Monday, September 19, 2011

ஆத்மார்த்தமாய்....


ஆத்மார்த்தமாய்....


மண்டபம் நிரம்பி வழிய
மணக்கோலத்தில் செல்லமகள்
மார்போடு அணைத்ததும்
படபடவென துடித்த நெஞ்சம்
பாசத்தால் பரிதவித்து
புதுவித மன
பாரத்தால் துடித்தது


மழலையான வயதினிலே-என்
மடிசுமந்த முத்துமகள்
மழலையாகி மங்கையாகி
மாலைசூடி மணக்கோலம் பூண்டு
மருகிக்கொண்டே
மறுவீடு செல்லும் நேரம்


சுமந்த மடி சுருங்கி கதற
சுணங்கி சுணக்கி இதயம் நொருங்க
சுரந்து சுரந்து விழிகள் கலங்க
குருதி மொத்தம் நரம்பில் உறைய
குரலும் நடுங்கி உதறி உடைய
சொல்லயியலாச் தாயின்துயரம்
சொல்லில் வடிக்கத் தெரியாத்
சேயின் நிலையும்


மகளாகத் தூளியாடி
சினேகிதியாய் துயர்கள் நீக்கி
உறவாடிய உயிர்கள் இரண்டு
உருகியபடியே
விட்டுப் பிரிந்த பொழுது
புழுங்கித் தவித்தது
கரு சுமந்த மடியும்
பால் சுரந்த மாரும்
பாசத்தை சுமந்த மனதும்


தோழியாக இருந்தமகள்
தோள்சாய்ந்து கிடந்தமகள்
கண்ணுக்குள்ளே காத்தமகள்
கணவனோடு கைகோர்த்தாள்
இணைந்த கைகள்போல
இதயங்கள் இணைந்து இனிக்க
காலந்தோறும் கண்கலங்காது
கஷ்டமேதும் நெருங்காது
காக்கவேண்டும் வல்ல நாயன்


அன்பும் அறணும் அவள்பேணி
அனைவரும் புகழ மகள்வாழ
அன்னை நெஞ்சம் உருகியபடி
அகிலம் காக்கும்  இறைவனை
ஆத்மார்த்தமாய் வேண்டுகிறேன்..........


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
Source : http://niroodai.blogspot.com
--------------------------------------------------------------------------------------------------------------


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails