Sunday, February 14, 2010

தொலைவில் ஒலிக்கும் பாடல்...





 அடைய முடியாத் தொலைவும் நீ
தீண்ட முடியா உறவும் நீ
தொலைவிலிருந்து கேட்கும் இனிய பாடலாக உனது
குரலினை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறேன்.

அசுப தேவதைகள் ஆர் சொல்லை ஆசிர்வதித்தனவோ...
சாபம் போலொரு துயரம் வாழ்வோடு சேர்ந்தது!
என் மீதிருந்த எல்லா உரிமைகளையும் விட்டு நீ
வெகுதூரம்...வெகுதூரம்...போனாய்!
மீட்சியில்லாத் துயரங்களின் முன்
நேசிப்புக்கு இடமில்லாமற்போனது!

அதீத புனைவுகளால் சித்திரிக்கப் பட்டுத்
தோற்றுப் போனது கடந்த காலம்
அனைத்தின் மீதும் கேள்வியெழுப்பி
வாழ விடாமற் செய்துள்ளது நிகழ்காலம்!

யார் யாராலோ விதிக்கப் பட்டதை எனக்கு
ஏற்று வாழும் படியாயிற்று
திணிக்கப் பட்டதை மறுத்ததால் உனக்குத்
தொலைதூரம் போகும் படியாயிற்று
உன்னுலகை விட்டு நானும்
என்னுலகை விட்டு நீயும் தூரமானோம்...
எமக்கிடையே தேச தேசாந்திரங்களும்
கடல்களும் காடு, மலைகளுமாய்...

எனது விதிரேகையும் ஆயுள் ரேகையும்
அனர்த்தங்கள் குறித்து ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்ததை
தாமதமாகவே அறிந்து கொண்டேன்.

மரணத்தின் தூதுவர்கள் அலைகின்ற
அதிவேகத் தெருக்களில் நீ சென்றுகொண்டிருந்தாலும்
சற்றே ஒதுங்கி நின்று
எனக்கொரு அழைப்புத் தருவாயா?
தங்க எங்கும் இடமற்று நீ வாழும் தேசம் வரை
நீண்டு நீண்டு வருகின்றன என் கனவுகள்!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails