Saturday, June 15, 2013

”யார்?”

 
அந்தரத் தோரணம் வானவில்

.. அழகை இறைத்தவன் யார்? - பிறைச்

சந்திரன் கூடவே தாரகை

.. சமைத்து மறைத்தவன் யார்?


வண்ணத்துப்  பூச்சிகளில் வரிகளை

.. வகையாய் நெய்தவன் யார்? - எழில்

எண்ணற்றப் பூவினங்கள் மணங்களை

.. எழுப்பச் செய்தவன் யார்?


பகலும் இரவும்  மாறிவர

.. பூமியைச் சுழற்றுபவன் யார்? - வாழ்வில்

சுகமும் துயரும் மாறிவரச்

.. சோதனை வழங்குபவன் யார்?


மாமறையை வழங்கி போதனைக்கு

.. மாநபியைத் தந்தவன் யார்? - அதனை

தேமதுர நடையில் ஓதுவோர்க்குத்

.. தேர்ச்சிகளைத் தந்தவன் யார்?


ஓடை களில்நீர் உருண்டெழுந்தால்

.. ஓசைகளை அமைத்தவன் யார்? - சிறு

காடைக் குருவிச் சிறகடிக்கக்

.. காற்றைச் சமைத்தவன் யார்?


சொற்களிட்  பொருளைப் புகுத்திச்

..  சுவையறிவுப் படைப்பவன் யார்? - பசும்

புற்களில் உறங்கும் பனியை

.. பகலவனால் துடைப்பவன் யார்?




அணிஅணி யாக  மரங்களை

..அழகுற வைத்தவன் யார்? - அவற்றுள்

பிணிகளைப் போக்கும்  மருந்தினைப்

.. பிழையறத் தைத்தவன் யார்?


தூணின்றி வானை உயரத்

...தூக்கி வைத்த இறைவன் - எவனோ

வீணின்றி வாழ்வை உனக்கு

..வாய்ப்பாய்த் தந்த அவன்தான்

கவியன்பன் கலாம்

 இலண்டன் வானொலியில் கவியன்பன் கலாம்  கவிதை



வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com  (கவிதைச்சோலை) மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails