Wednesday, October 27, 2010

இதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று


வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது திரும்பப் பெறப்படும்போது நமெக்கெல்லாம் புரிய வரும். உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.

ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று.

சரியாக சிறுநீர் வெளியேறாமல், வயது முதிர்ந்த ஒரு மனிதர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேற்றுவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார், அவருக்கு செய்யப்பட மருத்துவத்திற்காக பில் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்துவிட்டு பெரியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது, இதைப்பார்த்த மருத்துவர்கள், ஏன் பெரியவரே அழுகின்றீகள், என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார். அருகில் உள்ள மற்ற உறவினர்கள் அனைவரும் மறுபடியும் கேட்க, கண்களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார், "நான் என்னிடம் கொடுக்கப்பட்ட மருத்துவ செலவைப்பார்த்து அழுகின்றேன் என்று யாரும் நினைத்து விடவேண்டாம், இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே, அருளும் அன்பும் உடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறுதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியாக்கியதர்காக இதுவரை என்னிடம் ஒரு பைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லையே! என்று எனது இறைவனின் அருளை நினைத்து அழுகின்றேன் என்றார்.

ஆக ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள், திரும்பப்பெறப்படும்போதுதான் அதன் அருமை தெரிய வரும். உலக விஷயங்களைப் பொறுத்துவரை நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் குணம் நம்மிடையே இருந்தால் நம்முடைய குறைகள் சற்றே நிமிடத்தில் மறைந்து விடும்.

அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் - (16:114) என்று கூறியிருக்கிறான்.

கால் வழியால் அவதிப்படுபவர்கள் கால்களே இல்லாதவர்களைப் பார்த்து, தனக்கு கால்களை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

சிறுநீர் சீராக கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து உயிருக்காக போராடும் எத்தனையோ மனிதர்களைப் எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

அதற்காக, நபி (ஸல்) அவர்கள் “நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்” என்ற கருத்துப்பட கூறியிருப்பதை யாரும் மறந்து விடுதல் கூடாது

சொந்தங்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நமக்கெல்லாம் தொலைபேசி எனபது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்ததே. இதன் மூலம் நினைத்த மாத்திரத்திலேயே நாம் சொல்ல நினைப்பதை பரிமாறும் அளவுக்கு தொழில்நுட்பத்தை அல்லாஹ் நமக்கு அருளி இருக்கிறான் .

எனக்கு தெரிந்த ஒரு வாய்ப்பேச முடியாத நபர் துபாயில் வேலை செய்துவருகிறார் அவரால் தன் தாயிடமோ தந்தையிடமோ ஏன் தன் பாசமிகு மனைவியிடம் கூட அவரால் பேச முடியாது. எதாவது ஒரு செய்தியை தன குடும்பத்தாரிடம் சொல்லவேண்டுமெனில் சில தூரம் நடந்து வந்து தன் நண்பரிடம் விஷயத்தை விளக்கி தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வார்.

அவருக்கு சத்தம் என்ற சொல்லுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது.

அவருக்கு தன் பாசமிகு தாய், தந்தை, மனைவியின் குரல்கள் எப்படி இருக்குமென்று தெரியாது

அவரால் தனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்று கூட மருத்துவரிடம் விளக்கி கூற முடியாது

நம்மெல்லாம் அலாரம் வைத்து எழுந்திருப்பதுபோல் அவரால் எழுந்திருக்க முடியாது

இதுவெல்லாம் என் கண்ணிற்கு தெரிந்த சில விஷயங்களே, எனக்கு தெரியாமல் எத்தனை விஷயங்களிலோ அவர் படும் துயரத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.

எனக்கு இப்படி ஒரு குறையை அல்லாஹ் தந்துவிட்டானே என்று ஒரு முறை கூட அவர் சொல்லி நான் கேட்டதில்லை.

மாறாக சில சமயங்களில் அல்லாஹ் எனக்கு அழகிய கண்களைக் கொடுத்து இருக்கின்றானே என்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியது என் நினைவிற்கு வருகிறது.

அப்படியானால் நமது உடல் உறுப்புக்களை ஒரு சிறிதும் குறை இல்லாமல் படைத்த நம் அல்லாஹ்வுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக ஆவோமாக ஆமீன்

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)

-- Azeezudheen.
 Source : http://adirainirubar.blogspot.com/2010/10/blog-post_27.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails