Thursday, July 1, 2010

தமிழகத்தில் பிளாட்டினப் படிமம் அதிக அளவில் கண்டுபிடிப்பு!

தங்கத்தைவிட அதிக விலையுள்ள பிளாட்டினம் எனப்படும் வெண்தங்கத்தின் படிமம் தமிழகத்தில் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் இவை மிக அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் ஆய்வு செய்யப்படுவதற்கான ஒப்பந்தம், முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் வியாழக் கிழமையன்று கையெழுத்தானது.

பிளாட்டினத்தால் தயாரிக்கப்படும் ஆபரணங்களை வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் விரும்பி அணிகிறார்கள். இது அவர்கள் மத்தியில் கவுரவ சின்னமாகவே கருதப்படுகிறது. இதுதவிர, மின்துறை பொருள்களை தயாரிக்கவும், பல் மருத்துவத்திலும் பிளாட்டினம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இது தமிழில், `வெண்தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நிலத்துக்கடியில் படிந்துள்ள `வெண்தங்கம்' எனப்படும் பிளாட்டினம் கனிமத்தை கண்டறிவதற்காக இந்திய புவியியல் ஆய்வுத்துறை, தமிழக கனிமத்துறையுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வின் பயனாக, மேட்டுப்பாளையம் முதல் நாமக்கல் வரை பல்வேறு பகுதிகளில் நிலத்துக்கு அடியில் பிளாட்டினம் படிமங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள பிளாட்டினம் கனிமங்களை வணிக நோக்குடன் ஆய்வு செய்யவும், அக்கனிமங்களை பயன்படுத்தி பல்வேறு தொழில்களைத் தொடங்கவும், மேலும் புதிய இடங்களில் கனிமங்கள் குறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளவும் தமிழ்நாடு கனிம நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வுத்துறையுடன் இணைந்து விரிவான அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள, நேற்று மாலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில் கோவை மேட்டுப்பாளையம் மற்றும் நாமக்கல் வரை பூமிக்கடியில் உள்ள பிளாட்டினம் படிமங்களை வெட்டியெடுப்பதற்கான சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் அவரது அறையில் நடைபெற்ற இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின் வெளியே வந்த மத்திய சுரங்கத்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர் மற்றும் இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் இயக்குனர் நாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2,3 ஆண்டுகளாக பிளாட்டினம் கனிமத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு, இந்திய புவியியல் துறை இப்பணியில் உதவி வருகிறது. இதில், நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியிலும், மேட்டுப்பாளையத்திலும் பிளாட்டினம் படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் மிக அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

சத்தம்பூண்டி பகுதியில் 27 சதுர கி.மீ. பரப்புக்கு பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் 5 சதுர கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது. ஆனால், இன்னும் 150 கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது.

தற்போது, 30 மீட்டர் ஆழம் மட்டுமே தோண்டியுள்ளோம். இன்னும் 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தோண்டும்போது மிக அதிக அளவில் பிளாட்டினம் கிடைக்கக்கூடும். உலகில் தற்போது, தென்னாப்பிரிக்காவில்தான் அதிக அளவில் பிளாட்டினம் வெட்டியெடுக்கப்படுகிறது. உலகில் கிடைக்கும் 100 சதவீத பிளாட்டினத்தில் 70 சதவீதம் தென்னாப்பிரிக்காவில்தான் கிடைக்கிறது.

இந்தியாவில் ஒரிசாவில் மட்டும் ஓரளவு பிளாட்டினம் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில்தான் முதல்முறையாக மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தையே சேரும். மத்திய அரசு, பிளாட்டினம் கண்டறிவதில் உதவி மட்டுமே அளிக்கும். பிளாட்டினம் இருக்கும் இடங்களில் கனிமத்தை வெட்டியெடுப்பதில் தனியாரை ஈடுபடுத்துவது, அதை விற்பனை செய்வது என அனைத்திலுமே தமிழக அரசுதான் முழுபங்கு வகிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இப்போது கிடையாது. இன்னும் அந்த அளவுக்கு பணிகள் செல்லவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.

மிகவும் விலை உயர்ந்த கனிமமான, பிளாட்டினம் தமிழகத்தில் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
Source : http://www.inneram.com/201007029127/evidence-of-huge-deposits-of-platinum-in-state

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails