Tuesday, January 18, 2011

நீடுரில் மருத்துவக் கல்லூரி : கவிக்கோ விளக்கவுரை

நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரி - வக்ப் வாரியம் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட உள்ள மருத்துவ கல்லூரி பற்றிய கடலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று காலை பத்து மணியளவில் சிதம்பரம் M.Y.M. பைசல் மஹாலில் நடைபெற்றது.
நீடூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல பிரதான ஊர்களில் ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவ்வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிதம்பரம் கூட்டத்தில் வக்ப் வாரியத் தலைவர்  டாக்டர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முகம்மது யூனுஸ், சிக்கந்தர், சிதம்பரம் தாலுகா இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் நாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய கவிக்கோ அப்துல் ரஹ்மான்:
கேரளாவில் ஏழு, ஆந்திராவில் நான்கு   கர்நாடகாவில் நான்கு என முஸ்லிம்கள் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் நிலையில் தமிழகத்தில் ஒன்று கூட இல்லாத இழி நிலையை போக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளதாக கூறினார். தொழில் புரட்சியின் போது வாளாவிருந்து உலக முன்னேற்றத்தில் தங்கள் பங்கை இழந்த முஸ்லிம்கள் தற்போது நடைபெற்று வரும் தொழில்நுட்பப் புரட்சியிலும் சோம்பி இருந்தால் வரலாறு அவர்களை புறந்தள்ளி விடும் என்று எச்சரித்தார்.
சமுதாய நலனுக்காக பொதுநலன் மற்றும் பொதுத்தளத்தில் நின்று இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது எனவும் கவிக்கோ கூறினார்.
இதனை ஒரு மருத்துவக் கல்லூரியாக மட்டுமின்றி மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்து கூறுகளும் உள்ளடக்கிய ஒரு மருத்துவப்   பல்கலைகழகமாக நிர்மாணிப்பதற்கே  விரும்பவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரி பற்றிய ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷன்  ஒளி ஒலி காட்சி ப்ரஜக்டர் மூலம் போட்டு காண்பிக்கப்பட்டது. அதில் மருத்துவக் கல்லூரியின் ஒவ்வொரு ஆண்டு நிலை, எதிர்பார்ப்பு, வளர்ச்சி திட்டம் போன்ற அனைத்து அம்சங்களும் விளக்கப்பட்டிருந்தன.
முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் 160 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் பல்வேறு தனி நபர்கள், ஜமாஅத் மற்றும் அமைப்புகள் போன்றவற்றிலிருந்தும் பங்குகள் வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பிறகு இது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்
MECCA (Muslim Educational Charitable with Care and Aid) Trust என்று ஒன்று உருவாக்கப்பட்டு அந்த டிரஸ்ட்டே (50  உறுப்பினர்கள் கொண்டது)  இந்த மருத்துவக் கல்லூரியை நிர்வகிக்கும் என்றும் அந்த ட்ரஸ்ட்டில் மிஸ்பாஹுல் ஹுதா கல்லூரி சார்ந்த ஒரு நபரும் வக்ஃப் வாரியம் சார்பில் ஒரு நபரும் இருப்பர் மீதமுள்ள நாற்பத்திஎட்டு பேரும் இதற்காக பொருளுதவி செய்தவர்களிலிருந்தே தேர்வு    செய்யப்படுவர் என்றார் கவிக்கோ.
இதனை மிஸ்பாஹுல் ஹுதாவும் வக்ஃபும் இணைந்து செய்கின்றன என்பது இவ்விதமே என்று விளக்கினார்.
இறுதியாக, பலர் தங்களது பங்களிப்பினை கவிக்கோ அவர்களிடம் செலுத்தினார்கள்.
பிறகு  உணவு உபசரிப்புடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
Source : http://www.inneram.com/2011011813071/nidur-medical-college-detailed-speech-by-kavikko

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails