Friday, May 28, 2010

20 ஆண்டுகளின் பின்னர் இன்று யாழ். பெரிய பள்ளியில் தொழுகை

யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசல் 20 வருடங்களுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் உத்தியோக பூர்கமாகத் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் முதலாவது ஜும்ஆப் பிரசங்கமும் இடம்பெறவுள்ளது.
ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை கொழும்பு பெரிய மர்க்கஸ், ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இப்னு உமர் ஹதீஸ் கற்கை நிலையத்தின் பணிப்பாளருமான மெளலவி எம். ஜே. அப்துல் காலிக் தேவ்பந்தி நிகழ்த்தவுள்ளார்.
காட்டுப்பள்ளி என அழைக்கப்படும் இந்தப் பள்ளிவாசல் 1713ல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பல்லவர் கால சிற்பத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 297 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் மிகப்பெரியதுமாகும்.
இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொழக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டுள்ள 46 உலமாக்களும் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று பெண்களு க்கான விசேட பயான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அஸர் தொழுகையைத் தொடர்ந்து உலமாக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இஸ்மாயில் மெளலவியால் விஷேட பிரார்த்தனையும் நடை பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மெளலவி அப்துல்லாஹ் பாயிஸ் தெரிவித்தார்.
முஸ்லிம் கல்லூரி வீதியில் அமையப்பட்டுள்ள இந்தப் பள்ளிவாசலுக்குட்பட்ட பகுதியில் முஸ்லிம்கள் மீண்டும் மீளக்குடியமர்ந்ததையடுத்தே பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒல்லாந்தர் காலத்தில் பெரியளவில் இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பிரதேசத்தில் செல்வந்தராக இருந்த முகம்மது தம்பி மரைக்காயரும், வண்ணார்பண்ணை வைத்தியலிங்க செட்டியார் என்பவரும் இணைந்தே இப்பள்ளியைக் கட்டியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : http://www.inneram.com/201005288555/20
20 ஆண்டுகளின் பின்னர் இன்று யாழ். பெரிய பள்ளியில் தொழுகை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails