Saturday, July 31, 2010

வீடியோ நேர்காணல் - டாக்டர்.ரஹ்மான். MYPNO.COM/Dr.Rahman-part1

மூனா ஆஸ்த்ரேலியன் பள்ளி நிறுவனர் டாக்டர். அப்துர்ரஹ்மானுடன் ஒரு சந்திப்பு. (நேர்காணல்) வீடியோ தொகுப்பு பகுதி -1

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்.

 தனக்குத் தானே தவமிருக்கக் கட்டிக் கொண்ட கூட்டில் முட்டி மோதிக் கொண்டிருந்தது அந்த உயிர். மெல்ல மெல்ல, உறுதியாக தன் போராட்டத்தில் வழியும் கண்டது. அந்தக் கூட்டில் இப்போது சிறு திறப்பு (துளை) ஒன்று உருவானது. அந்தத் துளையின் வழியே அதன் இளஞ்சிறகுகள் வெளிப்படத் தொடங்கின. ஆம், இனியும் அது புழுவல்ல. எல்லோராலும் விரும்பப்படுகிற வண்ணத்துப் பூச்சி. வண்ணத்துப்பூச்சி விரும்பப்படுவதற்கு அதன் சிறகுகளல்லவா காரணமாக இருக்கின்றன.

சிறகுகள் வந்துவிட்டால் பறக்கலாம். உலகத்து மலர்களில் தேன் உண்ணலாம். பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவலாம். இதோ, முழுதாக வெளிப்பட இன்னும் சற்றுகாலம்தான். அதன்பின் அது, தன் உலாவால், இந்தப் பூங்காவையே அழகுபடுத்திவிடலாம்.

சிறகுகள் சுதந்திரத்தின் குறியீடல்லவா!

அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொண்டும், போராட்டத்தைக் கைவிட்டுவிடாமலும், அந்த உயிர் முயற்சி செய்துகொண்டே இருந்தது.

அப்போது தான் அந்த மனிதன் அதைப் பார்த்தான். அவனுக்கு மிகுந்த இரக்க மனம். "அடடா, இந்த வண்ணத்துப்பூச்சி வெளிப்படுவதற்கு இத்தனைப் போராட்டம் நடத்துகிறதா?" அவன் வியந்தான். உதவ முடிவெடுத்தான். ஒரு கத்தரிக்கோலை எடுத்துவந்தான்.

அந்த கூட்டின் திறப்பை நுனியில் கத்தரித்து, அந்தத் துளையை பெரிதாக்கினான். அவன் எண்ணியபடியே, அந்த வண்ணத்துப்பூச்சி எளிதாக, உடனடியாக வெளிவந்தது. ஆனால்... ஆனால் ... அதன் உடல் வீங்கியிருக்க... சிறகுகள் சுருங்கியே இருந்தன. முழுவளர்ச்சி அடைந்திருக்கவில்லை.

அவன் அந்த வண்ணத்துப்பூச்சியை கவனிக்கத் தொடங்கினான். இதோ, எந்தக் கணமும் அதன் சிறகுகள் விரிந்து அதன் அற்புதமான அந்தப் பறத்தல் நிகழும் என்று அவன் நம்பினான்.

அப்படி ஏதும் நடக்கவில்லை.அந்தப் பூச்சியால் பறக்கவே இயலாது போயிற்று. வீங்கிய உடம்புடனும் சுருங்கிய இறக்கைகளுடனும் அது ஊர்ந்தபடியே இருந்தது. இனி காலத்துக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்வதைப் போல அதன் ஊர்தல் இருந்தது.

உண்மையில், தவறு செய்தவன் அந்த மனிதன் தான். தன்னுடைய இரக்க உணர்ச்சியால் அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் பெறும் போராட்டத்தில் தடை ஏற்படுத்தினான். அறியாமல் செய்த பிழை.

உடம்பிலிருந்து பாயும் திரவமொன்று சிறகுகளை உந்த, சிறகுகள் மெல்ல வலிமை பெற்று, கூட்டினை முட்டித்தள்ள, அது வெளிவருவதற்கான போராட்டம் மட்டுமல்ல. இணைச் சிறகுகளை வரமாகவே வழங்கும் இயற்கைத் தவத்தின் வழிமுறை; முடிவும் கூட.


ஆம். சில நேரங்களில் நமது தேவை போராட்டங்களிலிருந்தே கிடைக்கிறது. எந்தச் சிரமமுமின்றி எல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால், அவை மதிப்பற்றுப் போய்விடாதா? போராட்டங்கள் அல்லவா வலிமையை சேர்க்கவும் நம்மை உணர்த்தவும் செய்கின்றன.

இறைவனிடம் வலிமையை வேண்டினேன்.
அவனோ, துன்பங்களைத் தந்தான். அதனால் வலிமை கிடைத்தது.

இறைவனிடம் அறிவைக் கேட்டேன்
அவனோ, பிரசினைகளையே அளித்தான். அவற்றை தீர்க்கத் தீர்க்க அறிவு மேம்பட்டது.

இறைவனிடம் செல்வச் செழிப்பைக் கேட்டேன்
அவனோ, திட்டமிடும் மூளையையும், உழைக்கும் கரங்களையும் கொடுத்தான். அவற்றைக் கொண்டே செழிப்பைப் பெற முடியும் என்பது புரிந்தது

இறைவனிடம் தைரியத்தைக் கேட்டேன்.
அவனோ, ஆபத்துகளைத் தந்தான், கடந்தால் கிடைப்பது தைரியம் அல்லவா

இறைவனிடம் அன்பைக் கேட்டேன்
சிரமப்படும் மனிதர்களைச் சுட்டினான். அவர்களுக்கு உதவிட, அன்பின் பொருள் புரிந்தது

"இறைவா! சலுகைகளைத் தா" என்று வினவினேன்.
பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை அளித்தான் அவன்.

நான் கேட்டது அப்படியே கிடைக்கவில்லை!
ஆனால், எனக்குத் தேவையான எல்லாமே கிடைத்தன.

இறைவனுக்கே எல்லாப் புகழும்

அவனே பெரும்பாக்கியம் உடையவன். மிக அழகான படைப்பாளன்.(அல்குர்ஆன் 23:14)

Source : http://ezuthovian.blogspot.com/2010/04/blog-post.html

சத்தியமார்க்கம்.காம் தள அறிமுகம்


சத்தியமார்க்கம்.காம்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ''...என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை பிறருக்குச் சேர்ப்பித்து விடுங்கள்...'' (ஸஹீஹூல் புகாரி)


     "பருவத்தே பயிர் செய்" என்பது ஆன்றோர் வாக்கு. காலம் கடந்த ஞானோதயத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை என்பதை இன்று முஸ்லிம் சமுதாயம் கண்கூடாகக் கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் உலகத்தின் வளர்ச்சிக்கு ஒப்பத் தன்னை தயார் படுத்திக் கொள்ளாத முஸ்லிம் சமுதாயம், இன்று தனது கைகளை விட்டுப் போன அல்லது எதிர்கால சமுதாய முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டிய ஊடகத் துறையின் சிறப்பைத் தெரியாமல் இருந்ததன் பலனை இன்று உலகளாவிய அளவில் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த சில வருடங்களில் உலகில் ஊடகத்தால் ஏற்பட்ட விளைவுகள் எண்ணிலடங்கா! உலகின் கடந்த கால நிகழ்வுகளில் ஊடகம் மிகப் பெரிய பங்கு வகித்துள்ளது. இன்று உலக மக்களால் முஸ்லிம் சமுதாயம் ஒருவிதப் பயங்கரவாத சமுதாயமாக பார்க்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் ஊடகங்களே எனில் அது மிகையாகாது. இதனை இன்று எழுதித் தெரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. அந்த அளவிற்கு இது வெளிப்படையான ஒரு விஷயமாகும்.
"ஒரு பொய் திரும்பத் திரும்ப கூறப்படின் அது உண்மையாகும்" என்ற கோயபல்ஸ் தத்துவத்திற்கு மிகப் பெரிய இலக்கணமாக இன்று முஸ்லிம் சமுதாயம் விளங்குகிறது. உலகில் உயர்வு தாழ்விலா சமத்துவமிக்க சமுதாய அமைப்பு நிறுவக் கூடிய சாத்தியக்கூறுள்ள ஒரே வழி இஸ்லாமாக இருக்கையில், அதனைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் இன்று உலக மக்களால் "தீவிரவாதிகளாக", "பயங்கரவாதிகளாகப்" பார்க்கப்படுகிறது எனில் இது போன்ற வேடிக்கையான, நம்ப முடியாத விஷயம் வேறு ஏதாவது இவ்வுலகில் இருக்குமா?

முஸ்லிம் சமுதாயத்தின் மீதான இந்த களங்கத்தின் (பொய் குற்றச்சாட்டின்) மூலத்தையும், அதன் காரணங்களையும் ஒருவாறு பரவலாக அனைவரும் அறிந்திருந்தாலும், "அவர்கள் பயங்கரவாதிகள்" என்ற சிந்தனை ஓட்டம் பாமரர்களின் மத்தியில் ஆழமாக விதைக்கப் பட்டதை மாற்றுவது என்பது எளிதில் நடக்கக் கூடிய காரியமன்று. எனினும் முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலம் இதில் தான் அடங்கியுள்ளது. தங்கள் மீது வலிந்து திணிக்கப் பட்ட இக்கறையை எவ்வளவு விரைவில் நீக்குகிறார்களோ அவ்வளவு வேகத்தில் இச்சமுதாயம் வளரும்.

இதற்கு முஸ்லிம் சமுதாயம் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களில் தலையாயது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தங்களது பாதையை செம்மையாக்குவதாகும். எப்படி கடந்த காலங்களில் சமுதாயத்துக்கு ஏற்படும் எதிர்காலச் சவால்களை கணக்கில் கொண்டு உலகின் வளர்ச்சியில் அதன் நீரோட்டத்தில் கலக்கவில்லையோ அது போல் இனி இருத்தல் சமுதாயத்தின் அழிவிற்கே வழி வகுக்கும்.

அந்த வகையில் இனி எதிர்காலத்தை நிர்ணயிப்பது எது என ஆராய்ந்தால், அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு அளிக்கும் பதில், அது இணையமாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு இன்று உலகின் அனைத்து காரியங்களும் இணையத்தின் மூலமாகவே நடைபெறுகிறது. வர்த்தகத்தில் ஆரம்பித்து மருத்துவம், ஆராய்ச்சி, விண்வெளி கட்டுப்பாடு என அனைத்தையும் இன்று தனது காலடியில் இணையம் வைத்துள்ளது. தகவல் புரட்சியில் இன்று ஈடு இணையற்ற பங்கினை இணையம் நிர்வகித்துக் கொண்டு வருகிறது. எதிர் காலத்தில் இணையம் இல்லையேல் உலகம் இல்லை என்ற நிலை வரினும் ஆச்சரியப் படுவதற்கில்லை. (இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இணையத்தின் முக்கியத்துவத்தினைக் குறித்து ஒரு சிறந்த கட்டுரையினை வடித்து அதன் இணைப்பை இவ்விடத்தில் தருகிறோம்.)

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையினில் முஸ்லிம்கள் தங்களது பங்களிப்பினை முழுமையாகச் செலுத்த முன் வரவேண்டும். எதிர் காலத்தில் அனைத்துக்கும் மேற்கோள் காட்ட இணையத்தை உலகம் பார்க்கும் பொழுது அதிலும் இச்சமுதாயத்தின் மேல் சுமத்தப் பட்ட களங்கமே நிறைந்து நிற்குமானால் அதன் பின் செய்வதறியாது திகைத்துக் கொண்டு எந்த பலனும் இருக்கப் போவதில்லை.

எனவே முழுக்க முழுக்க இவ்வொரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டு இச்சத்திய மார்க்கம் இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சத்தியத்தை சத்தியமாக எடுத்துரைக்க இது ஒரு சத்தியத் தளமாக இன்ஷா அல்லாஹ் செயல்படும். சமுதாய முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டு ஏட்டிலே இருப்பதை மட்டும் எடுத்துக் கூறிவிட்டு சென்று விடாமல் இன்று சமுதாயம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு நடைமுறைப் படுத்த முடியக் கூடிய தீர்வுகளையும் யாருக்கும் அஞ்சாமல் இத்தளம் உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும்.

சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய காரணம், சமுதாயத்தின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டியவர்கள் "தான்" என்ற அகந்தையினாலோ அல்லது எதிரிகளின் சூழ்ச்சிக்குத் தங்களை அறிந்தோ, அறியாமலோ பலியாகி சமுதாயத்தைப் பிளவு படுத்திக் கொண்டே செல்வதாகும். (சத்தியமார்க்கம்.காம் தளம்) இத்தளம் இவ்விஷயத்திலும் மிகுந்த கவனத்தை செலுத்தி, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தவறைத் தவறெனச் சுட்டிக்காட்டி தனி மனித துதி, சக சகோதரர்களை இழிவு படுத்துதல், இயக்கவெறி போன்ற சமுதாய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையிடும் தீய செயல்களிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுக்கப் போராடும் இன்ஷா அல்லாஹ்.

இது மட்டுமல்லாமல் நவீன உலகில் இஸ்லாத்திற்கெதிராக பின்னப் படும் சதிவலைகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி சமுதாயத்தை விழிப்புணர்வு அடைய வைக்கும். உலகில் நடக்கும் நிகழ்கால நிகழ்வுகளை ஆய்வதிலிருந்து சந்தேகங்களுக்கு இஸ்லாமிய ஒளியில் விளக்கங்கள் அளிப்பது வரை முடிந்த அளவு அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி எதிர்கால முஸ்லிம் சமுதாயத்திற்குத் தகுந்த அடித்தளம் அமைக்கும் படியாக சத்தியமார்க்கம்.காம் தளம்   அமையும் இன்ஷா அல்லாஹ்!
- சத்தியமார்க்கம்.காம்
சத்தியமார்க்கம்.காம்
சத்தியமார்க்கம்.காம் தள அறிமுகம் (Introduction)
 Source : http://www.satyamargam.com/0033

Friday, July 30, 2010

கீற்றுவில் அரங்கேறிய தமிழ்ப் பாசிஸம்!



”இதையெல்லாம் சொல்வதால் என்னுடைய சொந்த இன மக்களே என்னை புறக்கணித்தாலும் பரவாயில்லை. என்னுடைய அரசு என்னை கொன்றுபோட்டாலும் நான் இதை சொல்ல தயங்கப் போவதில்லை” – அரங்குக்குள் நாம் நுழைந்தபோது அந்த இஸ்லாமிய நண்பர் ஒலிபெருக்கியில் முழங்கிக் கொண்டிருந்தார்.

அடுத்ததாக ஒரு நீண்ட பட்டியலை கிட்டத்தட்ட கால்மணி நேரம் வாசிக்க ஆரம்பித்தார். எண்பதுகளில் தொடங்கி இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது / கொல்லப்பட்டது குறித்த தலைப்புச் செய்திகளாக அவை அமைந்திருந்தன. சிங்களவர்களில் தொடங்கி தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகள் பலவும் கூட கடந்த முப்பதாண்டுகளில் இஸ்லாமியர் மீது தொடுத்த தாக்குதல்கள் குறித்த நீளமான அறிக்கையாக அது இருந்தது. மிகக்கவனமாக அந்நண்பர் தொண்ணூறில் இலங்கையின் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் எண்பதினாயிரம் முஸ்லீம்கள் கட்டிய துணியோடும் ஐநூறு ரூபாய் காசோடும் வெளியேற்றப்பட்டச் செய்தியை தவிர்த்தே பேசிக்கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் கூட்டத்தில் ஆங்காங்கே சலசலப்பு. கடைசியாக, “எங்கள் மீது தொகுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பரிகாரமாகதான் 2009 மே-யில் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்ததாக இலங்கை இஸ்லாமியர் இன்று சொல்லுகிறார்கள். அது தவறான நிலைப்பாடு. நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றுகூறி முடித்தார். அவர் இஸ்மாயில். இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் என்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

அவரது உரை முடிந்ததுமே ஓவியர் வீரசந்தானம் ஆவேசத்தோடு மேடையை நோக்கி கூட்டத்தின் மையத்திலிருந்து முழங்கினார். “புலிகள் இஸ்லாமியரைத் தாக்கியதாக பட்டியல் வாசித்தீர்கள். ஒவ்வொரு தாக்குதலும் எத்தகைய சூழலில் நடந்தது என்பதை நீங்கள் விளக்கியாக வேண்டும்” என்றார். வீரசந்தானத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தார்கள். ஒருவர், “நாங்கள் ஒரு லட்சம் உயிர்களை இழந்திருக்கிறோம். நீங்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ஏதோ பட்டியலை வாசிக்கிறீர்கள்” என்று விசித்திரமாக குரல் கொடுத்தார். மேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த தோழர் சுப.வீ.யும் மேடையிலிருந்தவரைப் பார்த்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் பின்னால் இருந்தவர்களுக்கு சுப.வீ. என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பது கேட்கவில்லை.

மீண்டும் அந்நண்பர் ஒலிபெருக்கியைக் கைப்பற்றினார்.

முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்...

"தக்வா மதரஸா மஸ்ஜித்" (மதுக்கூரில்) புதிய பள்ளிவாசல்

"தக்வா மதரஸா மஸ்ஜித்" புதிய பள்ளிவாசல்

நம் பக்கத்து ஊர் மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி (01.08.2010) அன்று திறக்கப்பட உள்ளது.                                                     

இது பற்றிய செய்தியை நம் அதிரை நிருபரில் பதிவு செய்கிறோம்.  புதிதாக பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு நம்மூர் மக்கள் அதிகம் கலந்துக்கொள்ள வேண்டுகிறோம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ் வரும் 01 ஆகஸ்ட் 2010 ஞாயிறு காலை 9 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மாநகரில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும், கண்மணி நாயகம் ரசூல்(ஸல்) அவர்களின் துஆ பரக்காத்தாலும் புதிதாக உருவாக்கப்பட்ட "தக்வா மதரஸா மஸ்ஜித்" பள்ளிவாசல் திறக்கப்படவுள்ளது. இன்ஷா அல்லாஹ் விழா சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடத்தில் தூஆச் செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.

திறப்பு விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது அதன் விழாவும் சிறப்படைய தூஆச் செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.



இப்படிக்கு,

தக்வா மதரஸா மஸ்ஜித் விழாக் குழு மற்றும்
சிறப்பு மலர் வெளியீட்டு குழு,
மதுக்கூர்.
Source : http://adirainirubar.blogspot.com/2010/07/blog-post_9577.html

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன்                                              தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்   இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர் களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.

அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.

இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …

கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.

அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர். மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !

இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.

இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
 
பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள : +91 99658 92706

Thanks : Samarasam Tamil Fortnightly ,May 16-31,2010

தகவல்: முதுவை ஹிதாயத்
Source : http://adirainirubar.blogspot.com/2010/07/blog-post_30.html

Thursday, July 29, 2010

நீடூர் சீசன்ஸ்-பிக்காசா படங்கள்

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே



''இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே!  உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம்.  ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.

இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.  இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை.  நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை.  கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்!  கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது!  ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.  ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.
From :Naseer Ali Through mail

நகைச்சுவை (முன் மாதிரி முஸ்லிம்)


Tamil Article
அன்புடன் நன்றி http://www.sadaqathullah.com/humour1.html

வரதட்சனை வாங்க மாட்டோம்

We will not take Dowry and We will not give Dowry
It is not required of thee (O Apostle), to set them on the right path, but Allah sets on the right path whom He pleaseth. Whatever of good ye give benefits your own souls, and ye shall only do so seeking the Face of Allah. Whatever good ye give, shall be rendered back to you, and ye shall not Be dealt with unjustly. Holy Quran - 2:272Source :http://www.sadaqathullah.com/dowry.html

வரவேற்போம் வசந்தத்தை... ரமழான் மலர்கின்றது.

வரவேற்போம் வசந்தத்தை... ரமழான் மலர்கின்றது.

 
இறை நம்பிக்கையாளர்களின் ஈமானை புதுப்பிக்கும் பருவமழையாக வருடந்தோறும் ரமழான் மலர்கின்றது.                   

ஒரு சில விஷயங்களை மனதுக்குள் அசை போட்டுப் பார்த்தால் தான் இந்த ரமழான் மாதத்தின் மாண்பும் மகத்துவமும் நமக்குப் புரியும்! நாம் மனிதர்கள். படைப்பினங்கள் அனைத்திலும் தலைசிறந்த பகுத்தறிவு வாய்க்கப்பட்ட மனிதர்களாக நாம் இருக்கின்றோம்.

விளையாட்டுக்காய் நம்மைப்படைத்து வெறுமனே வையகத்தில் தூக்கி வீசியெறிந்து விடவில்லை வல்ல இறைவன்! அவன் ரஹ்மான்!!
எத்தனை எத்தனை அருட்கொடைகள்; எண்ண, எண்ண குறையாத நிஃமத்துகள்! அல்லாஹு அக்பர்!! நல்ல உள்ளமும் நேர்சிந்தனையும் கொண்ட மனிதன் ஒருவன் இதைப்பற்றி யோசித்துப் பார்த்தால் கண்டிப்பாக அவனுடைய நெஞ்சத்தில் நன்றி வெள்ளம் பெருக்கெடுத்து கண்ணீர்த்தாரைகளாக கன்னங்களில் ஓடும். ஒன்றா? இரண்டா? எண்ணிச் சொல்ல! ‘ஒன்றுமே இல்லை என்னிடம்’ என்று இந்த உலகில் யாருமே சொல்லி விட முடியாது.

கல்லில் உள்ள தேரையையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாத இறைவன், கண்ணும் கருத்துமாய் படைத்த மனிதனை மட்டும் ‘அம்போ’ என விட்டுவிடுவானா? எத்தனை, எத்தனை வசதி வாய்ப்புகள், அத்தனையையும் அள்ளிக் கொடுத்துள்ளானே அந்த ஆண்டவன்!

பாரசீக தேசத்தில் புகழ்பெற்ற ஒரு கவிஞர். ஷைஃக் சஅதி என்பது அவர் பெயர். (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) தீராத வறுமை ஆட்டிப்படைக்கின்றது. காலில் செருப்பு எடுத்து மாட்டக் கூட காசில்லை. தன்னைத் தானே நொந்து கொண்டு நடந்தே போகிறார், பக்கத்து ஊருக்கு!
அங்கே தெருவில் ஒரு மனிதன். அவனைப் பார்த்தது தான் தாமதம்! கவலையும் வருத்தமும் பஞ்சாகப் பறந்தோடிப் போய் விட்டன சஅதியிடமிருந்து! சொல்கிறார் - ‘காலுக்குச் செருப்பில்லையே என்று
கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் காலே இல்லாதவனைப் பார்க்கும் வரை!’ மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று, எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கின்றது. கண்களை அகலமாக திறந்து வைத்துக் கொண்டு பார்த்தோ மென்றால் மனக்குறையே ஏற்படாது. மாறாக, நன்றி உணர்ச்சியே ஊற்றெடுக்கும்.

யாருடைய உள்ளத்தில் இந்த நன்றி உணர்வு சரியான விகிதத்தில் வளர்கின்றதோ அவன் தன்னுடைய இறைவனை, சரியாக இனங்கண்டு கொள்கின்றான். அஷ்ஹது அன்லா இளாஹ இல்லல்லாஹ் என்று ஓரிறைக் கொள்கை சங்கமத்தில் தன்னையும் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்கின்றான். இவ்வளவு நாள், என்னென்னமோ, எத்தனை எத்தனையோ அருட்கொடை களை, பாக்கியங்களை, வாய்ப்புகளை, எண்ணி, எண்ணி நன்றி செலுத்தி வந்தானே அவையெல்லாம் இப்போது ஒன்றுமே கிடையாது. தகதகவென்ற சூரியன் உதித்த பிறகு மின்னி மின்னி எரியும் விளக்குக்கு என்ன மதிப்பு? ஓரிறைக் கொள்கை என்ற அட்டகாசமான நிஃமத்துக்கு முன்னால், உலகத்தின் வேறு எந்த நிஃமத்துக்கும் மதிப்பே கிடையாது!

நீங்கள் படிக்கவில்லையா? பணங்காசு உங்களிடம் இல்லையா? வருமானம் போதவில்லையா? வியாபாரம் தகையவில்லையா? நீங்கள் மனம் தளர மாட்டீர்கள்; விரக்தி அடைய மாட்டீர்கள்; கவலையில் மூழ்கிப் போக மாட்டீர்கள். நீங்கள் முஃமின்களாக இருந்தால்!  ஏன்?  என்ன காரணம்? இந்த ஓரிறைக் கொள்கையே தான்! உலகில் உள்ள ஒட்டுமொத்த பாக்கியங்கள், அருட்கொடைகளை விடவும் ஓரிறைக் கொள்கைதான் மிகப் பெரியது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள். ஆறோடும் நிலத்தில் அழுக்கு சேருமா?  விளக்கெரியும் வீட்டில் இருள் இருக்குமா? ஈமானிய ஒளி உள்ள நெஞ்சத்தில் கவலை இருக்குமா? வருத்தம் இருக்குமா?

அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் அவர்கள்
இறைவா! எங்கள் அண்ணலுக்கு மகாமே மஹ் மூதாவைக் தருவியாக! 
எவ்வளவு அழகாகச் சொல்லிச் சென்றுள்ளார்,  பாருங்கள் ‘முஃமினுடைய நிலைமை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. வளமும் வசதியும் வரும் போது நன்றியை வெளிப்படுத்துகின்றான். அல்லாஹ்விடமிருந்து கூலியைப் பெற்றுக் கொள்கின்றான்! சோதனைகள் வந்து சேர்ந்தால் பொறுமையை மேற்கொள் கின்றான். அல்லாஹ்விடமிருந்து கூலியைப் பெற்றுக் கொள்கின்றான்!’ ஓரிறைக் கொள்கை என்பது, ஈமான் என்பது எத்தகைய மாண்புடையது என்பதை நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டவனால் தான் இது முடியும்! துன்பங்களை நினைத்து கண்ணீர் வடிக்கின்ற, துயரங்களை எண்ணி புலம்பித் தள்ளுகின்ற வெகு சாதாரண மனிதனைப் போல அவன் இருக்க மாட்டான்.

பணத்தைப் பார்த்து விட்டால் தெனாவட்டாய் திரிகின்ற, யாரையுமே சட்டை பண்ணாத கர்வக்காரனாகவும் அவன் இருக்க மாட்டான். அவனிடத்தில் இருக்கின்ற ஈமான் தான் காரணம்! சகோதரர்களே! உங்களுக்கும் எனக்கும் அப்படிப்பட்ட ஈமானை இறைவன் கொடுத்துள்ளான். உலகில் எத்தனையோ கோடிப்பேர்களுக்கு கிடைக்காத அருட்கொடை இது! இந்த ஈமான் நம்மிடம் இருப்பதால் தான், இந்த நன்றியுணர்வு நம்மிடமிருந்து வெளிப்படுவதால் தான், இந்த பொறுமையை நாம் கடைப்பிடிப்பதால் தான் ‘முஸ்லிம்கள்’ என்று நாம் அழைக்கப்படுகின்றோம். ஆக, ‘முஸ்லிம்’ என்ற சொல் ஒரு கொள்கையை, ஒரு கோட்பாட்டை வெளிப்படுத்துகின்ற ஒரு சொல்லாக உள்ளது.

‘எந்நிலையிலும் தன்னைப் படைத்த இறைவனுக்கே கீழ்படிபவன்’ — என்பது தான் ‘முஸ்லிம்’ என்கின்ற அரபி வார்த்தைக்குப் பொருள்!  எவ்வளவு அழகான வார்த்தை பார்த்தீர்களா?

உலகின் வேறு எந்த கொள்கையை, எந்த சமயத்தைப் பின்பற்றுபவரும் இவ்வளவு அருமையாக அழைக்கப்பட மாட்டார்! ஒரு விஷயத்தை நாம் நன்றாகப் புரிந்து கொண்டோம். யார் இறைவனுக்கு நல்ல முறையில் கீழ்படிகின்றாரோ, அவர் தான் முஸ்லிம் என்று அழைக்கப்படுகின்றார். முஸ்லிம் என்று அழைக்கப்பட அவரே முழுத்தகுதி உடையவர். இப்போது நாம் நம்முடைய விஷயத்துக்கு வருவோம். நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோம். உண்மையிலேயே நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோமா? உண்மையிலேயே இறைவனுக்கு கீழ்படிபவர்களாக இருக்கின்றோமா? உங்களுடைய நெஞ்சை நீங்களே கிழித்து உள்ளே எட்டிப்பார்த்து விட்ட விடையைச் சொல்லுங்கள்!  அங்கே ஈமான் இருக்கின்றதா?

அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹீ அலைஹி வசல்லிம் ஆச்சரியப்பட்டுக் கொண்டு புகழ்கிறார்களே, அந்த ஈமான் நெசமாலுமே நம்முடைய நெஞ்சுக்குள் இருக்கின்றதா? இதில் வெட்கப்படுவதற்கோ, மூடிமறைப்பதற்கோ என்ன இருக்கின்றது? ‘இல்லை’ என்பது தான் நிதர்சனமான பதில்! யாருக்குத் தெரிய வேண்டுமோ, அந்த அல்லாஹ்வுக்குத் தான் நம்மை விட நன்றாகவே தெரியுமே! நாம் ஏன் முஸ்லிம்களாக இல்லை? நம்முடைய நெஞ்சுக்குள் ஈமான் ஏன் ஒழுங்காக இல்லை? என்றால் நம்மிடம் அல்லாஹ்வைப் பற்றிய பயம் இல்லை; இறையச்சம் இல்லை; தக்வா இல்லை! அல்லாஹ்வைப் பற்றிய பயம் ஏன் இல்லை? தக்வா ஏன் இல்லை? என்றால் அல்லாஹ்வைப் பற்றிய சரியான அறிவு நம்மிடம் இல்லை; அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற உண்மையான அக்கறை நம்மிடம் இல்லை! தக்க அறிவு, தகுந்த அறிவு இல்லாததால் தக்வா இல்லை! தக்வா இல்லாததால் ஈமானில் ‘தரம்’ இல்லை! ஈமான் என்கின்ற சட்டையை பெயருக்காய் போட்டுக் கொண்டுள்ளோம். ஏராளமான கிழிசல்களோடு ஒட்டுத் துணிகளோடு கந்தலாய் காட்சியளிக்கின்றது. அழுக்கு வேறு அநியாயத்துக்கு அப்பிப் போய் முடை நாற்றம் எடுக்கின்றது!

தக்வா  இல்ம் இந்த இரண்டு விஷயங்களையும் கையில் ஏந்திக் கொண்டு தான் வருடந்தோறும் ரமழான் நம்மைச் சந்திக்க வருகின்றது.

‘இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னால் சென்ற சமூகத்தின் மீது கடமையாக்கப்பட்டத போலவே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தக்வா (இறையச்சம்) உடையவர்களாக மாறிவிடக் கூடும்!’ (அல்பகறா – 183)

மாதம் முழுக்க முறையாக நோன்பு வைப்பதால் எப்படி நோன்பு வைக்க வேண்டுமோ அப்படி நோன்பு வைப்பதால் கண்டிப்பாக நம்முடைய தக்வாவின் அளவு கூடிப் போகும்! ‘ரமழான் மாதம் எத்தகையதென்றால் மக்களுக்கு நேர்வழி காட்டக் கூடிய, நேர்வழி இதுவென்று தெள்ளத் தெளிவாய் அறிவிக்கக் கூடிய, (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்து உணர்த்தக் கூடிய அல்குர்ஆன் அ(ம்மாதத்)தில் தான் இறக்கியருளப்பட்டது!’ (அல்பகறா-185)

இது தான் நேர்வழி! இதில் நடைபோட்டால் தான் வெற்றி வாசலுக்கு போய்ச் சேர முடியும், என்று கைகாட்டி சுட்டிக் காட்டுகின்ற வான்மறை குர்ஆன் இந்த வசந்த மாதத்தில் தான் அருளப்பட்டுள்ளது. ‘கியாமுல்லைல்’ என்றொரு விஷயத்திற்கு ரமழான் மாதத்தில் மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகின்றது. இரவில் இன்று இதைச் செய்வது என்று பொருள்! தராபீஹ் என்று பொதுவாக அழைப்பதும் உண்டு. ரமழான் மாதத்தில் தொழுதாலும் சரி, மற்ற மாதங்களிலும் கடைப்பிடித்தாலும் சரி, கியாமுக்லைத் என்பதே குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது என்பதன் இன்னொரு பெயராகவே திகழ்கின்றது.

அது மட்டுமல்லாமல் ரமழான் மாதத்தில் நன்மையை விரைந்து முடிந்த வரைக்கும் அதிகம் அதிகமாக அறுவடை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பல தடவை வான்மறை குர்ஆனை ஓதி முடிப்பதும் வழக்கமாய் உள்ளது.

வான்மறை குர்ஆனை திலாவத் செய்வது; அதன் கருத்துக்களை அலசி ஆராய்வது; குர்ஆனுடைய போதனைகளை தம்முடைய வாழ்வில் முடிந்தவரைக்கும் செயல்படுத்துவது எப்படி? என்று சிந்தித்துப் பார்ப்பது; சொல்லிலும் செயலிலும் முழுக்க முழுக் வான்மறை குர்ஆனை பிரதிபலிப்பது எப்படி? என்பதில் மனதைச் செலுத்துவது போன்ற விஷயங்களிலேயே நாம் ரமழானைச் செலவிட வேண்டும்.

இப்படியாக, ஈமானை வளப்படுத்துகின்ற இந்த இரண்டு விஷயங்களையும் நமக்கு வழங்குவதற்காகத் தான் ரமழான் மாதம் வந்து கொண்டுள்ளது.
யார் யாருக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவையும் அள்ளிக் கொள்ள வேண்டும். ரமழான் மாதத்திலும் பிற மதங்களைப் போன்றே சாதாரணமாக வழக்கமான இபாதத்துகளை மட்டுமே செய்து கொண்டு நோன்பு வைத்ததே பெரிய விஷயம்! என்று நினைத்துக் கொண்டு போதுமென்ற மனப்பான்மையோடு இருந்து விடக் கூடாது.

எல்லா வியாபாரிகளுக்கும் – தீபாவளியோ, பொங்கலோ, ஓணமோ – சீசன் என்று ஒன்று இருக்கும். சீசன் நேரங்களில் அவர்கள் எப்படி பரபரப்போடு இயங்குகின்றார்கள் என்பதைப் பார்த்திருக்கின்றீர்களா?

ஊன், உறக்கம், சோறு, தண்ணி எதுவுமே கிடையாது. காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பம்பரமாக சுழலுவார்கள். சீசன் நேரத்திலும் அளவான சரக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு அன்றாடம் பண்ணுவதைப் போன்றே வியாபாரம் செய்பவன் லாயக்கற்றவன்; கூடிய சீக்கிரமே திவாலாகி விடுவான்.

ஈமான் என்பதும் ஒரு வகையான வியாபாரம் தான்! (பார்க்க – அஸ்சஃப்-61-10) கொள்முதல் செய்யாமலேயே வியாபாரம் பண்ண முடியுமா? ஆகையால், நாம் ரமழானைப் பயன்படுத்திக் கொண்டு முடிந்த வரைக்கும் கொள்முதலை சேகரம் பண்ணிக் கொள்ள வேண்டும்! இறை அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; இறைஅச்சத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்! எப்படி பெற்றுக் கொள்வது? எவ்வாறு வளர்த்துக் கொள்வது?
என்பதற்கான விரிவான வழிகாட்டுதலை ஷரீஅத் அழகாக சொல்லித் தருகின்றது.

ரமழான் மாதத்தை வீணாக்கி விடக் கூடாது என்ற எச்சரிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்!

‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு எந்த முறைப்படி பயப்பட வேண்டுமோ அப்படி பயப்படுங்கள்; முஸ்லிம்களாக இல்லாத நிலையில் மரணித்து விடாதீர்கள்’ (ஆல இம்ரான் – 102)

சரியான தக்வாவைப் பெற்றுக் கொள்ளவில்லையென்றால் சாகும் போது ஈமான் கூட மிச்சம் இருக்காது. வியாபாரம் திவாலாகி விட்டது என்றால் என்ன இருக்கும்? நஊதுபில்லாஹி பின் தாலிக்க!

வரப்போகின்ற ரமழானை நன்முறையில் பயன்படுத்திக் கொள்வோம். சொட்ட சொட்ட நனைந்து நிற்போம் தக்வா மழையில்!!

அப்துல் ரஹ்மான் உமரி
கோவை
தகவல்: சின்னகாக்கா Dammam 
Source : http://adirainirubar.blogspot.com/2010/07/blog-post_9349.html

"அன்னை" என்பவள் நீதானா!

நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து,
நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும்,
நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும்,
நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,
நிற்கதியாய் தவிக்கவிட்டு நின் சொந்தம் விலகிடவும்,
நீ யொருத்தி தனிநின்று நெருடலுடன் வாழ்ந்திடவும்,
நெடுந்தூரம் சென்றிடவே நீசர்சிலர் விரட்டியதால்,
நின்கணவர் நிழல்தொடர்ந்தாய் நித்தமும் இறைதொழுதாய்!

யாருமே துணையில்லை என்றபோதும் ஏங்கிடாமல்,
இருக்கின்றான் இறைவனென்ற எண்ணமே உந்தனுக்க்கு,
ஏற்றம் தந்ததினால் ஏணியாய் நீ வாழ்ந்தாய்!
இஸ்லாத்தின் கடமைகளை என்றென்றும் கடைபிடித்தாய்!

. கருவை சுமந்தபடி கடுமையான பணிகள் செய்து,
கணவருக்கு உணவளித்து கணநேர ஓய்வில்லாமல்,
கருமேக சங்கடத்தில் காட்சிதரும் நிலவினைப்போல்,
கடுந்துயர் அனுபவித்து கண்ணுக்குள் அதையடக்கி,

நிம்மதியை துறந்து நெஞ்சத்தில் சுமைசுமந்து,
நெடுந்தூரம் நடந்து நீண்டதொரு மூச்சுவாங்கி,
நிலையில்லா வாழ்க்கைக்கு நீயும் கூட பொருளீட்டி,
நிறைமகனாய் என்னை நிலத்தினில் பிறக்கவைத்தாய்!

பிறந்தபின்னும் கண்விழித்து பிரியமுடன் எனைவளர்த்தாய் !
பிறைநிலவை துணைக்கழைத்து பேசிப்பேசி உணவளித்தாய் !
பேசக்கற்றுத் தந்தாய் எனைப்பிரியாமல் நீயணைத்தாய் !
பெருமையுடன் என்னை கண்ணே-மணியே என்றாய் !

தட்டுத்தடுமாறி தவழ்ந்தபோது என்னை தாங்கிப்பிடித்தாய்,
தட்டில் இறைத்த சோற்றை தவறாமல் ஒருங்கிணைத்தாய்,
ஒட்டுப்போட்ட புடவைத்தொட்டில் என் உறக்கத்தின் தாய்வீடு !
ஓடியாடும் எந்தனுக்கு உன் உந்துதலே வெற்றிக்கோடு !

பள்ளிக்கு அனுப்பி வைத்தாய் பாடமும் சொல்லித்தந்தாய்,
பசிக்கு உணவளித்தாய் பட்டினிக்கு இரையானாய்,
பாசமழை பொழிந்தாய் பகைமையை மறக்கச் செய்தாய்,
பலகதைகள் சொல்லி என்னை பக்குவப்படுத்தி வைத்தாய்!

தேர்வில் வென்ற என்னை தேடிவந்து உச்சிமோர்ந்தாய்,
தேடியும் கிடைக்காத செல்வம் என்மகனே என்றாய்,
நாடியும் கிட்டாத நல்லதொரு வேலை ஒன்றை,
நான் பார்க்க வழி செய்தாய்-நனிசிறந்த தாயானாய் !

பருவ காலத்தில் ஒரு பாவையை மணமுடித்து வைத்தாய்,
பறந்தது கவலையென்று பகற்கனவு தினம் கண்டாய்,
பணக்கார மருமகளை உன் மகள் இவளே என்றாய்,
அவள் செய்யாத வேலைக்கெல்லாம் வேலைக்காரி நீயானாய்!

மனைவியின் மயக்கத்தில் உனை மறந்து போனேன் தாயே,
மணிக்கணக்கில் பேசும் வாய்ப்பு மறைந்ததேன் தாயே,
மனைவியின் ஒப்பனையை மணிக்கணக்கில் ரசித்தேன் தாயே,
மாற்றுடை உனக்களிக்க மறந்து போனேன் தாயே !

ஓடிஓடி உழைத்த பின்னே ஓய்வெடுக்க படுத்தாய் தாயே !
உரியதொரு சிகிச்சை தர என் உள்ளம் நாடவில்லை தாயே !
ஒரு நாட்டு வைத்தியரை உனைப்பார்க்க வைத்தேன் தாயே !
ஒன்றுமில்லை காய்ச்சல் என்று உதவா மருந்து தந்தார் தாயே !

ஒளிமங்கும் உன் கண்கள் என்னை உலுக்கி எடுத்த போதும்,
ஒன்றுமே செய்யாமல் ஊனமாய் நின்றேன் தாயே !
உலக வாழ்வு போதுமென்று ஒருநாள் உறங்கிவிட்டாய் தாயே !
உன்னை நான் மண்ணிலிட்டு ஊமையானேன் தாயே !

வாழ்ந்த காலத்தில் உன் வாஞ்சையை நான் உணரவில்லை,
வாடிய உன்முகத்தில் வளர்சிரிப்பை நான் கொணரவில்லை,
வருங்காலம் நமக்கே என்ற உன்வார்த்தை புரியவில்லை,
வளர்த்துவிட்ட உந்தனுக்கு வாட்டம் தந்த மகனானேன் !

உயிர்வாழ்ந்த காலத்தில் உனதருமை எனக்கு புரியவைல்லை,
ஓடிஓடி அழுகின்றேன் ஒவ்வொரு சொட்டு கணணீரும் செந்நீராக,
உன்னை மீண்டும் காண்பதற்கு ஒருவழி உண்டென்றால்,
ஓடி நான் வந்திடுவேன் உனைத்தேடி சேவை செய்வேன் !

அருமருந்தாய் இருந்து அல்லல் எனும் நோய்தீர்த்து,
அன்பெனும் பாசத்தை நித்தம் அமுதுடன் கலந்தளித்து,
அகிலத்தில் நான் வாழ ஆக்கமும் ஊக்கமும் தந்த,
ஆற்றலே!தாயே!! "அன்னை" என்பவள் நீதானா?

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடுக்கடுக்காய் வந்தாலும்,
ஆழிசூழ் உலகில் அன்னை புகழ் மங்கிடுமோ ?
அவள் தரும் பாசத்தை அவனியிலே யார் தருவார்?
அன்றுமுதல் இன்று வரை அன்னையவள் ஆருயிரன்றோ?

என் நிலைமை இனி யாருக்கும் வரவேண்டாமென்றால்,
எழில் நபிகள் எடுத்துரைத்த இம்மை சொர்க்கம்,
என்றுமே அன்னை காலடியில் இருக்கின்றதென்ற உண்மையினை.
இதயத்தில் ஏற்றி வைத்து இறைதொழுது வாழ்ந்திடுங்கள்!!

எம்.ரஹீம், கோவை

Wednesday, July 28, 2010

உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி

from    mohdali naseer
பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான்.  இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது.  இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.

இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது.  இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.

எனது தந்தை உயிருடனே இருக்கிறார்


“எனது தந்தை உயிருடனே இருக்கிறார். அவரைப் போன்ற ஒருவர் இறக்கும் பட்சத்தில் அதனை ஒரு போதும் இரகசியமாக வைத்திருக்க முடியாது. அவர் இறந்தால் உலகமே மாறிவிடும்'' என அல் கொய்தா போராளிக் குழு தலைவர் ஒஸாமா பின்லேடனின் மகனான ஓமர் பின்லேடன் தெரிவித்தார்.

ஆனால், அவர் தனது தந்தை எங்கேயிருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது என்று கூறினார்.

கட்டாரின் தோஹா நகரிலிருந்து பிரித்தானிய “சண்'' ஊடகவியலாளர் ஒருவருக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவரது இந்தப் பேட்டி மேற்படி ஊடகத்தில் வெளியிடப்பட்டது.

தனது இளமைக் காலத்தை தனது தந்தையுடன் சூடானிய பாலைவனங்களிலும் ஆப்கானிஸ்தானிய டோரா போரா குகைகளிலும் கழித்த ஓமர் பின்லேடன் விபரிக்கையில், “பலவீனமான மகன் ஒருவனே, தனது தந்தை போன்று தான் வர வேண்டும் என விரும்புவான். நான் இப்போதும் அவரை (பின்லேடனை) நேசிக்கிறேன். ஏனெனில் அவர் எனது தந்தை. இது சாதாரண மனித நிலைப்பாடாகும். தந்தையென்ற வகையில் அவரை சந்திக்க முடியாததையிட்டு கவலையடைகிறேன். ஆனால், நான் சமாதானத்தை விரும்புகிறேன். அந்த வகையில் எனது மனோநிலை வேறுபட்டது'' என்று தெரிவித்தார்.

ஓமர் பின்லேடனினதும் அவரது பிரித்தானிய மனைவியான சானியாவினதும் (54 வயது) குழந்தை வாடகைத் தாயான லூஸி போல்லார்ட்டின் (24 வயது) வயிற்றில் வளர்ந்து கொண்டிருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. போதைவஸ்துக்கு அடிமையாகி கற் பனை உலகில் வாழும் ஓமர் பின்லேடனிடமிருந்து பிரிந்து வாழத் தீர்மானித்துள்ளதாக சானியா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனக்குப் பிறக்கப் போகும் அந்தக் குழந்தையை ஒஸாமா என்று அழைக்க விரும்புவதாக ஓமர் பின்லேடன் கூறினார். அவருக்கு முன்னைய திருமணத்தின் மூலம் அஹமட் என்ற 5 வயது மகன் உள்ளார். “எனக்கு மகன் பிறந்தால், நான் அவனை ஒஸாமா என்றே அழைப்பேன். ஆனால் அவன் மிகவும் அமைதியானவனாக நடந்து கொள்வான் என நான் நம்புகிறேன். பாட்டனாரின் பெயரை பேரனுக்கு வைப்பது பாரம்பரிய வழக்கமாகும்'' என ஓமர் கூறினார்.

இதற்கு முன் சானியா அளித்த பேட்டியில் ஓமர் பின்லேடன், மகன் பிறந்தால் பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் பெயரையும் மகள் பிறந்தால் எலிஸபெத் மகாராணியின் பெயரையும் வைக்க விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

“என் மகன் என்னுடன் மத்திய கிழக்கிலேயே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவனை மட்டுமல்லாமல் அவனது தாய்மாரான சானியாவையும் லூஸியையும் கவனிக்கும் பொறுப்பு எனக்குள்ளது. எனது மகனை வயிற்றில் சுமக்கும் லூஸி மிகவும் அழகாக இருக்கிறார்'' என்று ஓமர் கூறினார்.

ஹொலிவூட் நடிகை  பாரிமோருடன் ஒரு நாளைக் கழிப்பதே தனது நீண்ட நாள் கனவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tuesday, July 27, 2010

அல்குர்ஆனின் அழகிய பெயர்கள்!

அல்குர்ஆனின் அழகிய பெயர்கள்!
அபூ கதீஜா
எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் மனித குலத்தின் நேர்வழிக்காக – வாழ்க்கை நெறியாக ஆதம்(அலை) அவர்களில் ஆரம்பித்து வழிகாட்டு அறிவிப்புகளை (வஹீ) காலத்திற்குக் காலம் அனுப்பிக் கொண்டிருந்தான். அவற்றில் இறுதி வழிகாட்டி நூலாக – வாழ்க்கை நெறியாக, அவன் அருளிய இஸ்லாம் மார்க்கத்தை நிறைவு செய்து, அல்குர்ஆனை அருளினான். உலகம் அழியும் வரை இறுதி வழிகாட்டி நூலாக – வாழ்க்கை நெறியாக அல்குர்ஆனே திகழும் என்றும் தெளிவாக அறிவித்துள்ளான். இந்த உண்மைகளை அல்குர்ஆன் அல்மாயிதா 5:3, ஆல இம்ரான் 3:19, 85 ஆகிய இறைவாக்குகளை படித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக உணர முடியும். மேலும் இறுதி இறைத்தூதரின் மரணத்திற்குப் பின்னர், இறைத்தூதர்களுக்குரிய இறை அறிவிப்புகள் (நுபுவத்துடைய வஹீ) முடிவுக்கு வந்துவிட்டன. அதன் பின்னர் ஒரு கடுகளவேனும் மார்க்கத்தில் எதையும் நுழைக்க முடியாது என்பதை மேலே கண்ட இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் அல்குர்ஆனின் பகரா 2:159,160,161,162 அஃராஃப் 7:3, அஹ்ஜாப் 33:21, 36,66,67,68 ஹஷ்ர் 59:7 இறைவாக்குகள் இந்த உண்மையை மிகக் கடினமாக உறுதிப்படுத்துவதுடன், இதை மீறுவோர் நிரந்தரமாக நரகத்தில் தங்க நேரிடும் என்பதையும் உறுதியுடன் எச்சரிக்கின்றன.
அல்குர்ஆனின் அழகிய பெயர்களையும் அல்லாஹ் அல்குர்ஆனிலேயே தெளிவு படுத்தியுள்ளான். அவையாவன 1) அல்கிதாப் 2:2, (2) அல்பயான் 3:138, (3) அல்புர்ஹான் 4:174, (4) அல்ஃபுர்கான் 2:185, (5) அஃத்ஃததிக்ரு 3:58, (6) அந்நூர் 4:174 (7) அல்ஹக்கு 2:91, (8) அல்கரீம் 56:77, (9) அல்ஹகீம் 36:2, (11) அல்அஜீஸ் 41:41 (12) அல்ஹுதா 3:138 (13) அர்ரஹ்மத் 6:157, (14) அஷ்ஷிஃபா 10:57, (15) அல்மவ்இளத் 3:138, (16) அல்ஹிக்மத் 2:151 (17) அல்முஹைமின் 5:48, (18) அல் கய்யிம் 2:151 (19) அந்நிஃமத் 93:11, (20) அர்ருஹ் 42:52, (21) அத்தன்ஸீல் 20:4, (22) அல்ஹுக்மு 13:37, (23) அல்முபாரக் 6:92, (24) அல் முஸத்திக் 6:92, (25) அல்பஷீர் 41:4, (26) அந்நதீர் 41:4, (27) அல்முதஹ்ஹர் 80:14, (28) அல்முகர்ரமா 80:13 (29) அல்மஜீத் 50:1, (30) அல்அரபிய்யு 12:2, (31) அல்மர்ஃபூஆ 80:14, (32) அல்அஜப் 72:1, (33) அல்பஸாயிர் 7:203, (34) அஃத்ஃதிக்ரா 7:2, (35) ஹப்லுல்லாஹ் 3:103.
இந்த முப்பத்தி ஐந்து பெயர்களைத்தான் அல்குர்ஆனின் அழகிய பெயர்களாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பெயர்களை எல்லாம் சரியாக மொழி பெயர்த்துப் போட்டவர்கள், சுமார் இருநூற்றி ஐம்பது (250) இடங்களில் அல்குர்ஆனில் காண்ப்படும் ‘கிதாப்’ என்ற அரபிபதத்திற்கு ‘வேதம்’ என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். மேலும் ‘ஹப்லுல்லாஹ்’ என்ற அரபி பதத்திற்கு அல்லாஹ்வின் கயிறு என்று தமிழில் மொழிபெயர்த்திருந்தாலும் பெரும்பாலான புரோகித மவ்லவிகள் ஒற்றுமை எனும் கயிறு என்றே எழுதி வருகிறார்கள், சொல்லி வருகிறார்கள்.
இதை அறியாமல் – தெரியாமல் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. திட்டமிட்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்ப்பதோடு, ஷைத்தானின் ஏஜண்டாக இருந்து மக்களை நரகில் கொண்டு தள்ளவே முற்படுகின்றனர்.
தமிழக மக்களுக்கு ஆரம்ப காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தூய்மையான ஏகத்துவ இஸ்லாம் அல்ல என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஹிஜ்ரி 600க்குப் பிறகு தூய்மையான ஏகத்துவ இஸ்லாம், மனிதனும் இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என்ற அத்துவைத (வஹ்தத்துல் உஜுது) சூஃபிஸ இஸ்லாமாக – இறைவனுக்கு இணை வைக்கும் மதமாகத் திரிக்கப்பட்ட பின்னர்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனால்தான் தமிழகத்து ஊர்களில் பல தர்காக்கள் – சமாதிகள் பள்ளிக்குப் பக்கத்திலேயே கட்டப்பட்டிருப்பதையும், அவற்றிற்கு ஃபாத்திஹா, மெளலூது, ராத்திபு, கூடு, கொடி, கந்தூரி, கச்சேரி என அமர்க்களப்படுவதையும் பார்த்து வருகிறோம். ஊருக்கு ஊர் முஹ்யித்தீன் ஆண்டவர் பள்ளி என்றும் பெயரிட்டிருப்பதையும் பார்க்க முடியும். முஸ்லிம்கள் இப்படிப்பட்ட இறைவனுக்கு இணை வைக்கும் செயல்களில் மூழ்கி நரகைச் சென்றடைய வேண்டும் என்ற ஷைத்தானின் தூண்டுதலின் பேரில் இந்தப் புரோகித முகல்லிதுகளின் சதித்திட்டங்கள் இவை.
அந்தச் சதித்திட்டங்களில் ஒன்றுதான் ‘கிதாப்’ என்ற அரபிப் பதத்திற்கு ‘வேதம்’ என்று மொழிபெயர்த்து வருவதாகும். இப்போது ‘க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி’ (1992 ஜூனில் திருத்தி அச்சடிக்கப்பட்டது) பக்கம் 966-ல் காணப்படும் ‘வேதம்’ பற்றிய விவரங்களை அப்படியே தருகிறோம்.
வேதக்காரர் – கிறிஸ்தவர்.
வேதம் -1, இந்து சமயத்திற்கு ஆதாரமான நெறிமுறைகளைக் கூறுவதாகவும் புராதன காலத்தில் தோன்றியதாகவும், புனிதமானதாகவும் கருதப்படும் நூல் அல்லது நூல்களின் தொகுப்பு.
2. கிறிஸ்தவ பைபிள்
வேதவாக்கு : (வேதம் போன்று) மதிக்கத் தகுந்த வாக்கியம் அல்லது சொல்.
வேதாந்தம் : 1. வேதத்தின் இறுதிப்பகுதியாக உள்ள உபநிடதம்.
2. அத்துவைதம்
3. (வாழ்க்கை குறித்து தன்னளவில் கொண்டிருக்கும்) தத்துவம்.
உ.ம். எடுத்ததற்கெல்லாம் வேதாந்தம் பேசுகிறாயே!
வேதாந்தி : 1, அத்துவைதக் கொள்கையை பின்பற்றுபவர்.
2. உலகப் பொருள்கள் மீதுள்ள பற்றையும் உலக நடவடிக்கைகளில் ஈடுபாட்டையும் துறந்தவர்.
இந்த விபரங்களைப் படித்துப் பார்த்தவுடன் ஈஸல(அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தூய ஏகத்துவ இஸ்லாம் மார்க்கத்தை திரியேகத்துவ கிறிஸ்தவ மதமாக கிறிஸ்தவ மதப்புரோகிதர்கள் திரித்திருப்பது போல், இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முழுமைப்படுத்தப்பட்ட – பூரணத்துவமுடைய தூய இஸ்லாம் மார்க்கத்தை ஈரேகத்துவ (அத்துவைதம் – வஹ்தத்துல் வுஜுது) முஹம்மதிய மதமாக முஸ்லிம் மதப்புரோகிதர்கள் திரிப்பதற்கு வசதியாகத்தான் அல்குர்ஆனுக்கு அதிலேயே 250 இடங்களுக்கு மேலாக குறிப்பிடப்பட்டுள்ள ‘கிதாப்’ என்ற அரபி பதத்திற்கு வேதம் என்ற பதத்தை மக்களின் உள்ளங்களில் பதிய வைத்திருக்கிறார்கள். மதப்புரோகிதர்களால் திரித்து, வளைத்து, மறைத்து இறையருளிய வழிகாட்டு நெறிநூல்கள் வேதங்களாக்கப்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு இறுதி வழிகாட்டல் நெறி நூலுக்கும் ‘வேதம்’ என பெயர் சூட்டி முன்னைய நெறிநூல்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாக நிலையையே அல்குர்ஆனுக்கும் ஏற்படுத்த முற்பட்டிருக்கிறார்கள் முஸ்லிம் மதப்புரோகிதர்கள்.
அந்த அடிப்படையில் தான் அல்குர்ஆனிலுள்ளவற்றை அப்படியே நடைமுறைப்படுத்த முடியாது; அது சாத்தியமில்லை என்று சொல்லாமல் என்று சொல்லாமல் சொல்லி, தங்களின் சொந்த யூகங்களையும், கற்பனைகளையும் மார்க்கமாகச் சொல்லி, மக்களை அவற்றின்படி நடக்கத் தூண்டுகிறார்கள். அல்குர்ஆனை உங்களால் விளங்க முடியாது; நாங்கள்தான் விளக்கிச் சொல்ல வேண்டும் என்று அவர்கள் கதைளயப்பதும் அந்த அடிப்படையில்தான். வேதங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்கக் கூடாது; மீறிப் படித்தால் அவரதுநாக்கைத் துண்டிக்க வேண்டும்; வேதத்தைப் படிக்கக் கேட்கக் கூடாது; மீறி கேட்டால் அவரது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றெல்லாம் ஹிந்து மதப்புரோகிதர்கள் சொல்லி வருகிறார்களே, அவற்றின் ஆரம்ப நிலை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அவற்றின் பரிணாம வளர்ச்சிதான் நாம் மேலே எழுதியுள்ளது. அதே புரோகித வழியில் முஸ்லிம் மதப்புரோகிதர்களும் முன்னேறி வருகிறார்கள். அதற்காக திட்டமிட்டே கிதாப்-நூல் என்ற பதத்தை ‘வேதம்’ என எழுதி வருகிறார்கள், சொல்லி வருகிறார்கள். அல்குர்ஆனை உங்களுக்கு விளங்காது என்றெல்லாம் கதையளக்கிறார்கள். இவை அனைத்தும் இந்த முகல்லிது மவ்லவி புரோகிதர்களின் தில்லுமுல்லுகளேயல்லாமல் உண்மையல்ல.
இதேபோல் இந்தப் புரோகித மவ்லவிகள் அடிக்கடி அல்குர்ஆனுக்கு சொல்லிவரும் மற்றொரு பெயர் மறை – திருமறை என்பதாகும். இதுவும் ஹிந்து மதப்புரோகிதர்களைப் பின்பற்றி இவர்கள் தீயநோக்கடன் புழக்கத்தில் விட்டிருக்கும் ஒரு பதமேயாகும். மறை என்றால் மக்களிடமிருந்து மறைக்கப்பட வேண்டியது என்ற கெட்ட எண்ணத்துடனேயே ஹிந்து மதப்புரோகிதர்கள் இதை புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். அதே தீய நோக்கத்துடன் தான் முஸ்லிம் மதப்புரோகிதர்களும் அல்குர்ஆனுக்கு மறை என்ற பதத்தைப் புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். இந்த மறை என்ற பதம் எந்த அரபி பதத்தின் மொழி பெயர்ப்பும் அல்ல; முழுக்க முழக்க புரோகிதர்களின் மார்க்கமாக மக்களிடையே புழக்கத்தில் விட்டிருக்கும் கத்தம், ஃபாத்திஹா, மீலாது, மெளலூது, கூடு, கொடி, கந்தூரி, ஸலாத்து நாரியா போன்ற விதவிதமான நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அந்தஸ்த்துக்கு உயர்த்தும் – இணை வைக்கும் கொடிய ஸலவாத்துகள் இவை அனைத்தும் குர்ஆன் போதிக்கும் நேர்வழி அடிப்படையிலானவை அல்ல; மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கொடிய செயல்களாகும்.
மக்கள் சுதந்திரமாக தன்நம்பிக்கையுடன் அல்குர்ஆனை படித்துச் சிந்தித்து விளங்க ஆரம்பித்தால், இந்த முகல்லிது புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லுகள் அம்பலத்திற்கு வந்துவிடும். எனவே அல்குர்ஆனை மக்களிடமிருந்து மறைப்பது அந்த முகல்லிது புரோகித மவ்லவிகளைப் பொறுத்தமட்டிலும் மிகமிக அவசியமாக இருக்கிறது. ஹிந்து வேதங்களை ஹிந்து மதப்புரோகிதர்கள் எந்த நோக்கத்தோடு மக்களிடமிருந்து மறைக்க முற்படுகிறார்களோ அதே தவறான நோக்கத்துடன் தான் முஸ்லிம் மதப்புரோகிதர்களும் அல்குர்ஆனை மக்களிடமிருந்து மறைக்க முற்படுகிறார்கள். அதனால்தான் அவர்களைப் பின்பற்றி இவர்களும் அல்குர்ஆனுக்கு மறை என்றும் பெயர் சூட்டி இருக்கிறார்கள். மற்றபடி நாம் ஆரம்பத்தில் எடுத்தெழுதியுள்ள அல்குர்ஆனில் காணப்படும் அல்குர்ஆனின் அழகிய பெயர்களில் இந்த ‘மறை’ என்ற பதத்திற்குரிய அரபி பதம் இல்லை.
அதேபோல் இவர்கள் அல்குர்ஆனை ‘ஷரீஃப்’ என்றும் அழைத்து வருகிறார்கள். இந்த ‘ஷரீஃப் என்ற பதமும் அல்குர்ஆனில் இல்லை. கஃபத்துல்லாஹ்வுக்கு கஃபா ஷரீப் என்று ஹதீஸ்களில் காணப்படுகிறது. கஃபாவுக்குரிய ஷரீஃப் என்ற பதத்தை அல்குர்ஆனுக்கு எந்த நோக்கத்துடன் புகுத்தியுள்ளார்களோ? அதிலும் அவர்களின் தப்பான நோக்கம் இருக்கலாம். நமக்கு விளங்கவில்லை.
குர்ஆனை அல்குர்ஆன் என்று சொல்லலாம். தமிழில் ்திரு’ என்ற பதம் மதிப்பு தரும் முறையில் இடப்படுவது, உதாரணமாக காமராஜ் என்ற பெயரையுடையவரை மரியாதையுடன் அழைக்கும்போது திரு.காமராஜ் என்றே சொல்வார்கள். ‘திருக்காமராஜ்’ என் சொல்ல மாட்டார்கள் அதே போல் திரு.குமரன் எனும் சொல்லாக அமைகிறது. அது சமயம் ‘திருக்குமரன்’ எனும்போது இங்கு பெயரே ‘திருக்குமரன்’ என்றாகி விடுகிறது. திருக்குமரன் என்ற பெயரை உடையவரை மரியாதையுடன் அழைப்பதாக இருந்தால் திரு திருக்குமரன் என்றே அழைப்பார்கள்.
இங்கு ‘திரு’ தமிழ்ச்சொல்; குர்ஆன் அரபிச் சொல். திருவை மரியாதை அடிப்படையில் சொல்வதாக இருந்தால் திருகுர்ஆனை என்றே சொல்ல வேண்டும்; எழுத வேண்டும். திருக்குர்ஆன் என்று சொல்லும்போது, எழுதும் போது திருக்குமரன் என்று பெயரைக் குறிப்பிடுவது போல், அது பெயராகவே ஆகிவிடும். இங்கு ‘திரு’மரியாதை சொல் ஆகாது. அல்குர்ஆனுக்கு திருக்குர்ஆன் என்று பெயர் இல்லை. மேலும் திரு தூய தமிழ்ச் சொல்; குர்ஆன் தூய அரபி சொல், மேலும் தமிழையும் அரபியையும் சேர்த்து எழுதும் போது இடையில் வல்லினம் வருவது தமிழ் இலக்கணப்படி தவறாகும். எனவே அல்குர்ஆன் என்று சொல்வதே எழுதுவதே மிகச் சிறப்பாகும்.
அந்நஜாத்திலும் ஆரம்ப காலங்களில் இப்படிப்பட்ட முறையில் தவறாக எழுதப்பட்டு வந்துது உண்மை தான். வழமையாக நடைமுறையில் இருப்பதையும், அல்குர்ஆனின் அனைத்து மொழிபெயர்ப்புகளிலும் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருந்ததை, எழுதப்பட்டிருந்ததை பின்பற்றி அப்படியே எழுதி வந்தோம். ஆனால் இன்று ஆய்வு செய்யும் போதே இந்தத் தவறுகள் எம் கவனத்திற்கு வந்தன. சமயங்களில் குர்ஆனின் மொழிபெயர்ப்புகளை அப்படியே பார்த்து எழுதுவதாலும் அந்தத் தவறுகள் அதிகமாக இடம்பெற்று வந்தன. இனிமேல் இன்ஷா அல்லாஹ் கவனமாக இருப்போம். ஆக்கங்களை எழுதி அனுப்புகிறவர்களும் இனிமேல் இத்தவறுகளைக் கவனித்து திருத்தி எழுதி அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
http://www.annajaath.com/?p=1002

என்றும் இனிக்கும் நம் (பழைய) நோன்பு கால நினைவுகள்.

என்றும் இனிக்கும் நம் (பழைய) நோன்பு கால நினைவுகள்.

ஒரு காலத்தில் நம்மூரில் புனித ரமளான் நோன்பு வர இருக்கின்றது என்றாலே ஆண், பெண், பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு இனம் புரியாத பரபரப்பு                                             நம்முள் தானாகவே ஒட்டிக்கொள்ளும் அந்த நாள் நம் வாழ்வில் வந்த நாள்.

இன்று உலக வெப்பமயமாதலால் பனி போர்த்திய அண்டார்ட்டிக்கா கண்டமே ஐஸ் கிரீம் போல் உருகி வந்தாலும், ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டிருந்தாலும் நம் பழைய கால நினைவுகள் மட்டும் ஒரு போதும் பழுதடைவதில்லை.

அன்று நமக்கு அறிவுரை சொன்ன எத்தனையோ பெரியவர்களும், மார்க்கத்தை முறையே போதித்த மார்க்க அறிஞர்களும், "மாக்காண்டி" என்று பயமுறுத்தப்பட்டவர்களும், அதனால் பயந்து அடம் பிடிப்பதை அடக்கிக்கொண்டு உணவு உட்கொண்ட சிறுவர்களும். அவர்களில் எத்தனையோ பேர் இன்று மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். நமக்கு முன் இறைவனடி போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

நம்ம ஊர் குறிப்பாக வயதான பெண்மணிகள் அவர்களுக்கென்று அரபு, ஆங்கில, தமிழ் மாதங்கள் போக பன்னிரண்டு மாதங்கள் தனியே உருவாக்கி அதை நடு ராத்திரியில் எழுப்பிக்கேட்டாலும் வரிசை தவறாது கச்சிதமாக சொல்வார்கள். (கீழே நான் குறிப்பிட்ட வரிசை சரியா? அல்லது தவறா? என்று நம்மூர் மூத்த குடிமகன்கள் சொன்னால் நல்லது) ஷிர்க் எது? பித்'அத் எது? என்று விளக்கமாக தெரியாத காலம் அது என்று சொல்லலாம்.

1. முஹர்ரம்
2. சேலாந்திரி
3. நாகூர் ஆண்டவர் கந்தூரி
4. மையதுநாண்டவோ கந்தூரி
5. முத்துப்பேட்டை கந்தூரி
6. கோட்டப்பட்டிணம் கந்தூரி
7. கடற்கரைப்பள்ளி கந்தூரி
8. காட்டுப்பள்ளி கந்தூரி
9. விராத்து
10.நோம்பு
11.இடையத்து
12. ஹஜ்ஜூ

புனித ரமளானை வரவேற்க விராத்து மாதத்தில் பெண்கள் காட்டும் பரபரப்பும், சுறுசுறுப்பும் நம்மை திகைக்க வைக்கும். ஆம். அவர்கள் வீடு வாசல் கழுவி, ஒட்டடை அடித்து, அரிசி மாவு இடிக்க வீட்டுக்கு ஆள் வரவைத்து, உரல், உலக்கைகளெல்லாம் அக்கம்பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி இடித்தும் (அது ஒரு மெஹா ப்ராஜெக் மாதிரி நடக்கும்), மளிகைக்கடை சாமான்கள் சிட்டை போடப்பட்டு நோன்புக்கு தேவையான எல்லா சாமான்களும் வாங்கி சுத்தம் செய்து அரைக்க வேண்டியதை அரைத்தும், டப்பாவில் அடைக்க வேண்டியதை அடைத்தும் எல்லாம் முறையே செய்யப்பட்டு தயார் படுத்தி வைப்பார்கள்.

நோன்பு வருவதற்கு ஒரு சில நாட்கள் முன்பே நம் முஹல்லாப்பள்ளிகளெல்லாம் அதை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கும். சில பள்ளிகளில் வெள்ளையும் அடிப்பார்கள். மினாராக்களில் வண்ண விளக்குகள் மாற்றப்பட்டு நம் உள்ளங்களில் மத்தாப்பு கொளுத்தப்படும். நோன்பு கஞ்சி காய்ச்ச அங்கு தென்னங்கீற்றால் ஆன கொட்டகை போட மாட்டு வண்டியில் கீற்றும், கம்பும் அங்கு வந்திறங்கும். அத்துடன் நம் குதூகலமும் வந்திறங்கும். இவற்றை எல்லாம் இக்கால சிறுவர்கள் அனுபவிக்கிறார்களா? இல்லையா? என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கம்ப்யூட்டர் யுகமாகிப்போன இக்காலத்தில் நிச்சயம் அவற்றை எல்லாம் தொலைத்தவர்களாகத்தான் அவர்கள் இருப்பர் என்பது என் நம்பிக்கை.

இன்று பெய்த‌ மழையில் துளிர் விடும் புல்,பூண்டு போல ஆங்காங்கே திடீரென தோன்றும் சம்சா, இரால் மண்டை புதைத்த வாடா விற்கும் கடைகள்.

(நீர் மூழ்கி) ஆழ்குழாய்க்கிணறுகளெல்லாம் இல்லாத அக்காலத்தில் குளங்களெல்லாம் அடுத்து வரும் மழைக்காலம் வரை தண்ணீரை தன்னகத்தே தாங்கி நின்றது நாமெல்லாம் குதித்து/குளித்து கும்மாளமிடுவதற்காக.

கண்களெல்லாம் சிவந்து, காதிலும், மூக்கிலும் கொஞ்சம் வாயிலும் தண்ணீரை தடையின்று உள்ளே செல்ல அனுமதித்து விட்டு பிறகு நோன்பு திறக்கும் சமயம் மிக சங்கையாக மரியாதை இல்லா வாடாவையும், முக்கோண‌ சம்சாவையும் கஞ்சிக்கோப்பையில் பிய்த்துப்போட்டு வெகுநேரம் ஆடாமல், அசையாமல் இருந்து மீனைக்கவ்வுவதற்காக காத்திருக்கும் கொக்கு போல இடி முழக்கமென இறங்கும் 'நகரா' சப்தத்தில் நோன்பு திறக்கும் து'ஆ கூட முழுவதும் சொல்ல நேரமில்லாதவர்களாய் மடக்கென தன் வரண்ட வாயிக்குள் கவிழ்த்த கஞ்சிக்கோப்பை நினைவுகள் இன்று உங்களுக்கு கொஞ்சமும் இல்லையா?

அந்த காலத்தில் சஹாபாக்கள் பதுருப்போருக்கு படையுடன் களத்திற்கு சென்றது போல் நோன்பு பிறை 17ல் பதுரு ரொட்டி வாங்க தெருதோறும் பொட்டியுடன் சென்று போரில் வென்று கனிமப்பொருள்களை கவர்ந்து வருவது போல் பொட்டி நிறைய (தேங்காய், அரிசி மாவு ரொட்டி, சர்க்கரை, வெள்ளடை) சாமான்களுடன் முஹல்லாப்பள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்த அந்த நினைவுகள் இன்று வந்து ஏனோ வந்து நம்மை ஏக்கமடையச்செய்கின்றது?

அன்று நோன்பு கால இரவில் இளம்காற்றில் ஒலி பெருக்கி மூலம் கரைந்து வரும் பள்ளிகளின் ஹிஜ்பு/குர்'ஆன் வசனங்களும், அதற்குப்பின் கொடுக்கப்பட்ட நார்சாவையும் இன்றும் அனுபவிக்க வேண்டும் என்று உள்ளம் அலைபாயுது ஏனோ?

அன்றிருந்தவர்கள் இன்றில்லை நம்மிடம். இன்றிருக்கும் நாமோ நாளை இருப்பதில் எவ்வித நிச்சயமும் இல்லை. நாம் எல்லாம் ஒரு நாள் நம்மைப்படைத்தவனிடம் மீளக்கூடியவர்களாக இருக்கின்றோம்.

உச்சி நேர பெரும் பசியில் ஆசை, ஆசையாய் வாங்கிச்சேர்த்து வைத்த திண்பண்டங்களும், நோன்பு நோற்றதும் வேண்டா/வெறுப்பாய் தீண்டாமல் காலை நேர வீட்டு வேலைக்காரிக்கு உணவாய் ஆகிப்போகும் அத்தனையும்.

அன்று நாம் வெகுதூர வெள்ளைக்கார நாடுகள் செல்லாமல் அரபு நாட்டுடன் அடக்கமாய், அமைதியாய் இருந்தோம். குடும்பம், உறவு பேணினோம். அன்பும், அரவணைப்பும் அதிகம் கண்டோம். இன்றோ நம் வீட்டு பெரும் தேவைகளுக்காக அழகாய் தன் மெழுகால் கட்டப்பட்ட தேன்கூட்டை கல்லெறிந்து சிதைத்தது போல் எட்டு திசைக்கும் திரும்பி ஒன்று சேர இயலாதவர்களாய் தேனீக்கள் போல் பறந்து போனோம்.

சீரும் சிங்கங்களும், பாயும் புலிகளாய் நோன்பு கால இரவில் ஆடித்தீர்த்த விளையாட்டுக்களும், தூக்கில் தொங்கும் மின் விளக்கின் கீழ் ஆடிய கேரம் போர்டு விளையாட்டும் கடைசியில் தேவையில்லாமல் கொண்டு வந்து சேர்த்த தெரு சண்டைகளும் இன்று இல்லாமல் போனதில் நமக்கு (வருத்தம் கலந்த) சந்தோஷம் தான்.

அயர்ந்து உறங்கும் நம் வீட்டுப்பெரியவர்களை சஹர் நேரத்தில் அலாரம் வைத்தாற்போல் வந்தெழுப்ப வரும் (தப்ஸ் அடிக்கும்) சஹர் பக்கிர்சாவும், அவருடன் (அரிக்கலாம்பு) விளக்கு எடுத்து வரும் சிறுவனும் இன்றும் இருக்கிறார்களோ? இல்லையோ? தெரியவில்லை.

மேனி தெரிய அணிந்த மார்ட்டின் சட்டையும், பாக்கெட்டிற்குள் பளபளக்கும் பத்து ரூபாய் சலவை நோட்டும், அதன் மேல் கம்பீரமாக காட்சி தரும் ஹீரோ பேனாவும், காதில் சொறுகப்பட்ட நறுமண அத்தரில் நனைத்த பஞ்சும், காலில் சரசரவென சப்தம் செய்யும் சிகப்பு நிற பூ வைத்த சோலாப்பூரி செருப்பும் அதை நினைக்கும் இன்றும் நம் உள்ளத்தில் பேரின்ப நீர்வீழ்ச்சியை உண்டாக்கி அதில் வண்ண,வண்ண வானவில்லை வரச்செய்கின்றது.

புனித ரமளான் மாத கடைசிப்பத்து நாட்களின் மகத்துவம் குர்'ஆனிலும், ஹதீஸிலும் அதிகம் சொல்லப்பட்டதை சரிவர‌ விளங்காமல் கடைசிப்பத்தை கடைத்தெருவிலும், துணிமணி எடுக்க பட்டுக்கோட்டை, தஞ்சாவூருக்கு படையெடுத்துச்சென்றதும், உள்ளூர் தையல்கடைக்காரர்களை பண்டிகைகால ரேசன்கடைகள் ரேஞ்சுக்கு ஆக்கி அதில் அநாவசியமாய் ஆனந்தமும் கண்டோம்.

பள்ளிகளில் தராவீஹ் தொழுகையில் செய்த சிறுபிள்ளைத்தனமான குசும்புகளும், பாதியில் தொழுகையில் உறங்கிய உறக்கமும் பின் நார்சாவை நினைத்து வந்த சுறுசுறுப்பும் அதை வரவழைத்த‌ தேனீரும் நீர் அண்டார்டிக்காவே சென்றிருந்தாலும் உம்மை மெல்ல அசை போட வைக்கும் அந்த நினைவுகள்.

இவைகளெல்லாம் இன்று இல்லாமல் போனாலும் கடந்த காலத்தை இங்கு மெல்ல அசை போட ஆட்களுமா இல்லாமல் போய்விடுவார்கள்?

மேலே என்னால் ஞாபகப்படுத்த முடிந்ததை இங்கு எழுதி விட்டேன். ஏதேனும் உங்கள் நினைவுகளிலிருந்து விடுபட்டு இருப்பின் நீங்கள் பின்னூட்டம் மூலமோ அல்லது தனி கட்டுரை மூலமோ தாராளமாக தொடரலாம் என் அன்பிற்கினியவர்களே.

நம்மை நெருங்கிக்கொண்டிருகும் புனித ரமளானின் பரக்கத்தால் வல்ல ரப்புல் ஆலமீன் ஹலாலான நம் எல்லாத்தேவைகளை பூர்த்தி செய்தும், பெரும் ஆபத்துக்களிலிருந்தும், விபத்துக்களிலிருந்தும், விபரீதங்களிலிருந்தும் நம்மை காத்தருளி, ஈருலகிலும் எல்லாப்பாக்கியங்களையும் பெற்றவர்களாய் எம்மை ஆக்கி, உலக ஆசாபாசங்களுக்காக இஸ்லாத்திலிருந்து தடம்புரளாமல் கடைசி மூச்சு உள்ளவரை இஸ்லாத்தின் இன்பத்தை சுவைத்தவர்களாய், அச்சுவையுடனே எம்மை படைத்த உன்னிடம் நாங்களெல்லாம் வந்து சேர வேண்டும் அதற்கு ரப்புல் ஆலமீனான நீ எங்களுக்கு நல்லருள் புரியவேண்டும் (ஆமீன் யாரப்பல் ஆலமீன்) என்று அவனை இறைஞ்சிக்கேட்டு கொண்டவனாய் என் கட்டுரையை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ் என்றும் பசுமையான நம் நினைவுகள் தொடரும்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது

Source : http://adirainirubar.blogspot.com/2010/07/blog-post_4378.html

ஷஃ'பான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள்.

ஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துவாக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இதன் 15ம் நாளை, 'ஷப்-ஏ-பராஅத்' எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.

இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் பலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின் ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். 'ஷப்-ஏ-பராஅத்' இல் உள்ள  'ஷப்' என்பது அரபிச் சொல் கிடையாது; 'இரவு' என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். 'ஏ'காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு 'ஷப்-ஏ-பராஅத்' என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்து விட்டனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்கள் மூலம் ஏவப்பட்ட ஒரு நபி வழியா? நல்ல அமலா? இதனைச் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா? அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.

எவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் . இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்).

இந்த ஒரு ஹதீஸே நாம் மார்க்கம் என்றும் நன்மையென்றும் கருதி இப்படி நபி (ஸல்) காட்டித்தராத செயல்களைப் புதிதாக உருவாக்கவோ, சேர்க்கவோ அல்லது அதைப் பலரும் செய்கிறார்கள் என்பதால் செயல்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இதைப்போன்று பல ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத ஒன்றைச் செயல்படுத்த நேரடியான தடையுள்ளதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்விடம் நன்மையை நாடி, தமது உறவினர்களுக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்திக்கவும், மேலும் தமக்கு நன்மைகளும் அபிவிருத்தியும் ஏற்படும் என்று கருதி, இப்படிப்பட்ட அமல்கள் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் இதை நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் சிந்திப்பதில்லை.

நிச்சயமாக ஒருவர் இறந்தபின் மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அம்மூன்றாவன:
  1. அவர் விட்டுச்சென்ற நிலையான தர்மங்கள் (இறையில்லங்கள் கட்டுவது, மரங்கள் நடுவது, கிணறுகள் அமைப்பது, கல்விச்சாலைகள் நிறுவுவது போன்றவை)
  2. அவர் தந்த பயன் தரும் கல்வி (ஈருலக வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்த கல்வி)
  3. ஸாலிஹான அவரின் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனைகள்.
இம்மூன்றைத் தவிர வேறு எவ்வழியிலும் ஒருவர் இறந்தபின் அவருக்கு நன்மைகள் சேருவதில்லை. (ஆதார நூல்கள்: முஸ்லிம். அபூ தாவூத், திர்மிதி, நஸயீ)

நபியவர்கள் காட்டித் தந்த வழி இவ்வாறிருக்க, இறந்து போன உறவினருக்கு பராஅத் இரவில் பாத்திஹாக்கள் ஓதினால் எந்தப் புண்ணியமும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவிர நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய ஒரு வழிமுறையை மார்க்கமாகச் செய்யும் பாவத்தையும் சுமக்க வேண்டிவரும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களையும்விட - ரமலானுக்கு அடுத்தபடியாக - ஷஃ'பான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.

ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைபிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைச்சாற்றுகின்றன:

"நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ'பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவூத், நஸயீ)

நபி (ஸல்) அவர்கள், 'நோன்பை விடவேமாட்டார்களோ' என்று நாம் நினைக்கும் அளவுக்கு (சிலபோது) நோன்பு நோற்பவர்களாகவும் 'நோன்பிருக்க மாட்டர்களோ' என்று நினைக்கும் அளவுக்கு நோன்பு நோற்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமளானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் அறியவில்லை. நபியவர்கள் அதிக நாட்கள் நோன்பு வைத்த மாதம் ஷஃ'பானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்).

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்:
உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! ஷஃ'பானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை' என்று கூறிய போது, நபியவர்கள், "மனிதர்கள் ரஜப், ரமளான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள (ஷஃ'பான் என்ற) ஒரு மாதத்தின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில், அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்" என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்).

இதற்கு மாற்றமாக ஷஃ'பான் மாதத்தில், பிறை 15ல் மட்டும் நோன்பு நோற்பதும், அதன் இரவில் மூன்று யாஸீன்கள் ஓதுவதும், ரொட்டி மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து சாம்பராணிப் புகையுடன் ஃபாத்திஹா ஓதிய பின்னர் அதையும் இதர உணவுகளையும் பரிமாறிக் கொள்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு 'பித்அத்' தான காரியமாகும்.

நமக்கு இஸ்லாத்தையும் நன்மை தீமைகளையும் கற்றுத்தர அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் நமக்கு இவற்றைக் கற்றுத் தரவில்லை. அவர்களுக்குப் பின்னர் யாரோ சிலர் உருவாக்கியவைதான் இவையும் இவை போன்றவையும் என்பதைப் பலரும் அறிவதில்லை. நமக்கு நன்மைகள் வேண்டுவது அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்கு துஆச் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல; துவாச் செய்வது தவறும் அல்ல. இதை, தினந்தோறும் தவறாமல் நாம் செய்து வர வேண்டும். அதிகமாகவும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகைகளிலும் செய்ய வேண்டும். அதுவே நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியாகும்.

வருடத்தில் ஒரு நாள் அல்லது ஒருசில நாட்கள், அதுவும் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ காட்டித் தராத ஒரு நாளில் இதுபோன்ற அமல்களைச் செய்வது எந்த பலனையும் விளைவிக்காது என்பதை நாம் உணர வேண்டும். பலகாலமாக நமது மூதாதையோர்கள் செய்வதாலோ நம்முடைய உறவினர்கள், நமது ஊரார்கள் எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றைச் செய்யாமல் இவையெல்லாம் பொல்லாப் புதுமைகள் என்பதை அறிந்து கொண்டு, இதுபோன்றவற்றை விட்டு விலகி இருந்து, பிறருக்கும் உணர்த்தி விலக்கி அவர்களையும் நேர்வழிக்கு அழைக்க வேண்டும்.

இந்தியாவில் சிலபகுதிகளில் இரவு விழித்து விசேஷமான, தஸ்பீஹ்கள் தொழுகைகள் மற்றும் பொதுக் கல்லறைகளுக்கு இரவில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சென்று துவா செய்யும் வழக்கமும் இருக்கிறது, இந்த வழக்கம், நபி (ஸல்) அவர்கள் பெண்கள் கப்ரு ஜியாரத்தைக் கண்டித்ததற்கும் எச்சரித்ததற்கும் எதிரானதாகும் என்று உணர்த்தி இப்பழக்கத்தையும் கைவிடச்செய்ய நாம் முயலவேண்டும்.

ரமளானுக்கு ஒரிரு நாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்கலாகாது:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃ'பானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள், வியாழனில்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதார நூல் :புகாரீ)

மேற்கண்ட ஹதீஸ் திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் தொடர்ந்து வழமையாக நோன்பு வைத்து வருபவர்களைக் குறிக்கின்றது என்பதுடன், இதுபோன்ற திங்கள்-வியாழன் நோன்புகள் வைப்பது நபி(ஸல்) அவர்கள் தாமும் கடைபிடித்து வந்ததுடன் பிறருக்கும் ஆர்வமூட்டிய அழகான தெளிவான வழிமுறையாகவுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முறையாகப் பயனடைய முயல வேண்டும்.

அதேபோல்தான் குர்ஆன் ஓதுதலும் ஆகும். திருமறையின் எந்த அத்தியாயத்தை ஓதினாலும் அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்து நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாக ஓதிவரவேண்டும், மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ள திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் நஃபிலான வணக்கங்கள் மூலம் நன்மையையும் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் பெற்றிடத் தொடர்ந்து முயன்று, இம்மை-மறுமை வெற்றியைப்பெற முயலவேண்டும்.

அற்புதமான இந்த ஷஃ'பான் மாதத்தை பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

ஆக்கம்: அப்துல்லாஹ்

Source : http://www.satyamargam.com/600

LinkWithin

Related Posts with Thumbnails