Saturday, July 31, 2010

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்.

 தனக்குத் தானே தவமிருக்கக் கட்டிக் கொண்ட கூட்டில் முட்டி மோதிக் கொண்டிருந்தது அந்த உயிர். மெல்ல மெல்ல, உறுதியாக தன் போராட்டத்தில் வழியும் கண்டது. அந்தக் கூட்டில் இப்போது சிறு திறப்பு (துளை) ஒன்று உருவானது. அந்தத் துளையின் வழியே அதன் இளஞ்சிறகுகள் வெளிப்படத் தொடங்கின. ஆம், இனியும் அது புழுவல்ல. எல்லோராலும் விரும்பப்படுகிற வண்ணத்துப் பூச்சி. வண்ணத்துப்பூச்சி விரும்பப்படுவதற்கு அதன் சிறகுகளல்லவா காரணமாக இருக்கின்றன.

சிறகுகள் வந்துவிட்டால் பறக்கலாம். உலகத்து மலர்களில் தேன் உண்ணலாம். பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவலாம். இதோ, முழுதாக வெளிப்பட இன்னும் சற்றுகாலம்தான். அதன்பின் அது, தன் உலாவால், இந்தப் பூங்காவையே அழகுபடுத்திவிடலாம்.

சிறகுகள் சுதந்திரத்தின் குறியீடல்லவா!

அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொண்டும், போராட்டத்தைக் கைவிட்டுவிடாமலும், அந்த உயிர் முயற்சி செய்துகொண்டே இருந்தது.

அப்போது தான் அந்த மனிதன் அதைப் பார்த்தான். அவனுக்கு மிகுந்த இரக்க மனம். "அடடா, இந்த வண்ணத்துப்பூச்சி வெளிப்படுவதற்கு இத்தனைப் போராட்டம் நடத்துகிறதா?" அவன் வியந்தான். உதவ முடிவெடுத்தான். ஒரு கத்தரிக்கோலை எடுத்துவந்தான்.

அந்த கூட்டின் திறப்பை நுனியில் கத்தரித்து, அந்தத் துளையை பெரிதாக்கினான். அவன் எண்ணியபடியே, அந்த வண்ணத்துப்பூச்சி எளிதாக, உடனடியாக வெளிவந்தது. ஆனால்... ஆனால் ... அதன் உடல் வீங்கியிருக்க... சிறகுகள் சுருங்கியே இருந்தன. முழுவளர்ச்சி அடைந்திருக்கவில்லை.

அவன் அந்த வண்ணத்துப்பூச்சியை கவனிக்கத் தொடங்கினான். இதோ, எந்தக் கணமும் அதன் சிறகுகள் விரிந்து அதன் அற்புதமான அந்தப் பறத்தல் நிகழும் என்று அவன் நம்பினான்.

அப்படி ஏதும் நடக்கவில்லை.அந்தப் பூச்சியால் பறக்கவே இயலாது போயிற்று. வீங்கிய உடம்புடனும் சுருங்கிய இறக்கைகளுடனும் அது ஊர்ந்தபடியே இருந்தது. இனி காலத்துக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்வதைப் போல அதன் ஊர்தல் இருந்தது.

உண்மையில், தவறு செய்தவன் அந்த மனிதன் தான். தன்னுடைய இரக்க உணர்ச்சியால் அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் பெறும் போராட்டத்தில் தடை ஏற்படுத்தினான். அறியாமல் செய்த பிழை.

உடம்பிலிருந்து பாயும் திரவமொன்று சிறகுகளை உந்த, சிறகுகள் மெல்ல வலிமை பெற்று, கூட்டினை முட்டித்தள்ள, அது வெளிவருவதற்கான போராட்டம் மட்டுமல்ல. இணைச் சிறகுகளை வரமாகவே வழங்கும் இயற்கைத் தவத்தின் வழிமுறை; முடிவும் கூட.


ஆம். சில நேரங்களில் நமது தேவை போராட்டங்களிலிருந்தே கிடைக்கிறது. எந்தச் சிரமமுமின்றி எல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால், அவை மதிப்பற்றுப் போய்விடாதா? போராட்டங்கள் அல்லவா வலிமையை சேர்க்கவும் நம்மை உணர்த்தவும் செய்கின்றன.

இறைவனிடம் வலிமையை வேண்டினேன்.
அவனோ, துன்பங்களைத் தந்தான். அதனால் வலிமை கிடைத்தது.

இறைவனிடம் அறிவைக் கேட்டேன்
அவனோ, பிரசினைகளையே அளித்தான். அவற்றை தீர்க்கத் தீர்க்க அறிவு மேம்பட்டது.

இறைவனிடம் செல்வச் செழிப்பைக் கேட்டேன்
அவனோ, திட்டமிடும் மூளையையும், உழைக்கும் கரங்களையும் கொடுத்தான். அவற்றைக் கொண்டே செழிப்பைப் பெற முடியும் என்பது புரிந்தது

இறைவனிடம் தைரியத்தைக் கேட்டேன்.
அவனோ, ஆபத்துகளைத் தந்தான், கடந்தால் கிடைப்பது தைரியம் அல்லவா

இறைவனிடம் அன்பைக் கேட்டேன்
சிரமப்படும் மனிதர்களைச் சுட்டினான். அவர்களுக்கு உதவிட, அன்பின் பொருள் புரிந்தது

"இறைவா! சலுகைகளைத் தா" என்று வினவினேன்.
பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை அளித்தான் அவன்.

நான் கேட்டது அப்படியே கிடைக்கவில்லை!
ஆனால், எனக்குத் தேவையான எல்லாமே கிடைத்தன.

இறைவனுக்கே எல்லாப் புகழும்

அவனே பெரும்பாக்கியம் உடையவன். மிக அழகான படைப்பாளன்.(அல்குர்ஆன் 23:14)

Source : http://ezuthovian.blogspot.com/2010/04/blog-post.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails