைய பெற்றோர்களும், இளைஞர்களும் அறிய வேண்டும்.

பாரம்பர்யம்: நாங்கள் கௌரவமான பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள், எங்களுடைய முப்பாட்டான் காலத்திலிருந்தே பள்ளிவாசல்களின் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் நாங்கள்; நாட்டமைகள் நாங்கள். சிறந்த பாரம்பரியம் உள்ள வீட்டில் மட்டுமே சம்பந்தம் பண்ணுவோம். எனப் பெருமை பேசுவோரும் முஸ்லிமிலும் இருக்கிறார்கள். பாரம்பரியத்தை பிரதானமாக வைத்து பெண் கொடுப்பவர்களும், எடுப்பவர்களும் இறையச்சத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. வரட்டுக் கௌரவத்தையே இலட்சியமாகக் கொண்ட இவர்கள் பெருமையின் தந்தையான ஷைத்தானின் உறவினர்களா என்ன?

இறையச்சமுள்ள பெண்: மனைவியாக வரும் பெண்ணிடம் பார்க்க வேண்டிய முதல் தகுதியே இறையச்சம் தான். இவர்கள் அழகில், பொருளாதாரத்தில் குறைந்திருப்பார்கள் எனக் கூறமுடியாது. இறையச்சமுள்ளவர்களிடம் அனைத்தும் ஒன்று சேரலாம் அப்படி இருப்பின் அது மிகமிகச் சிறந்த நிலையை அடைந்ததாகும். அப்படியே அழகும், செல்வமும் குறைவாக இருப்பின் அவர்களின் பண்புகளால் அனைத்தையும் வெல்லும் ஆற்றலைப் பெறுவார்கள். அதை அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பான். பணம், அழகு இருந்தாலும் நிம்மதி இல்லை என்றால் வாழ்க்கையே வீணாகிவிடும் என்பதை அன்றாட வாழ்க்கையில் காணலாம். சுந்தரிகள் என்று போற்றப்படும் உலக அழகிகளையும், நடிகைகளையும் மணந்தவர்கள் எத்தனைபேர் செல்வச்செழிப்பு இருந்தும் நிம்மதியற்ற நிலையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை அன்றாடச் செய்திகளில் அறிந்து கொண்டுதானிருக்கிறோம்.

மனைவியை திருத்துவது சற்று கஷ்டமான விஷயம்தான். மனைவி திருந்தினால் குடும்பமே திருந்திவிடும்; தெளிவாக இருக்கும். திருந்தாத மனைவியோடு திருப்பதியாக வாழமுடியாது. பெயருக்காக வாழ்வதில் அர்த்தமேயில்லை. பிள்ளைகளுக்காக வாழ்வதில் அர்த்தமிருந்தாலும் மனைவியிடமிருந்து நிம்மதி தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

இறையச்சமுள்ள பெண்ணை இல்லத்தரசியாக்கினால் வாழ்க்கை வசந்தமாகவே இருக்கும்.

வாழ்க்கையின் இத்தேர்வில் கோட்டைவிட்டவர்கள் குறைவுடைய வாழ்க்கை வாழ்ந்ததாகவே கருதப்படும். நிறைவான வாழ்க்கைக்கு இறையச்சம் நிறைந்த பெண்ணே சிறந்தவள். எனவே தான் நிம்மதியை அளிக்கும் பெண்களான இறையச்சம் நிறைந்த பெண்களை உங்களுடைய மனைவியராகத் தேர்வு செய்யுங்கள் என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இவ்வழியைப் பின்பற்றினால் நிம்மதியான நிறைவான வாழ்க்கையில் இம்மை தொடங்கி மறுமையிலும் தொடரும் அந்த மகத்தான வெற்றி.

Source : http://almighty-arrahim.blogspot.com/

1 comment:

Riyaz Ahamed said...

இறையச்சம் உள்ள மனைவி இருந்தால் நம் வாழ்கையில் மற்ற அனைத்தும் கிடைக்க வாய்ப்புள்ளது. எல்லாம் இருந்தும் மனைவியின் நிலை வேறு என்றால் அதில் நிமதி கிடைப்பதே சந்தேகம் தான்

LinkWithin

Related Posts with Thumbnails