Monday, February 1, 2010

எண்ணங்களின் பயணத்தில்......


எண்ணங்களின் பயணத்தில்..........


போவதும் வருவதும்
பொதுவாய் மரபு
ஆவதும் அழிவதும்
அன்றாட இயல்பு.

எண்ணங்களின் பயணத்தில்
இயங்குகின்ற மனது.
வண்ண வண்ண கனவுகளே
வாழ்க்கைக்கு விருந்து.

ஆசையில் வருவதெல்லாம்
அடுத்தவர் 'இடம்' தான்
ஓசையறும் சிந்தனையில்
உலகமும் மடம் தான்.

பிறப்பதும், பின்னொரு நாள்
இறப்பதும்; இடையிலே
சிறப்புகள் தேடித்தேடி
செல்வதுவும் பயணந்தான்.

எல்லாப் பக்கத்திலும்
இருக்கலாம் பாதைகள்
வல்லோன் வகுத்தாற்போல்
வாய்ப்பதுவே வழிப்பாதை.

வாய்த்ததொரு வாகனத்தில்
வழியெங்கும் கோரிக்கை
வாட்டமின்றி சென்றாலே
வாழ்க்கை கேளிக்கை.

கயிறுகளாய் பாசபந்தம்;
கட்டப்பட்ட கைகால்கள்.
வயிறுக்காய் நகர்ந்தாலும்
வாழ்நாள்கள் உயிர்பூக்கும்.

'நிலை'யில்லாக் காலம் தான்
நதியாகப் பாய்ந்து வரும்
விலையில்லா நேரத்தை
விதியென்று தள்ளாதீர்.

தாகத்தை அதிகரிக்கும்
தண்ணீரும் இதுவே தான்
ஏகதேச அறிவுரையோ
'எல்லாம் கடந்து போகும்'.

காற்றெங்கும் இறக்கைகள்
கைகளாய் பரிணமிக்கும்
ஆற்றலுள்ள மனிதருக்கு
அனைத்துமே பக்கந்தான்.

(தொடர்ந்து வலைப்பதிவில் இயங்க அன்புடன் கோரும் நண்பர் ரிஷானுக்கு(ம்) சிறப்பு நன்றி)


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails