Sunday, May 27, 2012

பதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் !

 பாரம்பரியம் மிக்க அதிரைப்பட்டினம், நம் சமுதாய மக்களின் நன்னெறிகளாலும் அவர்களின் இயல்பான பண்பாலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கோலோச்சினார்கள், அதிமுக்கியமாக மார்க்க விஷயத்திலும், நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்வதிலும். காலச் சூழல், இளமையை தொலைத்திட வெளிநாடு/வெளியூர் சென்ற இரண்டு தலைமுறை சமுதாயம், அவரவர்களின் இருப்பிடம் திரும்பி நிம்மதியாக இருக்கலாம் என்று திரும்ப நினைத்தாலும் அச்சமே அவர்களை ஆட்கொள்வதாக பரவலாக இருக்கும் புலம்பல்கள்.

இளமையின் இரகசியம் அறியாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை, ஆனாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று சட்டமாக்கப்படாத சாபத்தின் சஞ்சலங்களை கட்டாய கடமை போன்று பின்பற்றி அதன் போக்கிலேயே கடந்த இரண்டு தலைமுறை தொலைத்தது தனது இளமையை என்று சொன்னால் மறுக்க யாரும் கொடிதூக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அவ்வாறான சூழ்நிலைகள் இனியும் நிகழாவண்ணம், இனிவரும் தலைமுறை / இப்போது தலையெடுக்கும் தலைமுறை என் குடும்பம், என் வீடு, என் ஊர், என் நாடு என்று வட்டங்களிட்டு அவைகளுக்குள் சுழல கற்றவர்களாக எழுந்து வருவது ஆரோக்கியமே, இதனை அவ்வாறே நிலைத்திடவும் உறுதி கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

மேற்சொன்னவைகள் தலைப்பிற்கு எவ்வித சம்பந்தமில்லாதது போன்று தோன்றினாலும், அன்றைய அல்லது அவைகளை கடந்து வந்த தலைமுறைகள் அனுபவிக்கும் இன்றைய சூழலின் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை....

15 வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல்களில் நாற்காலிகள் என்று இருக்கும் அவைகள் தொழுகை அல்லாத நேரங்களில் பயன்படுத்தவும் அல்லது அதில் ஏறி நின்று மோதினார் ஒட்டடை அடிக்கவும், அல்லது கடிகாரத்தின் முட்களை சரியாக நிமிரித்தி வைக்கவும் என்றுதான் இருந்தது. அவைகளில் வெளிப் பள்ளியில் ஒன்றோ இரண்டோ இருக்கும் அல்லது மோதினார் தங்கியிருக்கும் அரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய சூழலில், தொழுகைக்கான சஃப்பிலும் மற்றும் இதர காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்றால் அங்கேயும் சரி நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதில் வயது பேதமில்லை, இளயவர்களும் முதியவர்களும் என்று அதிகரித்திருப்பது சொல்லாமல் எதனையும் சுட்டிக் காட்டவில்லை, தலையில் அடித்து சொல்வது ஆரோக்கியத்தினை பற்றிதான்.

தொழுகைக்காக பள்ளிக்குள் நாற்காலிகள் ஓரத்தில் வரிசையாக வைக்கப்ப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு நடுத்தர வயதுடையவர் தொழுது கொண்டிருந்தார் ஜமாத்தாக... அதன் பின்னர் இரண்டாவது ரக்காத்தில் இணைந்து கொள்ள மற்றொரு சகோதரர் அங்கே நெருங்கியபோது பின்னால் நின்ற அந்த சகோதரருக்கு முன் சஃப்பில் இருந்த நாற்காலியின் பாதிபாகம் பின் சஃப்பில் இருந்ததால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தக்பீர் கட்டிவிட்டார் அப்போது அது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த்தால்...


தொழுகை முடிந்ததும், நாற்காலியில் முன்னே தொழுத நடுத்தர வயது சகோதரர் சற்றே கோபத்துடன் ‘யார்ரா இங்கிருந்த நாற்காலியை எடுத்தது’ என்று நாற்காலி(!!?) பறிபோன கோபத்தில் கேட்டார், பின்னால் நின்ற சகோதரர் தொடர்ந்து தொழுது கொண்டிருந்ததால் அவரின் தொழுகையை முடித்ததும், ‘நான் தான் செய்தேன், நீங்கள் நிலையாக நின்று தொழுது கொண்டிருந்தீர்கள் அதோடு பின்னால் இருந்த சஃப்பிற்கு இடமில்லாமல் இருந்தது அதனால்தான் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார்... அவரும் பரவாயில்லை என்று அமைதியாக சென்று விட்டார்....

அதன் பின்னர் பள்ளியை விட்டு வெளியில் வரும்போது, நாற்காலியில் அமர்ந்து தொழுதவரோடு பேசிக் கொண்டிருந்தவர் அருகில் இருந்தவரிடம் "தரையில் அத்தஹ்யாத்தில் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை அதனால்தான் சேர் போட்டு தொழுகிறேன் என்றார் அதற்கு அவரின் நண்பர் "உனக்கு எந்த வியாதியும் இல்லையே, வெளிநாட்டிலும் இப்படித்தான் சேர் போட்டு தொழுவியா என்று... ?" அவரோ "அங்கேயெல்லாம் சஃப்பில் நின்றுதான் தொழுவேன் ஊருக்கு வந்ததும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கிறது....." என்றார்..

இவ்வாறான உரையாடல்களை கேட்டு விட்டு அங்கிருந்து நகரும்போது பழைய நினைவுகளை நோக்கி (MSM-n மற்றும் ஜஸீலா காலத்து அப்பாக்களை) அசைபோட்டேன்.... அதிகமான வயதுடைய மூத்தோர் எவரையும் அப்போது நாற்கலிகளில் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றியதாகவோ அல்லது, மார்க்க பயான்கள் கேட்டதாகவோ அதிகம் நினைவில் இல்லை... அது அவர்களின் ஆரோக்கியத்தையும் உழைப்பையும், காட்டியது.

எத்தனையோ பெரியவர்கள் தரையில் அமர்ந்தபடியே தொழுவதை கண்டிருக்கிறோம் அன்றும் இன்றும், நாற்காலி போட்டு அமர்வதற்கு ஒரே காரணம் தரையில் அமர்ந்தால் எழுந்திருக்க முடியாத சூழல், கால் மடக்கி உட்கார முடியாத நிலை, நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்தால் எழுந்து நடப்பதில் சிரமம்... ? இவைகள் எதனால் ?

ஏன் இப்படியான நிலை? அச்சமாக இருக்கிறது !

-அபுஇபுறாஹிம்
http://adirainirubar.blogspot.in/2012/05/blog-post_27.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails