Friday, April 29, 2011

முயன்றால் வெல்லலாம்..!!!

கல்லினை உளியால் நீக்கி
            கவின்சிலைப் படைக்கும் சிற்பி
சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்
            சொல்வனம்  புலவன்  யாப்பில்
நெல்லினை  விதைத்து  ஆவல்
            நெருங்கிடக் காக்கும் வேளாண்
வில்லென வளைந்து  நெற்றி
             வியர்த்திட உழைக்கும் போழ்தும்
வல்லமை முயற்சி தந்த
           வழிகளின் துணிவு என்போம் 
            
 
துயரமாம் நோயில் வீழ்ந்துத்
            துடித்திடும் எவர்க்கும் மிக்க
நயத்தகு வார்தை மூலம்
           நலம்பெற வாழ்த்திப் பேசு
உயர்ந்திடப் போகும் தூரம்
          உன்னிடம் திறமைச் சேரும்
வியத்தகு மாற்றம் தந்த
        வித்தகர் வழிகள் போற்று
 
 
தேடுதல் நிறுத்த வேண்டா
           தெரிந்திடாப் பாதை  வேண்டா
கூடுதல் பலனே வெல்ல
            கூட்டணி முயற்சி வேண்டும்
பாடுதல் தெம்பைத்  தூண்டும்
          பாசமாய்ப் ப்ழக்  வேண்டும்
வாடுதல் பிடியில்  ஏழை
          வாழுதல் நீக்க வேண்டும்
 
யாப்ப்பிலக்கணம்;
விளம், மா, தேமா(அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்
 
--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails