Friday, February 18, 2011

வளமான வாழ்வுக்கு இனிய திருமணம்

திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர் என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)



    அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் (அல்குர்ஆன் 2:187)

    திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.

    திருமணம் செய்து கொண்டால் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மற்றும் இன்றியமையா வசதிகளை, தன் சக்திக்கேற்ப செய்து கொடுப்பது கடமையாகும். இதே போல மனைவியும் கணவனின் தேவைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்; கணவனின் அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும்.
    
     நபி அவர்கள் கூறினார்கள்: "நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக் கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுடையவளையே தேடிப் பெற்றுக் கொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
       (வாழ்த்துகிற பொழுது ‘உன் இருகரங்கள் மண்ணாகட்டும், உன் நெற்றி மண்ணாகட்டும்' என்றெல்லாம் நபி அவர்கள் கூறுவார்கள். அதற்கு அதிகமதிகம் அல்லாஹ்விற்குச் சிரம் பணி(ந்து ஸஜ்தா செய்)யட்டும் என்பது பொருளாகும்.)
மார்க்கத்தைப் பேணக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு நபி அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு உபதேசித்தது, அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனென்றால், நபி அவர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கதே என்று கூறியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தமது மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத, கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்காத பெண்ணை மணந்து சிரமத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ளவும் நபி அவர்கள் கட்டளையிட்டார்கள்.

       முகீரா இப்னு ஷஃஅபா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி அவர்களின் காலத்தில், நான் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் பேசினேன். நபி அவர்கள் ‘அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?' என்று கேட்டார்கள். நான் ‘இல்லை' என்றேன். அதற்கு நபி அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிக ஏற்றமாக இருக்கும்'' என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸயி)
”மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.” (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)]

      ”பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்”
(ஸஹீஹுல் புஹாரி: 5186)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails