Wednesday, September 22, 2010

பொன்னான நேரங்கள்-1 by அஹ்மத் பாகவி

பொன்னான நேரங்கள்-1

( 15.04.2010 அன்று ஜித்தாவில் டாக்டர் அஹ்மத் பாக்கவி ஆற்றிய உரையிலிருந்து )
வீணாகும் காலங்கள்
வீணாகும் காலங்கள் என எனக்குத் தலைப்பு தரப்பட்டுள்ளது.
அப்படியானால் நமது பொன்னான நேரங்கள் மண்ணாகின்றன, வீணாகின்றன என்று தானே பொருள்படுகிறது.
நேரத்தின் விலையை, மதிப்பை மாண்பை வெகுமதியை, அது நிகழ்த்தும் அதிசயத்தை மக்கள் புரிந்து கொள்ளாததால் தான் நேரத்தை வீண்விரயம் செய்கின்றனர்.
அதன் ஆழமான பொருளை, அது வலியுறுத்தும் உண்மையை, அதை இழப்பதால் ஏற்படும் பேரழிவை, அதனால் விளையும் ஆபத்துகளை மக்கள் அவசியம் புரிந்து கொள்ளவேண்டும். மக்களைப் புரிய வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வித்தியாசமான தலைப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது.
அதை நாம் இஸ்லாமியப் பார்வையில் அலசுவோம்.
நேரம் என்பதற்கு அரபியில் ‘வக்து’ (وقت) எனக் கூறப்படும்.எனவே விலைமதிக்க முடியாத நேரத்தின் தலைப்பை

الوقت في حيات المسلم

‘ஒரு முஸ்லிமின் வாழ்வில் நேரம்’ என வைத்துக் கொள்ளலாம்.
காலம் என்றால் என்ன?
ஒரு செயலுக்கும் அடுத்து வரும் செயலுக்கும் இடைப்பட்ட இடைவெளியை காலம் எனக் கூறுகிறோம்.சூரியன் சந்திரனின் இயக்கத்தை வைத்தே காலம் கணிக்கப்படுகிறது. மனிதன் காலமின்றி வாழவே முடியாது. நாள் தோறும் மாறி வரும் சிறு பொழுதும், ஆண்டு தோறும் மீண்டு வரும் பெரும் பொழுதும் காலத்தின் அவசியத்தைக் காட்டுகிறதல்லவா?
1.காலத்தின் பார்வையிலிருந்து மனிதன் எதனையும் மறைத்து விடமுடியாது.
2.மனிதன் காலத்திற்கு அடங்கி நடக்கவேண்டுமே தவிர காலம் ஒரு போதும் அடங்கி நடக்காது.
3. காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை எந்தப் பெருவீரனும்,பேரரசனும் றெ;றிருக்கவில்லை.
4.காலமும் கடல் அலையும் எவருக்காகவும் காத்து நிற்காது என்பார்கள்.
5.ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும், ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாது என்பது சீனப் பழமொழி.
6.காலமென்பது ஓய்வற்றது. உலகின் உயிர் போன்றது.நிகழ்ச்சிகளை சுமந்தோடும் ஆறு. இவ்வாறெல்லாம் அறிஞர் பெருமக்கள் பலர் இயம்பியுள்ளனர்.
7. காலமகளின் பின்தலை வழுக்கையாக இருப்பதால் அவளின் முன் கூந்தலைப் பற்றிப்பிடித்துக்கொள்.
காலத்தின் அருமையயையும் நேரத்தின் பெருமையையும் இவையனைத்தும தெளிவு படுத்துகின்றன.
சிறு துள்ளி பெருவெள்ளமமாதல் போன்று பல மணித் துளிகள் ஒன்றிக் கலப்பதே காலமாகும். ஒரு நிமிட நேரம் அளவிற் சிறிதாயினும் அந்நேரத்துள் உலகில் நிகழும் நிகழ்சிகள்,அதிசயங்கள் உலகோரை அதிசயிக்க வைக்கின்றன.
ஒரு நிமிஷம் தானே!
ஒரு நிமிஷம் தானே! கொஞ்சம் காத்திருக்க மாட்டீங்களா? குடியா முழுகிப்போகும்?என்றெல்லாம் நம் நண்பர்கள் சர்வ சாதாரணமாகப் பேசுவதைப் பர்க்கிறோம்.பாருங்கள் ஒரு நிமிடத்தில் நடக்கும் அதிசயங்களை!
ஒரு நிமிடத்தில் நடக்கும் அதிசயங்கள்
1. ஒரு நிமிட நேரத்தில் நாம் வாழும் பூமி 950 மைல்கள் தன்னைத் தானே சுற்றிவிடுகின்றது.
2. பூமி தன்னைத்தானே சுற்றுவதில் நாம் நிமிடத்திற்கு 91,500 அடி நகர்ந்து போகிறோம்
3. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு நிமிடத்திற்கு 1110 மைல்கள் பிரயாணம் செய்கிறோம.
4. மனிதன் ஒரு நிமிடத்திற்கு 18 தடவைகள் சுவாசிக்கிறான்.
5. மனிதனின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 72 தடவைகள் ஆகும்.
(ஒரு மணி நேரத்துக்கு 4320 தடவைகள் 24 மணிக்கு 10,3680 தடவைகள்.
ஆயுளில் 250 கோடி தடவைகள் துடிக்கின்றன. (4 நிமிட நேரம் இதயம்
இயங்காவிட்டால் மனிதனின் உயிரே போய்விடும்)
6. 1400 கன அடி மழை மாநிலத்தில் பொழிந்து விடுகின்றன.
7. 35000 தண்ணீர் கடலில் கலந்து விடுகின்றன.
8. 68 கார்கள் உற்பத்தியாகின்றன.
9. 4600 செருப்புகள் உற்பத்திச ;செய்யப்படுகின்றன.
10. 114 குழந்தைகள் பிறக்கின்றன.
11. 100 பேர் இறக்கின்றனர்.
12. 34 திருமணங்களும் 3 மணவிடுதலைகளும் நிகழ்கின்றன.
13. தேனீ ஒரு நிமிடத்தில் 13 பூக்களில் தேன் எடுக்கிறது.
14. 6000 விண்கற்கள் வீழுகின்றன.
15. அறுபது இலட்சம் சிகரெட்டுகள் பிடிக்கப்படுகின்றன.
16. 6,38,000 பேர் மது அருந்துகின்றனர்.
நாற்பதாண்டுகளுக்கு முன் (20.8.1966 ஆம் ஆண்டில்) ஒரு புள்ளி விவரக் கணக் கெடுத்து காலத்தின் அருமையினை உணர்த்தியுள்ளார் ஜெர்மானிய அறிஞர் ஒருவர்.
இன்று அதை பத்தாகப் பெருக்கிப் பர்க்க வேண்டும்.அப்போது தான் நேரத்தின் அருமை நமக்குப் புரியும்.
மனிதன் நேரத்தின் அருமையைஉணர்ந்து கொள்வதற்காகவே உலகில் எங்கு பார்த்தாலும் கடிகாரங்களைக் காண முடிகிறது.
எங்கும் கடிகாரங்கள்
கையிலே கடிகாரம்,
தெலைபேசியிலே கடிகாரம்,
கணிணியிலே கடிகாரம்,
வீடடுச்சுவர்களிலே கடிகாரம்,
வரவேற்பறையிலே கடிகாரம்
அலுவகத்திலே கடிகாரம்,
பள்ளிக்கூடத்திலே கடிகாரம்
வாகனத்திலே கடிகாரம்,
பேருந்திலே கடிகாரம்
விமானத்திலே கடிகாரம்,
ஊர் முகப்பிலே கடிகாரம்,
பூங்காக்களிலே கடிகாரம்,
காணும் பொருளிலெல்லாம் காலத்தை காட்டும் கடிகாரங்கள்.
பார்க்கும் பொருளிலெல்லாம் நம்மை உணர்த்தும் கடிகாரங்கள்!.
பேருந்து நிலையங்களிலும் இரயில்வே நிலையங்களிலும் விமான நிலையங்களிலும்அவ்வப்போது பயண அறிவிப்பு நேரங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன?காலத்தின் அருமையை யல்லவா காட்டுகின்றன.
இஸ்லாமியப் பார்வையில் நேரம்
இப்போது இஸ்லாமியப் பார்வையில் நேரம் என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நேரம் இறைவனின் மாபெரும் அருட்கொடை!
நேரம் என்பது இறைவனின் மிகப் பெரும் அருட்கொடையாகும். அந்த நேரத்தைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது (அதாவது குர்ஆனும்  ஸுன்னாவும் என்னகூறுகிறது)  என்பதைப் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதலாவது குர்ஆன் என்ன கூறுகிறது:-

وَسَخَّر لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآئِبَينَ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ

சூரியனையும் சந்திரனையும் தொடர்ந்து இயங்குமாறு அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.அவனே இரவையும் பகலையும் உங்களுக்காக வசப்படுத்தித் தந்தான் (14:33)

وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُوراً

சிந்திக்க விரும்புபவனுக்;கும், நன்றி செலுத்த விரும்புவனுக்கும் இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றை தொடர்ந்து வருமாறு அமைத்துள்ளான்;.(அல்புர்கான் 25:62)
வல்ல இறைவன், ‘இரவைப் பகலைத் தொடர்ந்து வருமாறும், பகலை இரவைத் தொடர்ந்து வருமாறும் ஒரு வினாடி கூட பிசகாது இயங்குமாறு செய்துள்ளான்.இந்த சுழற்சி நிகழ்ச்சியில் ஒருவினாடி கூட பிசகிவிட்டால் உலகமே நிலைகுலைந்துவிடும்.அதனால் தான் ஒவ்வொரு கோளங்களையும் ஒரு வட்டவரைக்குள் (எல்லைக்குள்) சுற்றிவருமாறு செய்துள்ளான்.

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

அவனே இரவையும் பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வாரு கோளங்களும் அதன் வட்டவரைக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. (21:33)
என்ற குர்ஆனின் அறிவியற் செய்தி உலகையே வயப்பிலாழ்த்துகிறது.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْراً فِي كِتَابِ اللّهِ

மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். (9:36)
அதற்கான கால வரையை அறிவதற்கு சூரியனையும் சந்திரனையும் தத்தமது பாதைகளில் நிர்ணயித்தபடி சுழலவும் செய்துள்ளான. இரவை இருளாக்கி சுகம் பெறவும், பகலைப் பிரகாசமாக்கி அவனது அருட்கொடைகளைத் தேடவும் அல்லாஹ் காலத்தை வசப்படுத்தித் தந்துள்ளான். இவ்வாறு அல்லாஹ் வழங்கிய காலம் மனித குலத்திற் கோர் அருட்கொடையாகும்.
காலத்தைக் குறித்து வரும் வசனங்கள் 18
நேரத்தின் முக்கியத்தைக் கருதியே குர்ஆனில் காலத்தின் மீது ஆணையிட்டுப் பல வசனங்கள் வருகின்றன. குர்ஆனில் ஆணையிட்டு வரும் மொத்தம் வசனங்கள் 92 ஆகும். இவற்றில் 18 வசனங்கள் காலத்தின் மீது ஆணையிட்டே வருகின்றன.
உதாரணமாக:-

وَاللَّيْلِ إِذَا يَغْشَى، وَالنَّهَارِ إِذَا تَجَلَّى

وَالْفَجْرِ ، وَلَيَالٍ عَشْرٍ

وَالضُّحَى، وَاللَّيْلِ إِذَا سَجَى

وَالْعَصْرِ، إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ

92:1-2, 89:1-2,93:1-2, 103:1-2 ஆகிய வசனங்களில் இரவின் மீது ஆணையாக! பகலின் மீது ஆணையாக, விடியற்காலையின் மீது ஆணையாக, முற்பகல் மீது ஆணையாக, மாலைவேளை மீது ஆணையாக என்று சத்தியமிட்டுக் கூறுகிறான் என்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை தனது அடியார்களுக்கு அல்லாஹ் உணர்த்துகிறான்.
காலத்தைப்பற்றி இறை தூதர் (ஸல்) கூறியது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் விலைமதிக்க முடியாத நேரத்தின் மாண்பையும், அதன் முக்கியத்துவத்தையும் குறித்து எடுத்துரைக்கிறார்கள்.
கியாமத் என்னும் விசாரணை நாளிலே இறைவன் மிக முக்கியமானதாக அதுவும் முதன்மையாகக் கேட்கப்படும் நான்கு கேள்விகளிலே தலையாயதாக ‘நேரத்தைப் பற்றியே இரு கேள்விகள் அமைந்திருக்கும்’ என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்படடிருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

عن معاذ بن جبل أن النبي صلعم قال

لن تزول قدما عبد يوم القيامة حتي يسأل عن أربع خصال عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين إكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل به ( رواه البزار والطبراني باسناد صحيح واللفظ له)

மறுமை நாளில் நான்கு கேள்விகள்
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
மறுமை நாளில் நான்கு கேள்விகள் கேட்கப்படாமல் ஒரு அடியானின் பாதங்கள் நகரவே செய்யாது.
1.அவனது வாழ்நாளை எப்படிச் கழித்தான்?
2.அவனது இளமையை எவ்வாறு செலவிட்டான்?
3.அவனது செல்வத்தை எப்படி திரட்டடினான் (சம்பாதித்தான்) ?
அதை எவ்வாறு செலவு செய்தான் ? என்றும் நேட்கப்படும்.
4.அவனது கல்வி கற்றதன் மூலம்; எவ்வாறு செயலாற்றினான்.?
(ஆதாரம் பஸ்ஸார், தப்ரானி)
ஆயுளை பொதுவாகக் கூறிய நபிகளார்(ஸல்) வாலிபத்தை குறிப்பாகக் குறிப்பிடக் காரணம் என்ன?
ஆயுளிலே உட்பட்டது தானே வாலிபம். அதற்குத் தனி முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்யப்படுவதன் நோக்கம்; என்ன ? ஒரு மனிதனின் ஆயுளில் அவனது வாலிபப் பருவமே மிகவும் முக்கியானது.அதில்தான் அவன் தீரத்தோடும் விவேகத் தோடும் செயல்படுகிறான்.அதுவே அவனது பொற்காலம்.சாதிக்க வேண்டிய வயது. குழந்தைப் பருவமும்; முதுமைப்பருவமும் பலவீனமான பருவங்கள். இந்த இரு பலவீனமான பருவத்திற்கிடையே வந்து போகும் திடமான பருவமே இளமைப் பருவம். எனவே, குறிப்பாக வாலிபப்பருவம் பற்றி வசாரணை செய்யப்படும் என்றார்கள் நபியவர்கள்.
வாலிபப் பருவம் பற்றி இறைமறை
வலிமைமிக்க வாலிபம் பற்றி இறைவன் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

اللَّهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفاً وَشَيْبَةً

பலவீனமான நிலையில் உங்களை அல்லாஹ் படைத்தான்.பின்னர் பலவீனத்திற்குப்பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் நரையையும் ஏற்படுத்தினான். (அவன் நாடியதைப்  படைப்பான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்). (அர்ரூம் 30:54)
பலவீனமான நிலையென்றால் குழந்தைப்பருவம் என்றும் பலவீனத்திற்குப்பின் பலம் என்றால் வாலிபப்பருவம் என்றும் மீண்டும் பலத்திற்குப் பின் பலவீனம் என்றால் முதுமை என்றும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்தே திடமான இளமப் பருவமே செயலாற்றவேண்டிய காலம் எனத்தெரிகிறது.வலிமையுள்ள காலத்தை நாம் வீண்விரயம் செய்து விடக்கூடாது.
இஸ்லாமிய வணக்கங்கள்
அடுத்து இஸ்லாமிய வணக்கமுறைகளும் நேரத்தின் மதிப்பையும் முக்கியத்து வத்தையும் வலியுறுத்துவதைப்; பாருங்கள்.
பர்ளான வணக்கங்களும், இதர கடமைகளும்; விலைமதிக்க முடியாத நேரத்தை ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு சந்தர்பத்திலும் மனிதனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
உலகின் இயக்கம், அண்டஙகளின் சுழற்;சி,சூரிய சந்திரனின் ஓட்டங்கள், அதன் மூலம் இரவு பகல் மாறி மாறி ஓயாமல்; வந்து கொண்டிருப்பது ஆகிய அனைத்தும் கால ஓட்டத்தை உணர்த்தி மனிதன் சீராக இயங்கவேண்டு மென்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.
ஃபஜ்ருத் தொழுகை
ஒவ்வொரு நாளும் இரவுப் பொழுது மறைந்து அதிகாலைப் பொழுது மலர்ந்தும் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்ற பாங்கொலி முழக்கம் தூங்கிக் கொண்டிருப்போரை எழுப்பி விடுகிறது. உணர்வர்வற்ற மனிதனை உசுப்பி விடுகிறது. ‘மனிதா! இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய். தூங்கும் நேரம் முடிந்து விட்டது. எழுந்து செயலாற்றும் நேரம் வந்து விட்டது என முழங்குகிறது.
உலகெலாம ஒலிக்கும் அந்த முழக்கத்தை கேளுங்கள்.

حي علي الصلاة – حي علي الصلاة

அல்லாஹ்வைத் தொழ ஓடி வாருங்கள்!

حي علي الفلاح حي علي الفلاح

வெற்றியிச் சிகரத்தை நோக்கி பீடு நடை போட வாருங்கள்!

الصلاة خير من النوم

தூக்கத்தை விட தொழுகை மேலானது.
அப்பப்பா! எப்படிப்பட்ட வார்த்தைகள்! உயிரோட்ட முள்ள சொற்கள், எந்த மதமும் அழைக்காத ஒலி முழக்கங்கள். ஒரு நாளா இருநாட்களா? நாள் தோறும் முழக்கங்கள்! வரரந்தோறும் முழக்கங்கள்! மதந்தோறும் முழக்கங்கள!
ஆண்டு முழுவதும் சதா ஒலித்துக் கொண்டே  இருக்கிறது.  இதைக் கேட்ட பின்னருமா நம் மக்களுக்கு அதிகாலையில் தூக்கம் வருகிறது?
கல்லையும் கனியச் செய்யும் அந்த மந்திர வார்த்தைகளைக் கேட்டதும்  இறைவனை நினைந்துருகும் இதயங்கள் நன்றிப் பெருக்கால் அந்த அழைப்பிற்கு பதில் கூறிக் கொண்டே உளுச் செய்துவிட்டு தொழுகைக்கு விரைந்து வருகின்றனர். தாலாட்டும் சைத்தானின் மாய வலையில் விழாது ஓடோடி வரும் காட்சிகள் இறைவனைப் பரவசப்படுத்துகின்றன.
அது மட்டுமா இரவில் சீக்கிரமே தூங்கி அதிகாலையில் எழுந்திருப்போருக்கு இறைவனின் பேரருள் கிடைக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

اللهم بارك لامتي في بكورها (رواه أحمد، وحاكم

இறைவா! என் சமுதாய மக்களுக்கு அதிகலை வேளையில் அருள் பொழிவாயாக! (ஆதாரம்: அஹ்மத், ஹாக்கிம்)
லுஹர் தொழுகை
அடுத்து  பகல் வேளையிலே வேலையில் மழுமூச்சுடன் முனைப்பாக ஈடுபட்டிருக்கும் மனிதன்நோக்கி மீண்டும் அதே பாங்கோசைகள்!

الله أكبر الله أكبر

பணம் தேடும் ஆசையில் படைத்தோனை மறந்து விடாதே! ‘மனிதா! இதுவரை ஊக்கத்தோடு உழைப்பதற்கு வாய்ப்பளித்த வல்லோனை வணங்கிட மீண்டும் ஓடிவா! உணவளித்துக் காக்கும் வல்லானின் முன் நின்று உன் தேவைகளை முறையிட வா! மறுஉலக வெற்றியை நோக்கிவா! என்ற லுஹர் நேர அழைப்பு! இது இரண்டாவது அழைப்பு!
அஸ்ர் தொழுகை
வேலையிலிருந்து வீடு திரும்பியதும் ஓய்ந்து விடாதே! உடல் வலிமையோடு பகலெல்லாம் உழைப்பதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு மீண்டும் நன்றி செலுத்த (அஸர்) மாலை நேரத் தொழுகையை நோக்கி வா! இது மூன்றாவது அழைப்பொலி!
மஃரிப் தொழுகை
பகல் நேரம் முடிந்து இரவின் துவக்கம்! மஃரிப் என்னும் அந்தி நேரம் வந்து விட்டது. அமைதியைத் தரும் அந்த நேரத்திலும் அல்லாஹ் வின் அருட்கொடைகளை எண்ணிப் பார்ப்பதற்காக மீண்டும் நான்காவது அழைப்பொலி !
இஷாத் தொழுகை
இறுதியாக உறங்கச் செல்லு முன் இரவின் இருளிலும் இறைவனை மறவாது ‘பகற் பொழுதை வெற்றிகரமாக கழித்ததற்கு நன்றி செலுத்தும் முகமாக கடைசிநேர பாங்கோசை!’ இது ஐந்தாவது அழைப்பொலி! இறை நினைவிலே வாழும் அடியான் கடைசி நேரத் தொழுகையை தொழுது விட்டு உறங்கச் செல்லுகிறான்.
ஒரு நாள் பொழுதை, அதிகாலைத் தொழுகையோடு துவங்கி இரவுத்தொழுகையோடு முடிக்கும் மனிதன் நாள் முழுவதும் ஐவேளை இறைவனை மறக்காது நன்றிப் பெருக்கோடு துதிக்கிறான். ஒவ்வொரு வேளையும் அவன் முன் நின்று,
இறைவா உன்னையே நாங்கள் வணங்குகிறோம். நீயே ரப்புல் ஆலமீன்.அகிலத்தின் அதிபதி! நீயே மாலிக்கி யவ்முத்தீன்! நியாயத்தீர்ப்பு நாளின் பேரரசன்!

إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلّهِ رَبِّ الْعَالَمِينَ

இன்ன ஸலாத்தீ வநுஸ்கீ வமஹ்யாய வமமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன் ….(6:162) எனது வணக்கம், தியாகம்,வாழ்வு, மரணம் யாவும் உனக்காகவே உள்ளது என உறுதி மொழி எடுத்துக் கொண்டு அந்த நாயனுக்கு மாறு செய்ய  எப்படி மனம் துணியும்? பாவம் செய்ய எப்படி மனம் வரும்? விலை மதிக்கமுடியாத நேரங்களை வீணாக்குவதற்கு எப்படி அவன் மனம் துணிகிறது?
இறை உணர்வுகளோடு செயலாற்றும் அடியானின் பொன்னான நேரங்கள் நன்மையான காரியங்களில் பதிவு செய்யப்படுகின்றன். அவன் மனிதப் புனிதனாக வாழ்கிறான்.
ஜும்ஆத் தொழுகை
அடுத்து வாரந்தோறும் மக்கள் ஒன்று கூடும் சிறப்புத் தொழுகையான ஜும்மாத் தொழுகையை நிறைவேற்றுதற்கு வார அழைப்பு! பல சிறப்பு அம்சங்களோடு இத் தொழுகை நிறை வேற்றப்படுகிறது.இந்த நாளும் இறைவனின் பேரருளைப் பெறுவதற்கு ஒரு பென்னான வாய்ப்பை வழங்குகிறது. இதுவும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் மகத்தான பாக்கியமாகும்.
பர்ளான நபிலான வணக்கங்கள்.
இவை போதாதென்று இரவு வேளைகளில் தனித்திருந்து அமைதியாக இறைவனை வணங்கி வழிபட்டு,அவனோடு உரையாடவும் ஸலாத்துல்லைல் போன்ற இரவுத் தொழுகைகளை தொழுது அல்லாஹ்வின் நினைவுகளிலே தோய்ந்து அவனது அருளைப்; பெறும் மகத்தான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
இறைவனின் நல்லடியார்கள் அந்த பொன்னான வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை. இது குறித்து இறைவன், அருள் மறை குர்ஆனில்

وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّداً وَقِيَاماً

(அந்த நடுநிசி வேளைகளில்) இறைவனின் நல்லடியார்கள் நின்றவர்களாகவும், பணிந்து (ஸுஜூது) சிரம் தாழ்த்தியவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள் (25:64) எனக்கூறிச் சிறப்பிக்கிறான்.
இவை போன்று இரவிலும் பகலிலும் அல்லாஹ்வின் நல்டியார்கள் அல்லாஹ்வின் அருளைத்தேடுவதற்கு ளுஹா,தஹிய்யத்துல் மஸ்ஜித் போன்ற நஃபிலான பல வணக்கங்களும் உள்ளன.
இவையெல்லாம் மனிதனை புனிதனாக்கும் சிறப்பு வணக்கங்களாகும். மனிதன் எந்தச் சூழலிலும் அவனது பொன்னான நேரங்களை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே இஸ்லாம் ஒவ்வொரு சந்தர்பத்திலும் நேரத்தை பயனோடு செலவிடுவதற்கு அவனை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
புதுப்பிறையால் புத்தணர்வு.
மாதம் பிறந்து விட்டால் புதுப்பிறை தோன்றுகிறது.அப்போது ஒரு முஸ்லிம் மகிழ்ச்சிப் பெருக்கால் விண்ணை நோக்கி அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் கூறியவனாக அந்த பிறையை நோக்கி “அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று கூறி சந்திரனைப் படைத்து பல நிலைகளாக அமைத்து அதை அல்லாஹ்வின் அத்தாட்சியாக ஆக்கியமைத்ததற்காக நன்றி கூறி,

الله أكبر ألله أكبر الحمد لله الذي خلقك، وقدرك منازل ، وجعلك آية للعالمين . أللهم أهله علينا بالأمن والايمان
والسلآم والاسلآم والتوفيق بما تحب وترضي ، هلال خير ورشد ربي وربك الله

இறைவா! இந்த பிறை தோன்றிய இம்மாதத்தை ஈமானோடும், அமைதியோடும், இஸ்லாமிய நெறிகளோடும், இறைவன் விரும்பும் அருளோடும், நன்மை பயக்கும் நேர்வழியோடும் எங்களை வாழச் செய்வாயாக! என்னுடையவும், உன்னுடையவும் நாயன் அல்லாஹ் வாகும். என்று இறைவனிடம் பிரார்த்தித்து புத்துணர்வு பெறுகிறான். (திர்மிதி, அறிவிப்பவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)

5094 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم-

كَانَ إِذَا رَأَى الْهِلاَلَ قَالَ « هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ آمَنْتُ بِالَّذِى خَلَقَكَ ». ثَلاَثَ مَرَّاتٍ. ثُمَّ يَقُولُ « الْحَمْدُ لِلَّهِ الَّذِى ذَهَبَ بِشَهْرِ كَذَا وَجَاءَ بِشَهْرِ كَذَا

நன்மையை வழங்கி நேர்வழியைக் காட்டும் பிறையே! என்று மூன்று முறைகள் கூறிவிட்டு, உன்மைப்படைத்த நாயனை ஈமான் கொண்டேன் என்று சொல்லியவர்களாக சென்ற மாதத்தை போக்கி (அந்த மாதத்தைக் குறிப்பிட்டு) புது மாதத்தை வழங்கிய நாயனுக்கே புகழ் யாவும் என்று கூறுவார்கள்.(ஸுனனு அபூ தாவூது)
ஒரு மாதம் பிறந்ததும் அதை எவ்வாறு வரவேற்றுச் சிறப்பிக்க வேண்டும், எவ்வாறு செயல்படவேண்டும் என்பதைக் கற்றுத் தரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான்.
ரமளானின் வருகை
ஆண்டு தோறும் ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன.; ஷைத்தன்கள் விலங்கிடப்படுகின்றனர்.
அப்போது இறைவனின் அமரர்கள் கீழ்வானத்திற்கு இறங்கி வந்து

يا باغي الخير أقبل ! وياباغي الشر أقصر

நன்மை தேடுவோரே! முன்னோக்கி வா ! தீமையைத் தேடுவோரே! பின்னோக்கிச் செல்!. என்று கூறி நம்மை புத்தார்வத்தோடும் எழுச்சியோடும் இயங்கவேண்டும் என வாழ்த்துவார்கள்.
(அக்பில் : முன்னோக்கு.அக்ஸிர்: (அத்பிர்)- பின்னோக்கு)
ஹஜ்ஜுடைய காலம்
அடுத்து ரமளான் முடிந்ததும் ஹஜ்ஜுடைய காலம் வருகிறது. உலகோர் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே உடையில் ஒரே குரலில் விண்ணதிர தல்பியா கூறியவர்களாக வந்து நிற்பார்கள்.

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். (2:197) என ஹஜ்ஜின் காலத்தைக் குறிப்பிட்டுவிட்டு அதில் கடைபிடிக்கவேண்டிய விதிகளையும் கூறிவிட்டு அதையடுத்து அல்லாஹ’ கூறுகிறான்:

وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى

நீங்கள் செய்யும் நன்மையான காரியங்கள் யாவற்றையும் அல்லாஹ் அறிகிறான். ஹஜ்ஜிலே நல்லமல்களை திரட்டிக் கொண்டு, கிடைத்தற்கரிய இந்த அரிய வாய்ப்பை மகத்தானதாக ஆக்கிக் கொள்ளுங்கள். (2:197)
இவ்வாறே ஆண்டு தோறும் ஏழை எளியவர்களுக்காக வழங்கும் ஸகாத் ஏழை வரியையும் முறையாக வினியோகிக்க வல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
அறிஞர் பெருமக்களில் சிலர் இந்த வணக்கங்களின் தத்துவத்தைக் குறிப்பிடும் போது
1. ஐவேளைத் தொழுகையை   ஒருநாள் திட்டம்   ميزان اليوم
(One day Programe) என்றும்

2. ஜும்ஆ தொழுகையை ميزان الأسبوع ஒரு வாரத்திட்டம் (One week Programe ) என்றும
3. ரமளான் மாதத்தையும், ஸகாத் கடமையையும்
ميزان العام ஓராண்டுத் திட்டம் ( One year Programe) என்றும்,
4. ஹஜ்ஜுக் கடமையை ميزان العمر ஆயுள் திட்டம் ( Life Programe) என்றும்வகைப்படுத்தி இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
ஒரு நாள் வணக்கம் என்றும்
வாராந்தோறும் நிறைவேற்றும் வணக்கம் என்றும்
ஆண்டிற்கொரு முறை நிறைவேற்றும் வணக்கம் என்றும்,
ஆயுளிலே ஒரு முறை நிறைவேற்றும் வணக்கம் என்றும்,
இவ்வாறாக அல்லாஹ்வுக்காக திட்டமிட்டு அதற்குரிய காலங்களில் நிறைவேற்ற வேண்டிய வணக்கங்கள் உள்ளன.அதை ஏனோ தானோ என்றில்லாமல் இது தான் நமது கடைசி வணக்கமாக இருக்கும் என்ற உணர்வோடு செயலாற்ற வேண்டும் என்பதை மனித சமுதாயத்திற்கு எவ்வாறெல்லாம் இஸ்லாம் உணர்த்துகிறது பார்த்தீர்களா? இவ்வாறு மனித குலம் மாண்பு பெறவேண்டுமென அல்லாஹ் மகத்தான பல சந்தர்பங்களையும் நேரங்களையும் நமக்குத்தந்து ஊக்குவிக்கிறான்.
பொருள் பொதிந்த வணக்கங்கள்! இறையருளையும் சுவர்க்கத்தையும்
பெற்றுத்தரும் அரிய இபாதத்துகள்! வாய்ப்புகள்!! இதனை கண் இமை போல் பேணிக் காத்து வாருங்கள்.
தொடரும்…..

Source : http://albaqavi.com/home/?p=877பொன்னான நேரங்கள்-1


வீணாகும் காலங்கள்! from islamkalvi on Vimeo.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails